பக்கம் எண் :

பாங்கி, வசந்தவல்லியைப் பழித்துரைத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த
    தமனியக் கொடியே மாதர்
துரைக்பெண்ணே வசந்த வல்லி
    சொன்னபே தைமைக்கென் சொல்வேன்
வரைப்பெண்ணுக் காசை பூண்டு
    வளர்சங்க மறுகின் ஊடே
நரைத்தமா டேறு வார்க்கோ
    நங்கைநீ மயல்கொண் டாயே.

(பொ-ரை)

பூமிதேவிக்கு அணியென்னும்படி பிறந்த பொற்கொடி போன்றவளே! பெண்ணரசியே! வசந்தவல்லி! நீ சொன்ன அறியாமை மொழிக்கு நான் என்ன மறுமொழி கூறுவேன்; மக்கட் கூட்டம் பெருகுகின்ற சங்கவீதியில் மலைமகளாகிய குழல்வாய் மொழியமை மீது ஆசை கொண்டு வெளுத்து எருதினை ஊர்ந்து வருகின்றவரிடத்தே நங்கை நீ காதல் கொண்டாயோ!






வசந்தவல்லி, திரிகூடநாதரைப் புகழ்ந்து
பாங்கிக்கு கூறுதல்

இராகம்-சௌராஷ்டிரம்,
தாளம்-ரூபகம்

கண்ணிகள்

(1) மன்னவர்குற் றாலர்செய்தி இன்னம்இன்னங்
      கேளாயோ மானே! அவர்!
  வாகனத்தின் மால்விடைக்கு லோகம்ஒக்க
      ஓரடிகாண் மானே
  சன்னிதியின் பேறல்லவோ பொன்னுலகில்
      தேவர்செல்வ மானே! தினஞ்
  சந்திரரும் சூரியரும் வந்திறங்கும்
      வாசல்கண்டாய் மானே.
   
(2) நன்னகரில் ஈசருக்கு நான்தானோ
      ஆசை கொண்டேன் மானே! பல
  கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும்
      ஆசைகொணடார் மானே!
  தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
      டோதரியாள் மானே! அவர்
  பொன்னடியிற் சோர்ந்தணைய என்னதவஞ்
      செய்தாளோ மானே!

(பொ-ரை)

(1) மான் போன்றவளே! குற்றாலநாதரின் செயலை மேலும் சொல்கின்றேன் கேள். அவரின் ஊர்தியாகிய பெரிய எருதுக்கு உலகம் முழுவதும் ஒரே அடிதான். அவர் திரு முன்பின்பாக்கிய மன்றோ தேவர்கள் பெற்றுள்ள செல்வம்; நாள்தோறும் திங்களும் ஞாயிறும் வந்து இறங்கும் வாசலாய் விளங்குகின்றதன்றோ அவர் திருமுன்பு.

(2) மானையொத்த தோழிநல்ல குற்றாலநாதர் மீது நான் ஒருத்தி மட்டுந்தானா காதல் கொண்டேன்? பல இளம் பெண்களுமன்றோ காதல் கொண்டனர்! தென் இலங்கையில் வாழ்ந்த ஒப்பற்ற மங்கைப் பருவம் வாய்ந்த மண்டோதரி யென்பாளும் அவரின் திருவடிப் பேறெய்துதற்கு என்ன தவம் செய்தாளோ (அவளும் பேரன்பு கொண்டாளே! )








(வி.ரை)

1-2 ஒக்க-முழுவதும். வேறு-பயன், பாக்கியம். பன்னியர்- மனைவியர். மண்டோதரி-இராவணன் மனைவி. மண்டோதரி விருப்பப்படி சிவபெருமான் இலங்கை சென்றதும் அவள் இவர் திருவடி தீண்டுகையில் உத்தரகோசமங்கைப் பொய்கையில் நெருப்புத் தோன்றியது. அதுமுதல் அக்கினிதீர்த்தம் உண்டாகியதென்று உத்திரகோசமங்கைத் தலவரலாறு கூறும்.




(38)

இதுவுமது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம

வேரிலே பழம்பழுத்துத் தூரிலே
    சுளைவெடித்து வெடித்த தீந்தேன்
பாரிலே பாதாள கங்கைவந்த
    தெனக்குதித்துப் பசுந்தேன் கங்கை
நீரிலே பெருகுகுறம் பலாவிலே
    கொலுவிருக்கும் நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே
    நானுமொரு பெண்கண் டாயே.

 

(பொ-ரை)

வேரினிடத்தில் பழமானது பழுத்து, அதன் அடியிலே சுளைவெடித்து, சுளையில் நின்றும் ஒழுகிய இனிய தேனானது பூமியிற் பாதாள கங்கைவந்ததென்னும்படி விரைந்து சென்று நல்ல தேன் கலந்த கங்கை நீரிலே (சிவமது கங்கை நீரிடத்துப்) பெருகின்ற குறும்பலாவின் கீழிடத்தே எழுந்தருளியிருக்கும் மெய்யறிவுருவினரான திருக்குற்றாலநாதர் மேல் காதல் கொண்ட பெண்களிலே யானும் ஒருத்தி யென்பதை நீ அறிவாயாக.







(வி.ரை) தேன் கங்கை நீரில் பெருகு-சிவமாகிய தேன் கங்கை நீரினிடத்து வந்து பெருகப்படுகின்ற தென்பதும் ஒரு பொருள். பிரமை-மயக்கம். (39)

பாங்கி, வசந்தவல்லியை நியாயம் வினாவுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  வசந்தஉல் லாசவல்லி வல்லிக்கு வல்லி பேசிப்
  பசந்ததோர் பசப்புங் கண்டாய்பரமர்மேல் ஆசை கொண்டாய்
  நிசந்தரும் திருக்குற் றால நிரந்தர மூர்த்தி உன்பால்
  இசைந்திடக் கருமம் ஏதோ இசையநீ இசைத்தி டாயே.

(பொ-ரை)

இனிமைமிக்க வசந்தவல்லியே! வலியகரும்புச் சாற்றின் இனிமையளவு இனிமையாகப் பேசியே உண்மைப் பொருளாகிய வீடுபேற்றைத் தருகின்ற திருக்குற்றால நாதரிடத்தில் நீ ஆசை கொண்டாய்; அதன் பயனாக பசலை நிறமும் உண்டுபண்ணிக்கொண்டாய்; திருக்குற்றாலநாதர் உன்பால் வந்தணைதற்கு ஏதேனும் உன்னிடம் காரியம் இருக்கின்றதோ? நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையில் நீ கூறுவாயாக.






(வி.ரை)

வல்இக்கு வல்லிபேசி-வலியகரும்பின் இனிமை போல் பேசுதல் செய்து, வல்+இக்கு எனப் பிரிக்க. நிரந்தர மூர்த்தி-சதாசிவன், இசைந்திட- பொருந்த. கருமம்-காரியம்; வேலை.



(40)
வசந்தவல்லி வருந்திக் கூறுதல்

இராகம்-நாதநாமக்கிரியை,
தாளம்-ஆதி

கண்ணிகள்

(1) புரத்து நெருப்பை மூவர்க் கவித்தவர் மையல் கொண்ட என்
      ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார்
  பருத்த மலையைக் கையில் இணக்கினார் கொங்கை யான
      பருவ மலையைக் கையில் இணக்கிலார்;
   
(2) அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனதில்
      அஞ்சு தலைக்கோர் ஆறுதலைவையார்
  நஞ்சு பருகி அமுதங் கொடுத்தவர் எனது வாள்விழி
      நஞ்சு பருகி அமுதங் கொடுக்கிலார்;
   
(3) தேவர் துரைதன் சாபந் தீர்த்தவர் வன்ன மாங்குயிற்
      சின்னத் துரைதன் சாபந் தீர்க்கிலார்
  எவ ரும்புகழ் திருக்குற் றாலர்தாம் சகல பேர்க்கும்
      இரங்கு வார் எனக் கிரங்கிலார் பெண்ணே.

 

(பொ-ரை)

(1) திரிபுரத்தில் தோன்றிய தீயை, சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்னும் மூன்று அசுரர்கட்குக் கொடுத்தவர்; (அழியாமல் காத்தவர்) ஒருத்தியாகிய என்னுடைய காமத்தீயைத் தணியாதிருக்கின்றாரே! பருமையான மேரு மலையைத் தம்கையில் வில்லாகச் சேர்த்துக் கொண்டவர், என் கொங்கைகளாகிய இளம் பருவமுள்ள மலையைத் தம்கையில் சேர்க்காதிருக்கின்றாரே;

(2) தம் ஐந்து தலையிடத்திலே கங்கையாகிய ஆறு வைத்துள்ளவர்; எனது மனத்தில் தோன்றிய காதல் அச்சத்துக்குச் சிறிதும் ஆறுதல் கொடுத்தாரில்லையே! நஞ்சை உண்டு தேவர்களுக்கு அமுதத்தை அருந்தக் கொடுத்தவர்; எனது வாள் போன்ற கண்ணிலுள்ள நஞ்சைக் கொண்டு (இன்பமாகிய) அமுதத்தைக் கொடுத்தாரல்லரே.

(3) தேவர்கட்கரசனாகிய இந்திரனின் (தக்கன் யாகத்தில்) முனிவர் இட்ட சாபத்தைக் கொடுத்தவர், அழகிய மாமரத்தில் உள்ள குயிலாகிய எக்காளத்தையுடையவன் சாபத்தைக் தீர்த்தாரல்லரே! (மன்மதன் கரும்புவில்லை விலக்கினாரல்லரே) யாவரும் புகழ்கின்ற திருக்குற்றாலநாதர் உலகிலுள்ள எல்லோருக்கும் அருள்புரிவார்; எனக்கு மட்டும் அருள் செய்தாரல்லரே! தோழி! (என்செய்வேன்)






(வி.ரை)

1-3 புரம்-திரிபுரம். இணக்கினார் - வசப்பதடுத்திக் கொண்டவர். ஆறுதலைவையார்-தணிதலைச் செய்யார். அமுதம்-இன்பமாகிய அமுதம் இச் செய்யுளில் அஞ்சு ஆறு நஞ்சு அமுதம் என்பனவற்றில் முரண் அணி காண்க. தேவர் துரை-இந்திரன். சின்னத்துரை-சின்னங்களையுடைய அரசன்; சிற்றரசன் என இருபொருள் நயந்தோன்றுதல் காண்க. இ்ங்கே மன்மதன். சாபம்-கடுமொழி. வில்-





(41)