பக்கம் எண் :

42சோழமண்டல சதகம்

திறையின் முறைகொணர்ந்து தென்வேந்தர் எல்லாம்
மிறையும் உறைகழிக்க ஒண்ணார் - அறைகழற்கால்
போர்வேந்தர் போய்மடியப் போர்வாள் உறைவிடுத்த
தேர்வேந்தன் தஞ்சைத் தெரு

என்பது பொய்யா மொழியார் பாடலாகும்.

சீநக்கர் புளியஞ்சோறு

பொய்யா மொழியார் பசிதீரப்
          புளியஞ் சோறு புகழ்ந்தளித்த
செய்யார் அரசூர் சீநக்கர்
          செய்தது எவரும் செய்தாரோ
கையார் உதவி பொறையுடைமை
          காணி யாளர் கடன்அன்றோ
மையார் புவியின் முதன்மைபெற்ற
          மரபோர் சோழ மண்டலமே
57

அரசூர்த் தலைவன் சீநக்கன் பொய்யாமொழியாருக்குப் புளியஞ்சோறு அளித்து உபசரித்தான். அதனைப் புகழ்ந்து பொய்யாமொழியார்,

அளிகொ ளுந்தொடை யான்அர சைக்குமன்
ஒளிகொள் சீநக்கன் இன்றுஉவந் திட்டசீர்ப்
புளியஞ் சோறும்என் புந்தியில் செந்தமிழ்
தெளியும் போதெலாம் தித்தியா நிற்குமே

என்று பாடினார்.

பொய்யாமொழியார் வேற்றிடம் சென்றிந்தபோது சீநக்கன் இறந்து விட்டான். செய்தி கேட்டு ஓடோடி வந்த பொய்யாமொழியார் சீநக்கனுடன் தானும் தீப்பாய்ந்து இறக்க முற்பட்டார். ஊரார் தடுத்து சீநக்கன் ஏற்றுக் கொண்டால் தீப்பாயலாம் என்றனர். பொய்யாமொழியார்.

அன்றுநீ செல்லக் கிடஎன்றாய் ஆருயிர்விட்டு
இன்றுநீ வானுலகம் ஏறினாய் - நன்றுநன்று
வானக்க பூண்மடவார் மாரனே கண்டியூர்ச்
சீநக்கா செல்லக் கிட

என்று பாடினார். இறந்த சீநக்கன் உடல் இடம் கொடுக்க பொய்யா மொழியாரும் தீப்பாய்ந்தார் என்பர்.