னும் அவனுடைய இளமையும் அழகும், ஒளியுமாத்திரம் தூங்காமல் தம்மை நாடிவரும் ஜீவனுக்கு மற்றோர் ஜீவனை அளிக்கக் காத்திருந்தன. அவள் அவனைப் பார்த்தாள்; அவளுடைய கெண்டை விழிகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. இவள் இவ் வுலகை மறந்தாள். அவனது சிகை புறங்கழுத்தளவு கத்தரித்து விடப்பட்டிருந்தது. கதிர்விடும் விசால நெற்றியில் மேலேறிய கரும்புருவம் ஒளிவீசிக் கிடந்தது. அவனுடைய இரண்டு உதடுகளின் கடைக்கட்டில் ஜீவனை பின்னிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பும், மார்பிற்கிடந்து ஒளிசெய்யும் நவமணிப் பதக்கங்களும் உதயகிரியும் இளம்பரிதியுமாக விளங்கின. அவள் கண்களில் புதியதோர் ஒளி உண்டாயிற்று. அவள் முக மண்டலம் நிறைய ஆச்சரியம்! நெஞ்சில் காதல் பிரவாகம்! அவன் அழகு நிலவையும், கதிரையும், மின்னலையும் பொன்னையும் கொண்டு வல்லவன் ஆக்கிய சித்திரமோ என்று சந்தேகப்பட்டாள். அந்த ஆண்மையின் வடிவில் அறியப்படும் மற்றொரு வீரவடிவம், கேடயத்தோடு வைக்கப் பட்டிருக்கும் நீண்ட வாளாகும் என்று உவமித்தாள். அவள் தோற்றம் அவனை உயர்நிலையில் சேர்த்தது. கம்பனின் தமிழ்க் கவிதைபோல கண்ட மாத்திரத்தில் அளவற்ற இன்பத்தை உண்டாக்கும் அவளுடைய திரு உருவமானது, கேட்டமாத்திரத்தில் இன்பம் விளைக்கும் செந்தமிழ்க்குச் சமம். அவன் திடுக்கிட்டெழுந்தான்; அவள் திகைத்தாள். இருவர் பார்வையும், இருவர் மனமும் அமைதி பெற்றபின், அதிசயத்தோடு, ‘நீ யார்? தனி யாக’ என்று கேட்டான். |