பக்கம் எண் :

(8) சைவர் மேலிடச் சமணர் கீழிடச்
     சகல சமயமும் ஏற்கவே
  கைவ லாழியங் கருணை மாலொடு
     கமலத் தோன்புடை காக்கவே
  ஐவர் நாயகன் வந்த னன்பல
     அமரர் நாயகன் வந்தனன்
  தெய்வ நாயகன் வந்த னன்னெனச்
     சின்னம் எடுத்தெடுத் தார்க்கவே.   (பவனி)

(9)

சேனைப் பெருக்கமும் தானைப் பெருக்கமும்
     தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும்
  ஆனைப் பெருக்கமும் குதிரைப் பெருக்கமும்
     அவனி முழுதினும் நெருங்கவே
  மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி
     மூடி அடங்கலும் ஓடி இருண்டபின்
  ஏனைச் சுடர்விரி இடப கேதனம்
     எழுந்து திசைதிசை விளங்கவே.   (பவனி)

(10)

கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர்
     குரவை பரவையை நெருக்கவே
  ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள்
     உலகம் ஏழையும் உருக்கவே
  மத்த ளம்புயல் போல்மு ழங்கிட
     மயில னார்நடம் பெருக்கவே
  சத்தி பயிரவி கௌரி குழல்மொழித்
     தைய லாளிடம் இருக்கவே.       (பவனி)

(பொ-ரை)

திருக்குற்றாலநாதர் உலா வந்தார்; இளமை பொருந்திய எருதின் மேலெழுந்தருளி உலா வந்தார்.

உலக மக்கள் யாவரும் வணங்குகின்ற குறும்பலாமரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற சத்துவகுணத்தலைவரும், என்றும் இளைஞரும், தம் இயற்கைத் திருவுருவோடு திருமால் நான்முகன் ஆகிய கடவுளர் திருவுருக்கொண்டவருமாகிய திருக்குற்றாலத்திறைவர், விரைந்து செல்கின்ற பெரிய எருதின்மேல் எழுந்தருளி (உலா வந்தார்.)

தேவர்கள் கூட்டமும் முனிவர்கள் கூட்டமும் அரக்கர்கள் கூட்டமும் மக்களாகிய அடியவர்கள் கூட்டமும் அளவற்ற கூட்டத்தினரென்னும்படி சுற்றிக்கொண்டு தனித்தனிக் கூட்டங்களாக ஒன்றுபடவும், தொன்றுதொட்ட மக்களினத்தார் இவர்கள், தேவர்கள் இவர்கள் என்று தனித்தனியாகப் பிரித்து நிறுத்திய வேளைகளிலெல்லாம் கட்டுக்கு அடங்காது முனைந்து செல்லும் அரசங்களையெல்லாம் அவர்களின் முடிவரிசைகளில் நந்திதேவரின் பிரம்பினது அடிபடும்படி (உலாவந்தார்.)

அடியார்களுக்குத் துன்பம் வாராமல் தடைசெய்வது ஒருகை; யாவர்கட்கும் அருள்வழங்குவது ஒருகை; தாம் கொண்ட ஒளி பொருந்திய மழுப்படையை மேலே கொண்டது ஒருகை; ஏற்றுக் கொண்ட சிறிய மானைத் தாங்கிக் கொண்டிருப்பது ஒருகை; ஆகிய நான்கு கைகளும் விளங்கவும், பாம்பணி இலங்கவும், தம்மிடம் வந்த பெரிய புலி தந்த ஆடையும் யானை தந்தமேற் போர்வையாகிய ஆடையும், தரித்த அழகிய இடைதுவளவும், தாமரைப்பூவில் இருக்கின்ற நான்முகன் தந்த தலையோடாகிய உண்கலம் பொருந்தியிருக்கவும் (உலாவந்தார்.)



(வி-ரை)

இறைவன் எல்லாவுயிர்கட்கும் அருள் செய்வானாகலான் ‘தடுப்ப.....தொருகரம்’......என்றார். வட மொழியாளார் தடுக்குங் கையை அபயகரமெனவும் கொடுக்குங் கையை வரதகரமெனவும் வழங்குவர். தாருகாவனத்து முனிவர்களின் செருக்கடங்க இறைவன் அவர்தம் மனைவியர் மனநிலை மாறச்செய்தகாலை, இறைவனைக் கொல்ல மழுமான், புலி, யானை இவற்றை விடுத்தபோது இறைவன் மழுவையும் மானையும் தம்கைகளில் தாங்கிக்கொண்டு புலியையும் யானையையும் கொன்று அவற்றின் தோலை ஆடையாக உடுத்துக் கொண்டார் என்பது, கந்தபுராணம் ததீசி உத்தரப்படலத்திற் கூறும் வரலாறு. நான்முகன் தலையைக்கிள்ளி அதை உழிக்காலத்தில் உண்கலமாகக் கொண்டாரென்பது புராணங்கள் கூறுவனவாகும். இவற்றை உள்ளீடாகக்கொண்டு, இலக்கணை வழக்காக அவற்றையும் நான்முகன் தந்தனவாகக் கூறினார்.

 

(பொ-ரை) தம்மை விடாது தொடர்ந்து வருந்தன்மையை யுடைய பெருச்சாளியூர்தியில் எழுந்தருளிவரும் பிள்ளையார்ப் பெருமான் வெற்றிப்படையைத் தாங்கிவரவும், வளமை பொருந்திய மியிலூர்தித்தலைவனாகிய முருகப்பெருமான் தம் வெற்படையை வலக்கையில் கொண்டுவரவும், அகன்ற மார்பினிடத்தே கொன்றை மாலையுடன் மணிப்பதக்கமும் ஒளி வீசவும், எல்லாச் செல்வமும் ஒருங்கேயுடைவராகிய குற்றாலநாதரின் உலா வருகையை அறிந்து உலக உயிர்கள் யாவும் செழித்து மேன்மை பெறவும் (உலா வந்தார்.)



(வி-ரை)

தோன்றல்-பிள்ளையார். தோகை-மயில். இறைவன்உலா வருங்கால் தம்முன்னும் பின்னும் பிள்ளையாரும் முருகப்பெருமானும் தம்தம் படைகளைத் தாங்கிக்கொண்டுபோது காவலாக வந்தார் என்றபடி. படலை-விரிவு. மணிப்பதக்கம் என்று கூட்டுக. உலகம்-மக்கள் முதலிய பல்லுயிர்கள்: இடவாகுபெயர்.

 

(பொ-ரை) இடிமுழக்கதோடு செல்கின்ற மேகமென்னும்படி யாமைமேல்வைத்து அடிக்கப்பெறுகின்ற பெரிய பேரிகையின் முழக்கமும் உடுக்கையின் முழக்கமும் மிகுதலால் எட்டுத்திசை யானைகளும் தம் தும்பிக்கைகளினால் (அவ்வொலி கேட்டஞ்சித்தம்) காதுகளை மூடிக்கொள்ளவும், தொண்டர்கள் வாழ்த்துக் கூறிய திருப்பல்லாண்டிசையின் பேரொலியானது அடைபட்ட காதுகளையும் திறக்கச் செய்யவும், சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய நாயன்மார் மூவர்களும் வடித்துக் கொடுத்த தமிழ்மறைகளாகிய தேவாரப்பதிகங்கள் ஒருபாலும் வேதங்கள் ஒருபாலுமாக நெடுகத் தொடர்ந்து பாடிவரவும் (உலா வந்தார்)