பக்கம் எண் :


(வி-ரை)


முகில்-மேகம், துடி-இடை, சுருங்குபறை ; அஃதாவது உடுக்கை இங்கேகுறிப்பது பேருடுக்கையை. இதனைச் சிலபகுதிகளில்’லவண்டை’ என வழங்குவர். இவற்றின் பெரு முழக்கம் எட்டுத்திசைகளிலும் போய்முட்டுதலால் திசைகளைத் தாங்கும் யானைகளும் கூட இப்போரோசை கேட்டு அச்சங்கொண்டு தம் துதிக்கைகளினால் தம் காதுகளைப் பொத்திக் கொண்டு நின்றன என்பது, முழக்கத்தின் மிகுதிச்சிறப்புக் கூறியவாறாம். அடைத்த செவி-இம்முழக்கங்களால் வேற்றோலி கேளாது மூடியிருந்த காதுகள்

(பொ-ரை) பொன்னாற் செய்ததம்புரு என்னும் வாத்தியமும் கின்னரம் என்னும் வீணையும் மகிழ்ச்சியோடு கூடிய விருப்பத்தைக் தருகின்ற யாழும் ஒலிசெய்யவும், மிகுதியான அழகுள்ள முத்துப்பல்லக்குகளும், குடைகளும், பொன்னாற் செய்த ஆலவட்டங்களும் நிழலைத் தந்துவரவும், இளமங்கையர் பல்வகையான சிறு விசிறி வெண்சாமரை முதலியவற்றை முறைப்படிவீசிக்கொண்டு வரவும் குபேரன், இந்திரன்,வருணன் முதலிய தேவர்கள் எல்லோரும் புகழ் பாடிக்கொண்டு வரவும் (உலா வந்தார்.)



(வி-ரை)

கனகம்-பொன். தம்புரு,கின்னரம்,வீணை என்பன யாழின் வெவ்வேறு வகைகள். அனகம்-அநேகம் என்பதன் திரிபு. கவிகை-குடை; ஆலவட்டம்-ஒருவகைக் குடை. குஞ்சம்-குஞ்சங் கட்டிய சிறு விசிறி; ஆகுபெயர் வரிசை-முறைப்படியென்னும் பொருளது. தனதன்-குபேரன்.

(பொ-ரை) சைவசமயத்தார் மேம்படவும், சமண சமயத்தார் தாழ்வு பெறவும், எல்லாவகைச் சமயத்தார்களும் சிறப்பாக வரவேற்கவும் தம்கையிடத்தே வலியசக்கரப்படை தாங்கிய அருளாளரான திருமாலுடன் செந்தாமரை மலரில் வாழ்வோனான நான்முகனும் பக்கத்தே காவல் தொழில் புரிந்து வரவும்,பிரமன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் ஆகிய ஐம்பெரும் கடவுளர்க்கும் முதல்வன் வந்தான்; பல தேவர்கட்கெல்லாம் தலைவன் வந்தான்; ஏனைய தெய்வங்களுக்கெல்லாம் இறைவன் வந்தான் என்று விளக்கங்கூறித் திருச்சின்னங்கள் முழங்கவும் (உலா வந்தார்.)



(வி-ரை)

ஆழி-சக்கரைப்படை, கமலத்தோன்-தாமரை மலரில் இருப்போன்; இங்கே நான்முகன் புடை-பக்கம். அமரர்-தேவர். சின்னம்-பலவகை இசைக்கருவி.

(பொ-ரை) படை (ஆயுத)ப் பெருக்கமும் படைவீரர்கள் பெருக்கமும் தேரின் பெருக்கமும் கொடிப் படைகளின் பெருக்கமும் யானைப் பெருக்கமும் குதிரைப் பெருக்கமும் எங்கும் நெருக்கங் கொண்டு வரவும், முதன்மையான திருமால்நான்முகனுக்குரிய கருடக்கொடி அன்னக் கொடிகளின் கூட்டம் நீண்ட வானவெளி முழுதும் போய் மூடி இருள் மிகுந்தபின் மற்ற ஒளி விரிந்த எருதுக்கொடி மேலோங்கி எட்டுத்திக்குகளிலும் விளக்கம் பெறவும் (உலாவந்தார்.)



(வி-ரை)

சேனை-ஈண்டு ஆயுதம், தானை: படைவீரர்-தார்-கொடி தாங்கிச் செல்லும்படை, அவனி: இங்கே குற்றால நகரத்தைக் குறித்தது: மோனை: முதன்மை என்னும் சொல்லின் திரிபு. காடு-கூட்டம் மிகுதி. முதன்மையாவது சிறப்பு. இறைவன் உலாவருங்கால் உலாவில் கருடக்கொடிகளும் அன்னக் கொடிகளும் மிக நெருங்கி வந்ததனால் வானிடமெங்கும் ஞாயிற்றின் ஒளியை மறைத்து இருட்டாகியது. அவ்விருளைப் போக்கி மேலெழுந்து ஒளிதந்தது இறைவன் விடைக்கொடி. இடபம் விடை; எருது. கேதனம்-கொடி.

(பொ-ரை) கொத்தாகவுள்ள மலர்களையணிந்த கூந்தலையுடைய தேவருலக மங்கையர்கள் ஆடுகின்ற குரவைக் கூத்தின் பேரொலி கடலின் பேரலை ஒசையை அடக்கவும், தம்முள் ஒத்தனவாகிய அழகிய காதுகளில் வாழுகின்ற கனக, கம்பளர் என்னும் பெயருடைய கந்தர்வர் இருவரும் பாடுகின்ற இசைப் பாடல்களின் இனிமையானது ஏழுலகத்திலுள்ள யாவரையும் உருக்கங் கொள்ளச் செய்யவும், மத்தளம் அடிக்கின்ற பெருமுழக்கம் மேகத்தின் இடிமுழக்கம் போல் முழங்க மயில் போல் சாயலையுடைய இளமங்கையர் நாட்டியம் ஆடவும், சத்திபயிரவி கௌரியென்னும் திருப்பெயர்களையுடைய குழல்வாய் மொழியம்மை இடப்பக்கத்தில் எழுந்தருளியிருக்கவும் (உலா வந்தார்.)



(வி-ரை)

கொத்து-பூக்களின் சேர்க்கை; திரள். குரவை-பெண்கள் இருவர் முதல் பலர் சேர்ந்து கைகோத்தாடும் ஒரு வகைக்கூத்து; அன்றி நாவசைத்துப் பெண்கள் மகிழ்வுக்கு அறிகுறியாக முழக்கும் ஒருவகை இனிய ஒலியென்றலுமாம். இதனை இக்காலத்துக் குலவை எனவழங்குவர். திருச்செவி இருவர் என்பவர், கனக கம்பளர் என்னும் இருகந்தருவர்கள். இவர்கள் இறைவன்பால் அவர்தம் இருகாதுத்தோடுகளிலுமிருந்து கொண்டு பாட வேண்டினரென்றும் அவ்வாறே இறைவன் அவர்கட்கு அருள்செய்ய அவ்விருவரும் இசை பாடிக்கொண்டிருக்கின்றார்களென்றும் புராணங்கள் கூறும், அக்கருத்தைக் கொண்டு இங்கே கூறினார். இவ்வாறே மீனாட்சியம்மையார் பிள்ளைத்தமிழில் ‘பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல்தெரி வெள்வளைத் தோட்டினர்’ என இறைவனைக் குறிப்பிடுவதும் இதனை வலியுறுத்துதல் காண்க.

இறைவன் மேற்கூறியனயாவும் சிறந்து முன்செல்ல எருதின் மீதேறி உலா வந்தாரென உலாவின் சிறப்பை வியப்புறக் கூறி முடித்தார்.

(13)

உலாக் காணப் பெண்கள் வருதல்
விருத்தம்

  பாலேறும் விடையில் வருந் திரிகூடப்
     பெருமானார் பவனிக் காணக்
  காலேறுங் காமனுக்காக் கையேறும்
     படைப்ப வுஞ்சாய்க் கன்னிமார்கள்
  சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப்
     புருவநெடுஞ் சிலைகள் கோட்டி
  மாலேறப் பொருதும் என்று
     மணிச்சிலம்பு முரசறைய வருகின்றாரே

 

(பொ-ரை) பால்போல் வெண்ணிறம் பொருந்திய எருதின் மீதேறி உலா வருகின்ற திரிகூடப் பெருமானாரின் திருவுலாவைத் காண்பதற்குத் தென்றலைத் தேராகக் கொண்டு ஏறுகின்ற மன்மதனுக்காகத் கையிற் படைதாங்கிவரும் சேனைகளாகியஇளமங்கையர்கள், கெண்டை மீனை யொத்த கலகஞ் செய்கின்ற தம் கண்களாகிய அம்புகளைப் பதமாகத் தீட்டி, புருவங்களாகிய வில்லை வளைத்து (ஆடவரெல்லாம்) மயக்கங் கொள்ளுமாறு போர் செய்வோமென்று மணிகள் அழுத்திய காற்சிலம்புகளாகிய முரசங்கள் ஒலிக்க வருவதானார்கள்.



(வி-ரை) பால் ஏறும்-பாலையொத்த; ஏறும் என்னும் பெயரெச்சம் ஈண்ட உவம உருபாக நின்றது. எருதின் வெண்ணிறச் சிறப்புக்குப் பாலை உவமை கூறினார். கால்-காற்று. இங்கே தென்றல், மன்மதனக்குத் தேர், தென்றல்,பெண் களே அவன் படைவீரர்கள். பவுஞ்சு-சேனை, மன்மதன் படைகளாகிய கன்னி மார்கட்குக் கண்களை அம்புகளாகவும் புருவத்தை வில்லாகவும் காற்சிலம்புகளின் ஒலி முரச ஒலியாகவும் உருவகஞ் செய்தார். படைவீரர்கள் பகைவரைக் கொல்ல அம்பும் வில்லும் கைக்கொண்டு முரசம் அறைந்து போருக்கு வருவதாக அறிவிப்பது இயற்கையாதலான், அப்போர்முறை தோன்றக் கூறினார். (14)

உலாக்காணவந்த பெண்கள் சொல்லுதல்

இராகம்-புன்னாக வராளி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) ஒருமானைப் பிடித்து வந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
     ஒருகோடி மான்கள் போல் வருகோடி மடவார்

(2)

புரிநூலின் மார்பனிவன் அயனென்வர் அயனாகில்
     பொங்கரவ மேதுதனிச் சங்கம்ஏ தென்பார்

(3)

விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
     விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்

(4)

இருபாலும் நான்முகனுந் திருமாலும் வருகையால்
  ஈசனிவன் திரிகூட ராசனே யென்பார்

(5)

ஒருகைவளை பூண்ட பெண்கள் ஒருகைவளை பூணமறந்
     தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்

(6)

இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
     இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்

(7)

கருதுமனம் புறம்போகஒரு கண்ணுக்கு மையெடுத்த
     கையுமாய் ஒருகணிட்ட மையுமாய் வருவார்

(8)

நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
     நில்லானோ மதனை இன்னம் வெல்லானோ என்பார்

(9)

மெய்வளையம் மறுவுடைய தெய்வநா யகன் மடித்த (பார்
     வெண்மதியும் விளங்கு தெங்கள் பெண்மதிபோல் என்

(10)

பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
     பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்

(11)

இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பில் அழுந்தாமல்
     என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை யென்பார்

(12)

மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டான்இ
     மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார்

(பொ-ரை)

ஒரு மானைக் கையிலேந்திய பெருமானாகிய திருக்குற்றாலத்தி றைவரைத் தொடர்ந்து வருகின்ற அளவற்ற மான் கூட்டம் போல் வாராகிய எண்ணற்ற மங்கையர்கள், (பார்த்து) முப்புரி நூலினையுடைய மார்பினனாகிய இவன் பிரமதேவனே என்பார்கள்; அப் பிரமனானால் சினமுள்ள பாம்பு ஏது'காதில் ஒப்பற்ற சங்கக் குண்டலம் ஏது'இவை இருக்கின்றனவே என்று சிலர் சொல்வார்கள்; சிலர் மிக்க அருளுடைய திருமாலென்பார்கள்; திருமாலானால் நெற்றிக் கண்ணுண்டோ'இருக்கின்றதே யென்பார்கள்;சிலர், அவனுக்குத் தலைமேல் சடையுண்டோ'இருக்கின்றதே யென்பார்கள். சிலர், வலம் இடமாகிய இருபக்கங்களிலும் நான்முகனும் திருமாலும் உடன் வகுகின்றபடியால் அருட் செல்வனாகிய இவன் திரிகூடராசப் பெருமானே என்பார்கள்.

ஒரு கையில் வளையணிந்த பெண்கள் மற்றொரு கையில் வளையலணிய மறந்து இறைவன் உலாக்காண ஓடுவார்கள்; இதைக்கண்டு சிரிப்பவர்களைப் பார்த்துத் தலைகவிழ்ந்து கொள்வார்கள்; இருகொங்கைகளுக்கு அணிகின்ற கச்சினை, கச்சென மயக்கத்தால் அறியாராய் ஆடையென இடுப்பில் உடுத்துவார்கள்; பின் (உணர்வு தோன்றி) இந்த ஆடை கச்சென அறிந்து தம் அழகிய கொங்கைகட்கு அணிவார்கள்; எதையும் நினைகின்ற தம் மனம், உலாவரும் காட்சிப் பக்கம் போக ஒரு கண்ணுக்கு மை தீட்ட மையை யெடுத்துள்ள கையுமாக, ஒரு கண்ணுக்கு எழுதிய மை கொண்ட கண்ணுமாக வருவார்கள்; அவருட் சிலர், தலைவனாகிய திரிகூடராசப்பெருமான் நல்ல நம் நகரத்தின் வீதியிடத்தே நெடுநேரம் வரை நிற்கமாட்டானோ'ஒரு வார்த்தையாவது சொல்லமாட்டானோ' என்பார்கள்.

கடவுளர் தலைவனான இறைவன் சூடிய தன் உடலில் கூனலும் களங்கமுமுடைய (மூன்றாம் பிறையாகிய) வெண்மதியும் எங்களுடைய
பெண்மதிபோல வெள்ளையாக விளங்குகின்ற தென்பார்கள்; இவன் அணிந்துள்ள நஞ்சினை மிகுதியாகக் கொண்டுள்ள நச்சுப்பையுள்ள தம் உடல் வளைகின்ற பாம்புகட்குப் பசியெடுக்கமாட்டாதோ'(பசியெழுந்தால் எம்மை வருத்துகின்ற இந்தத்) தென்றற் காற்றை உண்ணமாட்டாவோ என்பார்கள்; இந்த நம் வளையலணிந்த கைகள், இவன் தோள்களில் பதியும்படி மார்பில் அழுந்தாமல் இருக்கின்ற நம்மிடம் உண்டாகிய அழகிய கொங்கைகள் என்ன கொங்கைகள்'(தோன்றியும் பயன் பேற்றிலவே!) என்பார்கள்; மேகங்களும் வெட்கிக் குனிகின்ற நம் கூந்தல் அவிழ்ந்து தொங்கவும் நம் கைகளிலணிந்த வளையல்களைக் கவர்ந்து கொண்டான். இச்செயல் மாயமாகவன்றோ இருக்கின்றது! சடைவளர்த்த முறை இதுவோ'என்பார்கள்.


(வி-ரை)

ஒருமான் பெருமான் கோடிமான் என்பன. மானையும் இறைவனையும் பெண்களையும் குறிக்க அமைந்த சொற் பின்வரு நிலையணி. பெண்கள் இறைவன் திருவுலாக் காணும் பேரன்பினால் மனநிலை திரிய ஒரு கை வளையல் அணிந்தோர் மற்றொரு கைக்கு வலையலணிவதை மறந்தனர்; கொங்கைக் கணியும் இரவிக்கையாடையை மதிமயங்கி அரைக்கணிந்தனர்; ஒரு கண்ணுக்கு மை தீட்டினோர். மற்றொரு கண்ணுக்கு மை தீட்டக் கையில் மையை யெடுத்த போது உலாமுழக்கங் கேட்டது, அக் கோலத்தோடு உலாக்காண ஆவல் உந்த ஓடி வந்தனர், என்பன பெண்கள் காதல் இயற்கை நிலையை விளக்கி நின்றன. பை-நஞ்சுப்பை: அன்றிப் படமென்றலுமாம். காதல்கொண்டவர்க்குக் தென்றற்காற்று அவ்வுணர்ச்சியை மேலிடச் செய்வதாதலால் அதையொழித்தற்குப் பாம்புகள் காற்றையும் உண்டு உயிர் வாழ்வனவாதலால் இறைவன் அணியாகப் பூண்ட பாம்புக்குப் பசி இருக்காதா' பசியிருந்தால் இத்தென்றலைப் புசியாதோ'என்று மகளிர் கூறும் தொடராக வருவன இன்புறற்பாலன. மதி-சந்திரன்; புத்தி, பெண்மதி யென்றமைத்த சொற்கள்,சொல்லின்பந்தோன்றி மகிழ்வித்தல் அறிக.
(15)