பக்கம் எண் :



வசந்தவல்லியைப் பாங்கிகள் உபசரித்தல்

விருத்தம்


வானவர் திருக்குற் றாலர் மையலால் வசந்த வல்லி
தானுடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடஞ் சேர்த்து
மேனியார் அழகு தோற்ற மின்னனார் விழுந்த பேரைக்
கூனைகொண் டமிழ்த்து வார்போற் குளிர்ச்சியால் வெதுப்பு வாரே

(பொ-ரை) வசந்த வல்லியானவள், மேலானவரான திருக்குற்றால நாதரிடம் கொண்ட காதலால், உடம்பு தளர்ந்தனள் என்று, பொன்னாலான மாளிகைக்குத் தூக்கிச் சென்று, அரிய அழகுப் பொலிவினையுடைய மின்போன்ற சாயல்வாய்ந்த பெண்களானவர், மயக்கங்கொண்டு கீழே விழுந்தவர்களை நீரினுள்ளே நீர் இறைக்கும் சாலால் அமிழ்த்தி மூடுகின்றவர்கள்போல, இவள் உடலில் சந்தனம் முதலிய குளிர்ந்த பொருள்களைப்பூசி, அதனால் வெம்மையடையச் செய்தார்கள்.





(வி-ரை)

தமனியம்-பொன். தோற்றம்-பொலிவு. கூனை கொண்டு அமிழ்த்துவார்போல்-நீர் இறைக்கும் சாலால்நீரினுள்ளே அமிழ்த்துவார் போல. குளிர்ச்சி-சந்தனக் கலவை முதலிய குளிர்ந்த பொருள்கள்.

 



(29)
இதுவுமது

இராகம்-கல்யாணி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) முருகு சந்தனக் குழம்பு பூசுவார் விரகத்தீயை
      மூட்டி மூட்டி விசிறி வீசுவார்
  கருகு தேயுடல் உருகு தேயென்பார் விரித்தபூவுங்
      கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார்;

(2) அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்
      அணைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார்
  பெருகு நன்னகர்க் குறும்ப லாவினார் வசந்த மோகினி
      பெருநி லாவி னொடுக லாவினாள்.

 

(பொ-ரை) (1) (வசந்தவல்லிக்கு) மணமிக்க சந்தனக் கலவையைப் பூசுவார்கள்; வேட்கை நெருப்பை மூட்டி மூட்டி விசிறி கொண்டு வீசுவார்கள்; உடம்பு கருகுகின்றதே, உருகுகின்றதே என்பார்கள்; மலர்ந்த பூவும் கரிகின்றதே, முத்துமாலையும் பொரிகின்றதே என்பார்கள்.

(2) பக்கத்தில் இருந்து மாதர்கள் கதைகளைத் தொடர்ந்து சொல்லுவார்கள்; அவளை எடுத்து மார்போடணைத்து வாழைத் குருத்தில் படுக்கவைப்பார்கள். அப்போது வசந்தவல்லியானவள் சிறந்த நல்ல குற்றால நகரில் குறும்பலாவின் அடிக்கீழ் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலநாதர் முடியில் அணிந்துள்ள பிறையினிடத்தே சினங் கொள்ளலானாள்.










(வி-ரை)

விரகத்தீ-காமநெருப்பு. முருகு -வாசனை. கலாவினாள்-கோபம்
கொண்டாள்.

 

(30)
வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்

விருத்தம்

பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத்
   தவர்கொடுத்த பிரமை யாலே
மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றேன்
   உனக்குமதி மயக்கந் தானோ
கண்ணிலே நெருப்பைவைத்துக் காந்துவா
   ருடன்கூடிக் காந்திக் காந்தி
விண்ணிலே நெருப்பைவைத்தாய் தண்ணிலாக்
   கொடும்பாவி வெண்ணி லாவே,

(பொ-ரை) குளிர்ச்சியற்ற கதிர்களையுடைய கொடிய பாவியாகிய வெண்ணிற நிலாவே! பெண்களுக்குள்ளே குழல் வாய்மொழி என்னும் பெயரையுடைய உமாதேவியாருக்கு ஒப்பற்ற இடப்பாகத்தைக் கொடுத்தவராகிய திருக்குற்றாலநாதர் எனக்குத் தந்த மயக்கத்தால் நான் பூமியில் மதிமயங்கிக் கிடக்கின்றேன். உனக்கும் மதிமயக்கம் தானோ என்னவோ? தம் நெற்றிக் கண்ணிலே நெருப்பை வைத்து எரியும் படி செய்கின்றவராகிய இறைவருடன் நீயுஞ் சேர்ந்து கொண்டு சுட்டுச்சுட்டு (எரிவைச் செய்து) வானிடமெங்கும் நெருப்பை வைத்துள்ளாயே! (இஃதென்ன முறையேயோ)






(31)

இராகம்-வராளி
தாளம்-ஆதி

கண்ணிகள்

(1) தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
     தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
  பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
     பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே;

(2)

விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
     விட்டுநான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே
  கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக்
     காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே

(3)

ஆகடியஞ் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான்
  ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாவே
  மோகன்வரக் காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த
  வேகமுனக் கானதென்ன வெண்ணலாவே;

(4)


நாகமென்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது

  வாகுகுழற் பின்னல்கண்டாய் வெண்ணிலாவே
  கோகனக வீறழித்தாய் வெண்ணிலாவே திரி
  கூடலிங்கர் முன்போய்க்காய்வாய் வெண்ணிலாவே.

(பொ-ரை) (1) வெண்ணிலாவே! குளிர்ந்த அமுதத்துடன் திருப்பாற்கடலில் தோன்றினாய். அங்ஙனமிருந்தும் அந்தக் கடலின் குளிர்ந்த குணத்தை ஏன் மறந்தனையோ! திருமகளாகிய பெண்ணுடன் பிறந்தாயன்றோ? நானும் ஒரு பெண்ணே என்று அறிந்திருந்தும் நீ என்னைச் சுடலாமா?

(2) வெண்ணிலாவே! நீ வானில் தோன்றியுள்ள காரணத்தாலோ? அன்றி, நான் உனக்கு எருவையிட்டு எறிந்த காரணத்தாலோ? பின்பு கண்ணாற் பார்க்காத வெறுப்புப் கொண்டவர் போலச் சுட்டுத் திருவிளையாடல் செய்கின்றாயே!

(3) வெண்ணிலாவே! முறையல்லாத செயல்களை நீ செய்தன்றோ மனிதனுக்கு அடிமைக்காரன் பணிவது போல் நாளுக்குநாள் கலைகள் குறையலானாய்; எனக்கு மையல் விளைத்த திரிகூடநாதர் வாராதிருந்தால் உனக்குச் சினம் வருதற்கென்ன காரணமோ?

(4) வெண்ணிலாவே! நாகப் பாம்பென்று நீ நினைக்க வேண்டா; இஃது என் அழகிய கூந்தலைப் பின்னிவிட்ட சடையாகும்; வெண்மதியே! நீ தோன்றியன்றோ தாமரை மலரின் பெருமையைக் கெடுத்தாய் உன் கோபம் தணியாதிருந்தால் திரி கூடநாதர் முன் சென்று சுடுவாயாக. (இனி என்னைச் சுடாதே! ) வெண்ணிலாவே!!







(வி-ரை)

1-4 பிரமை-மயக்கம். காந்துவார்-சுட்டுருக்குகின்ற திரிகூடநாதர். தண் இலா-குளிர்ச்சி இல்லாத. தண் அளி-குளிர்ந்த குணம். எருவிடுதல்-சிறுபருவப் பெண்கள் தாம் மங்கைப் பருவம் அடைந்தபின் சிறந்த கணவரைத் தமக்குத் தர வேண்டுமென்று நிலாவை வணங்கி வேண்டி, தாம் மலர்களை உலர்த்தித் தட்டிய எருவை (விராட்டியை) நீரில் இட்டு வணங்குதல், இது, கைந்நீராடற் காலத்து நிகழும் நோன்பு. இதனை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்புலிப் பருவப் பாடலின் ‘கீற்றுமதி’ எனத் துவங்கும் பாட்டில், “கெண்டைத் தடங்கணார் எருவிட்டிறைஞ்சுக் கிடந்ததும்” எனப் பழித்துரைப்பதாகக் கூறும் பகுதி இக் கருத்தோடொத்து. இக் கருத்தைக் கொண்டுதான், ‘எருவிட்டெறிந்ததற்கோ’ என்றாள் வசந்தவல்லி எனக்கொள்க. இதனைத் தோழிக்கூற்றாகக் கோவைகளில் ‘பிறை தொழுகென்றல்’ என்னும் துறைப்படுத்துவர் ஆசிரியன்மார்.

காந்தி ஆட்டம்-வெப்பஞ்செய்து விளையாடல். ஆகடியம்-அநியாயம்-முறைகேடு. ஆட்கு. அடியன்-மனிதனுக்கு அடிமைக்காரன். வேகம்-கோபம். வாகு-அழகு. கோகனக வீறு-தாமரை மலரின் பெருமை.















(32)

வசந்தவல்லி மன்மதனைப் பழித்துரைத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தண்ணிலா மௌலிதந்த மையலா
   னதையறிந்தும் தைய லார்கள்
எண்ணிலாப் பகையெடுத்தார் இந்நகரை
   நன்னகரென் றெவர்சொன் னாரோ
அண்ணலார் திரிகூட நாதரென்ப
   தென்னளவும் அமைந்தி டாதோ
வெண்ணிலாக் குடைபிடித்து மீனகே
   தனம்பிடித்த வேனி லானே.


(பொ-ரை) வெள்ளிய சந்திரனாகிய குடையைப் பிடித்துக் கொண்டு மீன் கொடியைப் பிடித்த மன்மதனே! குளிர்ந்தபிறையைச் சடைமுடியில் சூடியிருக்கின்ற திருக்குற்றாலநாதர் தந்த காதல்நோய் என்பதை அறிந்தும் பெண்களானவர் கணக்கற்ற பகைக்கு ஆளானார்கள். ஆகவே, இந்த நகரை, நல்நகர் என்று யாவர் பெயர் வைத்தார்களோ? பெருமை பொருந்தியவர் திரிகூடநாதர் என்று உலகோர் சொல்வதெல்லாம் என்னளவில் பொருந்தாது போலும்! (அவ்வாறானால் எனக்கு அருள்செய் திருப்பாரன்றோ?)






(33)

இராகம்-எதுகுல காம்போதி
தாளம்-சாப்பு

கண்ணிகள்

(1) கைக்கரும் பென்ன கணையென்ன
     நீயென்ன மன்மதா-இந்தச்
     செக்கரும் பாவி
        நிலாவுமே போதாதோ                   மன்மதா!
 
மைக்கருங் கண்ணாள் இரதிக்கு
     மால்கொண்ட மன்மதா-விடை
     வல்லார்க்கு மால்கொண்டாற்
        பொல்லாப்பென் மேலுண்டோ       மன்மதா!

(2)

திக்கெல்லாம் தென்றற் புலிவந்து
     பாயுதே மன்மதா-குயிற்
     சின்னம் பிடித்தபின்
        அன்னம் பிடியாதே                      மன்மதா!
 
அக்காள் எனுஞ்சகி வேட்காமல்
     ஏசுவாள் மன்மதா-அவள்
     அல்லாமல் தாயொரு
        பொல்லாத நீலிகாண்                    மன்மதா!

(3)

நேரிழை யாரையும் ஊரையும்
     பாரடா மன்மதா-கண்ணில்
     நித்திரை தானொரு
        சத்துரு வாச்சுதே                         மன்மதா!
 
பேரிகை யேஅன்றிப் பூரிகை
     ஏன்பிள்ளாய் மன்மதா-சிறு
     பெண்பிள்ளை மேற்பொரு
        தாண்பிள்ளை யாவையோ            மன்மதா!

(4)

வார்சடை ஈதல்ல கார்குழல்
     பின்னல்காண் மன்மதா-நெற்றி
     வந்தது கண்ணல்ல
        சிந்தூர ரேகைபார்                      மன்மதா!
 
நாரிபங் காளர்தென் ஆரிய
     நாட்டினார் மன்மதா-எங்கள்
     நன்னகர்க் குற்றாலர்
        முன்னமே செல்லுவாய்                மன்மதா!