தரவு கொடுத்ததாக எண்ணித் திருப்பதிக்குப் பிரயாணம் வைப்பார்கள். பூவாடைக்காரி கனவில் பிரத்யக்ஷம். இருட்டில் பேய்கள் முனீஸ்வரர்கள் எங்கள் பெண்கள் கண்களுக்கு மாத்திரம் தெரியும்படி நாய் போலவும், பன்றி போலவும் ஓடுவதுண்டு. ஒருவர் சாகுமுன் செத்துப் போவதற்கான அடையாளங்கள் எங்கள் பெண்களுக்குத் தெரியும். இதை அவர்கள் சாக வேண்டியவர்கள் செத்துப்போன பின்புதான் சொல்லுவார்கள். சிங்கப்பூரிலிருக்கும் நாயகனுக்கு நடுவீட்டுப் படத்திலுள்ள சுப்பிரமணியரைப் பக்கத் துணையாயிருக்கும்படி கட்டளையிடுவார்கள். உடனே அந்தச் சுப்பிரமணியர் தமது சொந்தச் செலவில் கப்பலேறிப்போய் இந்தப் பெண்ணின் நாயகனுக்குப் பக்கத் துணையாய் உட்கார்ந்து கொள்ளுவார். நாயகன் வருவதையோ விருந்தாளி வருவதையோ எங்கள் பெண்களிடம் முன்னதாகவே காக்கையும் பல்லியும் சொல்லிவிடும். வரவேண்டியவர் வந்தபின் பெண்கள் தங்களிடம் காகமும் பல்லியும் சொன்னதாகச் சொல்லுவார்கள். பிள்ளைகளை வளர்ப்பதிலோ, தம்மைக் காத்துக் கொள்வதிலோ சொந்த முயற்சியும் சொந்த அறிவும் பயனில்லையென்று கருதிக் கடவுள் தலையில் பாரத்தைப் போட்டுவிடுவார்கள். எங்கள் பெண்கள் கேள்வி ஞானம் மிகவும் உடையவர்கள். சொந்தப் படிப்பு இல்லாவிட்டாலும் யாரையாவது கூப்பிட்டு அல்லி அரசாணி மாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை முதலிய அறிவுப் புதையல் நூற்களை வாசிக்கச் சொல்லிக் கிஷ்கிந்தை வாசிகள்போல கும்பலாய்க் கூடிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எங்கள் பெண்கள் நாகரீகமான உடையுடுத்துவார்கள். பட்டுச் சேலையாயிருந்துவிட்டால் 18 முழத்தோடு 36 முழமாக இருந்தாலும் சுமக்கத் தயார். உரலா |