பக்கம் எண் :

44சோழமண்டல சதகம்

நாட்டுடைத்து நல்ல தமிழ்

என்று ஒளவையார் பாடினார். அம்பர் பெரியோர் பலர் வாழ்வது. குறையாமல் சோறு அளிப்பது. வல்லம் பெரியோர் அவையுடையது என்பது சோழநாட்டுச் சிறப்பாகும். ‘உய்யக்கொண்டான் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர்’ என்பது கல்வெட்டுத் தொடர் (ஆண்டறிக்கை 73 ஆண்டு 1928)

திவாகர நிகண்டில் இவன்

ஒளவை பாடிய அம்பற் கிழவோன்

என்று குறிக்கப் பெறுகிறான். இவனது இயற்பெயர் அருவந்தை என்பதாகும். புறநானூறு 385 ஆம் பாடலில் கல்லாடனாரால் பாடப்பட்ட அம்பர்கிழான் அருவந்தை இவனே என்பார். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற அம்பர் பெருந்திருக்கோயில், அம்பர் மாகாளம் இவ்வூராக இருக்கலாம்.

கடுவாய்க்கரைப் புத்தூர்

வித்தூர் ஆவி விடுத்தாலும்
          மேலோர் கருமம் விடுப்பாரோ
கத்தூர் தரங்கம் இரங்குபுனல்
          கறங்கூர் கடுவாய்க் கரைநீடு
புத்தூர் அமர்ந்த வேளாளர்
          புரிகோ புரமும் பொன்மதிலும்
வைத்தார் நந்தி காட்டியது
          வளம்சேர் சோழ மண்டலமே
60

சோழியர் எத்துன்பம் வந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவர். புனல் அலைபாயும் ஊராகிய கடுவாய்க்கரைப் புத்தூரில் சிவாலயத்துக்குக் கோபுரத்தையும் மதிலையும் அவ்வூர் வேளாளர் அமைத்தனர். அது நந்தியெம் பெருமானால் விளக்கப்பட்டது. இறைவன் சொர்னபுரீசுவரர்; இறைவி சொர்னபுரிநாயகி. கடுவாய் என்னும் ஆறு இப்போது குடமுருட்டி என வழங்கப்படுகிறது. காசிப முனிவர் வழிபட்ட ஊர். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம். இப்போது ஆண்டாள் கோயில் என வழங்கப்படுகிறது.

வாய் என்பது ஆற்றின் பெயர். கடுவாய் என்பது குடமுருட்டி ஆற்றின் பழம்பெயர். வெட்டாறுக்கு முள்ளிவாய் என்று பெயர். இவ்வூர் குடவாயிலுக்கும் வலங்கைமானுக்கும் இடையில் உள்ளது. கொங்குநாட்டுப் பேரூர் காஞ்சிவாய்ப் பேரூர் எனப்பட்டது.