32. காவலாய் விழித்தே நீவிர் கனிந்துமே வேண்டல் செய்வீர் மேவுசோ தனைக்குள் நீவிர் வீழ்ந்துமே போகா வண்ணம் ஆவிக் குண்டுற் சாகம் ஆயினும் மாம்சந் தானே பாவமே யிழந்தே சக்தி மாபல வீனம் என்றார். 33. இப்படிச் சொல்லிப் பின்னு மிங்கிருந் தங்கே சென்றே இப்பாத் ரத்தை யேந்திப் பானமே செய்யா தல்லால் இப்பாத் ரம்நீங் காதே யென்பதுஞ் சித்தம் என்றால் அப்பா உந்தஞ் சித்தம் ஆகவென் றாரே நாதன். 34. வந்தார் சீடர் பக்கம் வரஅவ ணுறங்கக் கண்டார் மந்தமே யுற்றே தூக்க மயக்கமா யிருந்தா ரஃதால் எந்தமா றுத்தா ரந்தாம் இசைப்பதென் றறியா ரீவர் வந்தவர் மாறிப் போயே மறுதரம் வேண்டல் செய்தார். 35. அந்தவோர் வார்த்தை யேதான் அவர்மறு தரமுஞ் சொல்லி நொந்துளம் மனமும் ரண்டும் நொறுங்கியே ஜெபித்தா ரன்றோ வந்தனர் சீடர் பக்கம் வகையொடு மிசைத்தா ரீதே இந்தோ நித்ரை செய்மின் இளைப்பா றுவீரே நன்றாய். 36. வந்ததே வேளை யீதோ மனுமகன் வேளை தானே வந்ததே தீயோ ரண்டை மைந்தனை யொப்பிக் கத்தான் வந்தன னீதோ என்னைக் காட்டுவோன் வகையாய்த் தானே இந்தவி டத்தை நீங்கி யேகுவோ மெழும்பும் என்றார். 159.யூதாஸ் காட்டிக் கொடுத்தல். மத். 26 : 47 - 56; மாற். 14 : 43 - 52; லூக். 22 : 47 - 54; யோ. 18 : 2 - 12. 37. ஈதிவர் சொல்லும் போதே யிங்கெதி ரேவந் தானே பாதக னாம்யூ தாஸே பன்னிரு பேர்க்குள் ளோர்வன் மாதுரோ கஞ்செய் தற்காய் வந்தனன் கூட்டத் தோடே பாதகர் வீரர் வந்தார் வாள்தடி பந்தங் கொண்டே. 38. எவனையான் முத்தஞ் செய்வேன் இனமவன் என்றே கொள்வீர் அவனைநீர் பிடித்துக் கட்டி யவசர மாய்க்கொண் டேபோம் அவனுமை மயக்கித் தானே யகன்றுமே போகா வண்ணம் எவனுமெச் சரிப்பே யாக எனுங்குறி சொன்னோன் தானே. |