நர்சரியில் படிக்கும் என் மகளும் கல்லூரியில் வேலை பார்க்கும் நானும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தோம். ‘அப்பா இந்த வாரம் எங்களுக்கு ‘இரண்டு ஞாயிற்றுக் கிழமை’ என்று விடுகதை போட்டாள் என் மகள். “வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி... அதையும் சேர்த்துச் சொல்கிறாயா?” என்றேன். ஆமாம்... உங்களுக்கு.... “I don’t know, my daughter” என்று பிளிட்ஸ் அப்பா மாதிரி பதில் சென்னேன். விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல, வேறு யார் யார் சதுர்த்திகளையோ காட்டி விடுமுறை பெறும் ஆற்றல் கல்லூரி மாணவர்களுக்குக் கைவந்த கலை. மணலைக் கயிறாய் திரிக்க முடியாமற் போகலாம், வானத்தை வில்லாய் வளைக்க முடியாமற் போகலாம். ஆனால் நம் மாணவர்கள் நினைத்தால் ஏழு நாட்களையுமே ஞாயிற்றுக் கிழமை ஆக்கமுடியும். ஒருமுறை ‘படிப்பு நிறுத்தம்’ செய்து கல்லூரி வாசலில் திரண்டிருந்த மாணவர் கூட்டத்திடையே ஒரு மாணவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். “இன்று புனித நாள்.... புண்ணியம் தேடும் நாள்... இராமேஸ்வரம் போகவேண்டும். தீர்த்தம் ஆடவேண்டும். தெரிந்தும் விடுமுறை தர மறுக்கிறார் இந்த முதல்வர். மாணவர்களே! போனால் போகிறது என்று விட்டுவிட இன்று சாதாரண அமாவாசையா? தை அமாவாசை...! நாம் ஒன்று படுவோம்... அமாவாசைக்கு விடுமுறை விடும்வரை போராடுவோம்” என்று முழங்கினார். பக்கத்தில் இருந்த என்னிடம் ‘அந்தப் பையன் யார் ஸார்’ என்று கேட்டார் முதல்வர். முதலாண்டு மாணவர்... பெயர் அப்துல்காதர் என்றேன். முதல்வருக்கு ஆச்சரியம்... அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’ |