பக்கம் எண் :

(பொ-ரை) (1) கருநிற மேகங்கள் ஒன்று இரண்டு சுருண்டு சுழியெறிவது போல் காட்சியளிக்கின்ற கூந்தல் முடியினாள்; காதுகள் வரை நீண்டு சென்று வியைாடி ஆடவர் நெஞ்சைக் கொள்ளைகொள்கின்ற கெண்டை மீனையொத்த கண்களையுடையாள்; அழகுள்ள முள் முருக்கின் அரும்பை யொத்த மேல் கீழ் இதழினையுடையாள்; அழகிய வில்லைப்போல் வளைந்து மூன்றாம் பிறைத்திங்களைப் போல் ஒளிவிடுகின்ற நெற்றியையுடையாள்;

(2) அரம்பை யென்னும் மங்கையின் நாடாகிய விண்ணுலகத்தில் தோன்றும் வான வில்லுங்கூட ஆசை மொழி பேசும்படி அமைந்த கண்களின் புருவத்தையுடையாள்; தன்னைப் பார்க்கின்ற மற்ற ஆடவர் பெண்டிர்களின் அறிவையும் மயக்குகின்ற இறுமாப்புமிக்க மங்கைப் பருவத்தை யுடையாள்; கரும்பின் சாறுபோல் இனிப்புக்கொண்டு அமிழ்தம்போல் (மிக இனிக்கும்) தெளிவாக எடுத்த சொல்லை யுடையாள்; இரைச்சல் இடுகின்ற கடல் அலைகளால் ஒதுக்கப்பட்ட முத்துகளைப் பதித்து வைத்தாலொத்த வரிசையான பற்களை யுடையாள்;

(3) பற்களின் நிற அழகை எட்டிப்பார்ப்பது போல் மூக்கில் புல்லாக்காக இட்ட ஒப்பில்லாத முத்தினை யுடையாள்; திங்களும் பழகத்தக்க ஒளிவடிவில் நிலைத்து அழகு மாறாமல் இருக்கின்ற முகத்தினை யுடையாள்; ஒளிபொருந்திய பல்வகை அணிகளைப் பூண்டு, கொடிகள் சுற்றுகின்ற கமுகினையும் வெற்றி கொண்ட கழுத்தினை யுடையாள்; உலகம் எல்லாவற்றையும் தனக்கு விலைப்பொருளாக மதித்தெழுதச் செய்து, இன்பத்தை நிலைநிறுத்தி எழுதுகின்ற சந்தனக் குழம்பால் எழுதப் பெற்ற எழுதுவரிக் கோலத்தை யுடையாள்;

(4) மணிகள் அழுத்திப் பொன்னாற் செய்த அழகிய வளையல்களை அணிந்துள்ள சிவந்த கைகளையுடைய தன்னிடம் முழுதும் இரவிக்கையால் மூடப்பட்டிருப்பினும் இனிமை தங்கியிருக்கின்ற இரண்டு கொங்கைகளை யுடையாள்; இறைவன் அன்பில் கூடும் எண்ணமுடையவராகிய முனிவர்களின் மனமாகிய கல்லையுங்கூட (கரைந்துருகும்படி) மாற்றுகின்ற அழகுள்ள கொப்பூழையுடையாள்; மேலிடத்தில் நேராகக் கொண்டு ஆடவர் மனத்தைக் தன்பால் அடக்குகின்ற (வயிற்று) மயிரொழுங்கினை யுடையாள்

(5) உடுக்கைக்கும் உள்ளிடம் சிறுத்து ஒருகைப்பிடியளவுக்குள் அடங்குகின்ற சிறிய இடையையுடையாள்; காமனாகிய கொடியவனது அரண்மனைக்குக் கட்டிவைத்துள்ள வாழைமரத்தைப் போன்ற தொடைகளை யுடையாள்; மடிப்பையுடைய அழகிய ஆடைகளை விரித்துக் கொய்து உடுத்த உடையினையுடையாள்; இள அன்னத்தின் நடையைப்பார்க்கினும் மெல்ல நடக்கின்ற நடையை யுடையாள்;

(6) பெரு முழக்கமுடைய கடலிற் பிறந்த தேவாமிர்தத்தைக் கொண்டு உருவாக்கியதைப் போன்ற இன்பஞ் செய்யும் திருவடிவுடையாள்; வீமனாற் செய்யப்படும் உணவு போல் சுவை கொண்ட காதல் ஆசையாகிய பாலுக்கு மேலும் இனிமை கொடுக்கும் சருக்கரையைப் போன்றவள்; பொருந்திய நல்ல மணமுள்ள வல்லிக்கொடியைப் போன்ற வசந்தவல்லியினது இவ் வழகு மிகுதி, அறுபத்து நான்கு சக்தி பீடத்தில் ஒன்றாக இலகும் இத் திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருப்பவரான திரிகூடராசப் பெருமானது திருவுள்ளத்தையும் உருகும்படி செய்யும்.


(வி-ரை)

1-6 இக் கண்ணிகள் ஆறும் முடிமுதல் அடிவரை (கேசாதிபாதம்) வருணனையாக வசந்தவல்லி கூந்தல், கண், இதழ், நுதல் போன்ற எல்லா வடிவையும் அழகுறக் காட்டி இவள் அழகால் குற்றாலநார் உள்ளங்கூட உருகுமென்றால் வேறென்ன விளம்புவதென்று ஆசிரியர் கூறி முடிக்கின்றார்.

குழை-காது, சிலை-வில் அரம்பைதேசம்-வானுலகம், கருவம்-செருக்கு; இறுமாப்பு கரும்பு அதன் சாற்றுக்கு ஆகுபெயர். மருந்து-அமிழ்தம், திரை-அலை நிரை-வரிசை, எட்டிப்பார்த்தல்-தலைநீட்டிக் காணுதல், புல்லாக்கு, பற்களுக்கு நேராகத் தொங்கியசைவதை எட்டிப் பார்ப்பது போல் குறித்தார். அழகு குடிகொள்ளுதல்-அழகு கெடாமல் என்றும்ஒரேபடியாக நிலைத்திருத்தல். வல்லி-கொடி, கழுத்தி்ல் பல்வகைச் சங்கிலிகள் பூண்டிருப்பது கமுகில் கொடி படர்ந்திருப்பதுபோல் தோன்றுவதென்றபடி, சகம்-உலகம், இன்பநிலை இடுதல்-இன்பத்தை நிலைத்திருக்கச் செய்தல், தொய்யில்-மார்பினும் தோளினும் கலவைச் சந்தனத்தால் எழுதுகின்ற வரிக்கோலம், செல்லம்-செல்வம், சிறப்பு, கச்சு-இரவிக்கை, ஒல்லுதல்-பொருந்துதல், கருத்தர்-கருத்தினையுடையார், கருத்து-எண்ணம், கல்-கல்போன்ற வலிமை, உரோமபந்தி-மயிரொழுங்கு, அடுக்கு-மடுப்பு, சின்ன-சிறிய; ஈண்டுமெல்லிய, வெடித்தல்-பெரு முழக்கம் வீமபாகம்-வீமனால் செய்த உணவுவகை, மிகச் சிறந்த முறையில் வீமன் சமைப்பான் என்பது பாரதக்கதை, காமமாகிய பால்-காம இன்பத்தின் வகைகள், பிடித்த பொருந்திய; சேர்ந்த, பெருக்கம் ஈண்டு (அழகு) மிகுதி, சத்திபீடம்- சத்திவீற்றிருக்கும் உயிரடம் கச்சுக்கிடக்கினும் என்பதில் கச்சு-கைத்து; கசப்புடையதாகி என்றும் கச்சு, இரவிக்கையென்றும் இரு பொருள் நயம் காண்க.
(18)

வசந்தவல்லி பந்தடித்தல்

விருத்தம்


வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே,

(பொ-ரை) ( மெய்யறிவினரான திருக்குற்றால நாதரின் திரிகூட மலையையுடைய நகரத்தில் வெளித்தோன்றிய வசந்தவல்லியானவள் தாவுகின்ற விளையாட்டினாலோ; அன்றிப் பெரிய கொங்கைகளின் சுமையினாலோ, சங்கு வளையல்கள் அணிந்துள்ள தன் கைகள் மிகச் சிவப்பு நிறமடைய நான்கு அடிகள் முன்னேறிச் சென்றும், பத்தடிகள் பின்வாங்கிப் போயும் பந்தடித்து விளையாடல் புரிகின்றாள்.
(வி-ரை) திரிகூடம்-மூன்று கொடிமுடிகள் ஒன்றாகக் கூடியது. அதனால் பொதிய மலைக்குத் திரிகூடமலை யென்பது பெயராயிற்று, தத்துதல்-தாண்டுதல், பணைப்பு-பருமை; சுமை. நத்து; வலித்தல் விகாரம் பெற்றது. சேப்ப-செந்நிறம் கொள்ள, நாலடி-நான்கு காலின் எட்டுதல் அளவு. ஓங்குதல்-மேலே போதல், வாங்குதல்-பின்னடைந்து போதல். (19)

இதுவுமது


இராகம்-பைரவி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம்
      என்றாட                               இடை
  சங்கதம் என்று சிலம்பு புலம்பொட தண்டை
      கலந்தாட                              இரு
  கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைத்து
      குழைந்தாட                            மலர்ப்
  பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
      பந்து                                பயின்றாளே;
   
(2) பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
      புரண்டாடக்                           குழல்
  மங்குலில் வண்டு கலைந்து கண்டு மதன்சிலை
      வண்டோட                            இனி
  இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை
      திண்டாட                             மலர்ப்
  பங்கய மங்கை வசந்த சவுந்தரி
      பந்து                                பயின்றாளே;
   
(3) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
      நின்றாடப்                            புனை
  பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை
      கொண்டாட                            நய
  நாடகம் ஆடிய தோகை மயிலென நன்னகர்
      வீதியிலே                            அணி
  ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
      அடர்ந்துபந்                          தாடினளே;
   
(4) இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
      மோகினியோ                           மன
  முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
      தோவெனவே                          உயர்
  சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி
      வீதியிலே                            மணிப்
  பைந்தொடி நாரி வசந்தஒய் யாரிபொற்
      பந்துகொண்                        டாடினளே.