பக்கம் எண் :

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

திருக்குறும்பலாப்பதிகம்

பண்: காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.
1

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மான் இடம்போலும் அந்தண்சாரல்
கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டுகளும்
                    குறும்பலாவே.
2

வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி
ஆடல் அரவசைத்த அம்மான் இடம்போலும் அந்தண்சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத்தாதவிழ்ந்து பசும்பொன்உந்திக்
கோடல் மணங்கமழும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.
3

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
காலன் உடல்பிழியக் காய்ந்தார்இடம்போலும் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயரும் குறும்பலாவே.
4

தலைவாள் மதியம் கதிர்விரியத் தண்புலனைத் தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி இடம்போலும் முதுவேய்சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்குசாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன்பிலிற்றும்
                   குறும்பலாவே.
5

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியார் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தார் இடம்போலும் குளிர்சூழ்வெற்பில்
ஏற்றேனம் ஏனம் இவையோ டவைவிரவி யிழி பூஞ்சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலும் குறும்பலாவே.
6

பொன்தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலுஞ்சூடிப்
பின்தொத்த வார்சடையெம் பெம்மான் இடம்போலும் பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம்உந்திக்
குன்றத் தருவி அயலே புனல்ததும்பும் குறும்பலாவே.
7

ஏந்துதிணிதிண்டோள் இராவணனை மால்வரைக்கீழ் அடர ஊன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவரிடம்போலும் சாரற்சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும் குறும்பலாவே.
8

அரவின் அணையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்துமாந்தக்
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும் பலாவே.
9

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தான் இடம்போலும்கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாயகடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.
10

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலாமேவிய கொல்லேற்றண்ணல்
நம்பான் அடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன
இன்பாய பாடல் இவைபத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார்
தம்பால் தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா அன்றே.
11

திருச்சிற்றம்பலம்