பக்கம் எண் :


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

திருக்குற்றாலப்பதிகம்

பண்: குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

வம்பார்குன்றந் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலை கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடல்அமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
1

பொடிகள்பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலம்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலும் அடியீர்காள்
2

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதில்எய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலும் நமரங்காள்.
3

பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோர் அனலேந்தி
நக்கன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
4

மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூலம் ஏந்தியகையான் எயில்எய்த
சிலையான்மேய நன்னகர்போலும் சிறுதொண்டீர்.
5

மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளிஒப்பும் குற்றாலம்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்எம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
6

நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலம்
காலன்தன்னைக் காலாற்காய்ந்த கடவுள்எம்
சூலபாணி நன்னகர்போலும் தொழுவீர்காள்.
7

போதும்பொன்னும் உந்திஅருவி புடைசூழக்
கூதல்மாரி நுண்துளிதூங்கும் குற்றாலம்
மூதூர்இலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.
8

அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்கள்.
9

பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்ஏறிச் செவ்வழிபாடும் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
10

மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடல்ஈன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
11

திருச்சிற்றம்பலம்