(பொ-ரை) |
(1) தோழி!
நாள்தோறும் திரிகூட நாதருக்குப் திருவனந்தல் முதல் ஏகாந்தம் வரை ஒன்பது
கால வழிபாடு உண்டு.
(2) தோழி! சிறந்த ஏழு திருமுழுக்கு (அபிடேக)க் காலத்திலும் எவர் ஒருவரும்
கண்டு பேசுவதற்குக் கிட்டாத காலமாகும்.
(3) தோழி! வருகின்ற திருநாட்களுள் பங்குனி புரட்டாசி மார்கழித்திங்கள்
திருவாதிரைத் திருவிழா என்ற மூன்று திருவிழாக்களுடன் சித்திரைமாதம் வசந்த
உற்சவமும், மாத வழிச்சிறப்பாகப் பிரதோடம் அமாவாசை பௌர்ணமிகளும்
வருட வழிச் சிறப்பாகக் கார்த்திகை மாதம் பௌத்திர உற்சவமும் ஆடிமாதம்
சோதியும், சித்திரைச் சதயமும், புரட்டாசி நவராத்திரியும் வைகாசி மூலம்
விசாகமும் தைப் பூசம் முதலியனவும் சிறந்த நாட்களாம்.
(4) தோழி! நாளுக்குநாள் குழல்வாய் மொழி அம்மை மிகுதியாக மகிழ்ந்து
கொலுவீற்றிருக்குங் காலமாகும்.
(5) தோழி! செருக்குமிக்க திருக்குற்றால நாதலிங்கர் பெருங்கொலுவில்
காலத்தை நோக்காமல்.
(6) தோழி! சித்தர்கள் தேவர்கள் சிவகணங்கள் இவர்கள் திருவாசலில்
நின்று உள்ளே நுழைவதற்கு விடாமல் தடை செய்து கொண்டிப்பச் சிலர் வெளியிலேயே
காத்திருப்பர்.
(7) தோழி! ஒருகால் அவ்வாயிலைக் கடந்து போனவர்களுன் சிலபேர்கள் திருநந்திதேவர்
பிரம்படிக்கு அஞ்சி அவர் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் ஆட்கொண்டார்
குறட்டில் ஒதுங்கி நிற்பார்கள்.
(8) தோழி! மைதீட்டிய கரிய கண்களையுடைய இளமங்கையர்(தம் காதலைக் கூறுதற்குத்)
தூதாக அனுப்பிய வண்டுகளும் கிளிகளும் வாயில்தோறும் காத்த வண்ணமாகவே
இருப்பனவாகும். (9) தோழி! குற்றாலத்துச் சங்கர விசுவநாதன் மகனாராகிய
சிவராமநம்பியென்னும் குருக்கள், சிறந்த சைவாகமம் ஆகிய மகுடாகம முறைப்படி
சடங்குகள் செய்வர்.
(10) தோழி! பாலானது ஆறாகப் பெருகியோடவும், நெய்யானது ஆறாகப் பெருகியோடவும்
திருமுழுக்கு மிகச் செய்தபின்பு நைவேத்தியம் பணிமாறும் காலத்தையும் ஏற்றுக்
கொண்டருளி,
(11) நான்கு வேதங்களாகிய பழைய பாடல்களும்; திருஞானசம்பந்தர் முதலிய
மூவர் பாடியருளிய தேவாரமும்; ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற
நான்கு கவிகளைச் செய்கின்ற புலவர்களது புதுப்பாடல்களும்.
(12) திருநீலகண்டராகிய திருக்குற்றால நாதர் ஏற்றுக் கொண்டருளி நிறைந்திருக்கும்
திருக்கொலுவில் இன்னவர்செல்லலாம் இன்னவர் செல்லலாகாது என்று தடை ஒன்றும்
இல்லை; யாவரும் போகலாம்.
(13) தோழி! அப்பொழுது திருக்குற்றால நாதர் தம்தேவியாகிய குழல்வாய்மொழி
அம்மையாருடன் கொலுவீற்றிருப்பர்; அப்பொழுது நம் விருப்பமாகிய குறைகளை
எடுத்துரைக்கக் கூடாது.
(14) தோழி! காலை, உச்சி மாலையாகிய மூன்று காலத்தும் திருக்குற்றால
நாதர் திருவுருவாகிய இலிங்க வடிவத்தைத் தொட்டுப் பணி புரிகின்றவரான
ஆதிசைவக் குருக்கண்மார் வந்து நின்று பணிபுரிகின்ற திருவனந்தல் (பள்ளி
எழுச்சி) முதலாக.
(15) கொப்பணி யணிந்த அழகுடன் காதணியின் அழகுங்கொண்ட குழல்வாய்மொழியம்மையினது
பள்ளியறை வரை திருக்குற்றாலநாதர் கோவிலுக்குள் செல்கின்ற தனி நேரமாகும்.
(16) மைதீட்டிய கண்களையுடைய தோழி! நீ எனது மிக்க காதலை அவரிடம் அதுகாலை
எடுத்துக்கூறி மணம் பொருந்திய அவரின் கொன்றைமாலையை வாங்கி வருவாயாக!
(இஃதே என் வேண்டுதல்)
|
|