பக்கம் எண் :

20ஏழைகள்

நாங்கள் நடந்தோம். மற்றும் வழியில், இடையிற் கோவணத்தோடு வெயிலின் களைப்போடு மூங்கில் வெட்டுவோரும், முழங்காலளவு வயற்சேற்றில் நீந்தியபடி ஏரடிப்போரும், தலை நட்டு முதுகைக் குனித்தபடி வரப்புத் திருத்துவோரும், ஏற்றம் இறைப்போரும், பாத்தி கட்டுவோரும் தங்கள் அபிலாஷை லக்ஷியம் அனைத்தையும் அரை வயிற்றுக்கூழிற் புதைத்து விட்டு மீதியுள்ள உடலால் ஒயாது உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கோரிடத்தில் ஆற்றுப்பாலம் கட்டிக் கொண்டு இருக்கும் கருமார், கொல்லூற்றுக்காரர், தச்சர் ஆகியோரின் உடலும், தோளும் பம்பரம்போல் ஆடிக் கொண்டிருந்தன. அக்காட்சியைக் கோவிந்தனிடம் காட்டி இந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்ட முதலாளிக்கு இந்த பாலம் கட்டி முடியும் வரை மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வருமானம் வருமென்று நினைக்கிறேன். இவ்வொப்பந்தத்தைத் தொழிலாளரே நேரே அடைந்திருந்தால் அவர்கட்குத் தினம் 1-க்குக் கூலி சராசரி 4 ரூபாய் கட்டக் கூடும். அந்த 4 ரூபாயில் 2 ரூபாயோ அவர்களுக்குப் போதும் என்று நினைத்தால் அவர்கள் தினம் 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானதாயிருக்கும். ஏதோ அசந்தர்ப்பத்தால் ஒருவனிடம் முதல் சிக்கி விட்டால் அதே காரணத்தால் பொதுமக்களிடம் ஏழ்மை உண்டாகி விடுகிறது. அதன்பிறகு முதலாளிக்கு முதல் வலுப்பது தவிரத் தொழிலாளிக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் இருக்க வழியில்லை. இதே ரிதீயில் இவ்வுலகம் நடைபெற்றால் உலகில் எதிர்கால நிலை, மக்களை உயிரொடு புதைக்கும் மயானமாகிவிடும் என்பதை நீர் ஆக்ஷேபிக்கிறீரா?

இதற்குப் பதிலாக என் நண்பர் அதோ பாரும் அத்தொழிலாளர்கள் சிட்டுக்குருவிகள்போல் உற்சாகமாக வேலை செய்கிறார்கள் என்று சொன்னார். நாங்கள் போய்ச் சேர வேண்டிய பங்களா இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்தது. என் நண்பர் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் ஏற்பட்டது.