பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்53

(‘ஆம்’ என்ற கூச்சல்)

மதக்குறிகள், கடவுள் சம்மதம் என்று நம்புகிறீர்களா?

(‘ஆம்’ என்ற கூச்சல்)

‘அப்படியிருக்கையில், நாமமிட்டவனுக்குப் பிறப்பவன் பிறக்கும்போதே நாமமிட்டுக் கொண்டுதானே பிறக்க வேண்டும்? உங்கள் ஞாயப்படி பார்த்தாலும், சுயமரியாதைப் பத்திரிக்கைகளின்படி பார்த்தாலும் நீங்கள் சொல்லும் குறிகள் அவ்வப்போது எழுதப்படுவன என்று அந்நிய நாட்டில் இருக்கும் ஒருவன் எப்படி நினைக்க முடியும்? மனிதர்களின் அங்கங்களிற் சிலவற்றிற்கும் நீங்கள் குறிகள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்! நெற்றியில் இடுகின்ற இவைகட்கும் குறிகள் என்று சொல்லுகிறீர்கள். இதனால் நெற்றிக் குறிகள் என்று நீங்கள் சொல்லுவதை, அயல் நாடுகளில் உள்ளவர்கள் நெற்றியில் பிறவியில் ஏற்பட்ட ஏதோ ஓர்வித அங்கம் என்றுதான் நினைக்க முடியும். நான் முட்டாள்தனமாய் நினைத்ததாய் நீங்கள் கடலிரைச்சல்போல் சிரிக்கின்றீர்கள்.

நான் நினைத்தது சரி! அல்லாமலும், நீங்கள் தினந்தோறும் நெற்றியில் இடப்படுவதுதான் குறி என்று சொல்லுவதை, நான் நம்பவுமில்லை. அது பிறவியிலேதான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன். நெற்றிக்குறியுடையவர்களை என் கண் எதிரில் காட்டுங்கள்! ”என்றார். உடனே புதுவை ஒற்றைத்தெரு மாணிக்கம் கண்ணனையும் முத்தால்பேட்டை முருகேச முதலியாரையும் டாக்டர் எதிரிற் கொண்டுபோய் நிறுத்தினார்கள். உடனே அவ்விருவருடைய நெற்றிக்குறிகளையும், டாக்டர் நன்றாய்க் கவனித்தார்.

டாக்டர் :

நண்பர்களே, இக்குறிகள் இவர்களால் ஏற்பட்டவை அல்ல என்றுதான் தோன்றுகிறது.

(அனைவரும் சிரித்து, ‘பின்னென்ன?’ என்று கேட்டனர்)