பக்கம் எண் :


இதுவும் அது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


சிலைநுதலிற் கத்தூரித் திலதமிட்டு
   நறுங்குழலிற் செச்சை சூடிக்
கொலைமதர்க் மையெழுதி மாத்திரைக்கோல்
   வாங்கிமணிக் கூடை தாங்கி
முலைமுகத்திற் குன்றிமணி வடம்பூண்டு
   திரிகூட முதல்வர் சாரல்
மலைதனிற்பொன் வஞ்சிகுற வஞ்சியப
   ரஞ்சிகொஞ்சி வருகின் றாளே.

(பொ-ரை) வில்போன்ற நெற்றியில் கத்தூரிப் பொட்டிட்டு மணமுள்ள கூத்தலில் வெட்சிப்பூவை யணிந்து, ஆடவர் உயிரைக் கொல்லும் தன்மை வாய்ந்த களிப்புக் கொண்ட கண்களுக்கு மைதீட்டி, குறி சொல்லுதற்குக் கருவியாகிய மாத்திரைக்கோலைக் கையிலெடுத்துக் கொண்டு, நல்ல கூடையைக்கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, கொங்கைகளின் மேலிடத்தில் குன்றிமணி மாலையை அணிந்து, திரிகூட நாதரின் மலைச் சாரலில் வாழ்கின்ற பொன்கொடி போன்றவளும் மிக்க இன்பமுள்ளவளுமாகிய குறத்தி மகிழ்வோடு வருவாளாயினாள்.


(வி-ரை) சிலை நுதல்-வில்போன்ற நெற்றி. செச்சை-வெட்சிப்பூ. அபரஞ்சி-உருக்கி ஓடவிட்டபொன் போன்றவள். (50)

இதுவுமது

இராகம்-பியாகடை
தாளம்-முசுரம்
பல்லவி

(1) வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே;

அனுபல்லவி

(2) வஞ்சி எழில்அப ரஞ்சி வரிவிழி
   நஞ்சி முழுமற நெஞ்சி பலவினில்
அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை
   நெஞ்சில் நினைவொடு விஞ்சு குறிசொல; (வஞ்சி)
      
சரணங்கள்

(3) வல்லைநிகர்முலை இல்லைஎனும்இடை
   வில்லை அனநுதல் முல்லைபொருநகை
வல்லிஎனஒரு கொல்லி மலைதனில்
   வல்லிஅவளினும் மெல்லி இவள்என
ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்
   புல்லி வருகுறி சொல்லி மதுரித
நல்ல பனிமலை வல்லி குழல்மொழிச்
   செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற; (வஞ்சி)

(4)

குன்றில் இடிமழை மின்கள் எனநிரை
   குன்றி வடமுலை தங்கவே
மன்றல் கமழ்சிறு தென்றல் வரும்வழி
   நின்று தரளம் இலங்கவே
ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும்
   ஊசல் ஆடுகுழை பொங்கவே
என்றும் எழுதிய மன்றில் நடம்இடு
   கின்றசரணினர் வென்றி மலைக்குற; (வஞ்சி)

(5)

ஆடும் இருகுழைத் தோடும் ஒருகுழற்
   காடும் இணைவிழி சாடவே
கோடு பொருமுலை மூடு சலவையின்
   ஊடு பிதுங்கிமல் லாடவே
தோடி முரளி வராளி பயிரவி
   மோடி பெறஇசை பாடியே
நீடுமலைமயில் ஆடு மலைமதி
   மூடு மலைதிரி கூடமலைக்குற. (வஞ்சி)

(பொ-ரை) (1) குற்றாலமலைக் குறவஞ்சி வருவாளாயினாள்; குற்றாலமலைக் குறவஞ்சி வருவாளாயினாள்.

(2) வஞ்சிக் கொடி போன்றவள்; அழகுள்ள பொன் போன்ற வடிவத்தாள்; இரேகைகளையுடைய கண்ணெனும் நஞ்சுடையாள்; எதற்கும் அஞ்சாத் திண்ணிய மனத்தாள்; ஐந்து சடை முடிகளையுடைய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற மெய்யுணர்வுடைய ஆணவம் முதலிய அறியாமை இல்லாத திருக்குற்றாலநாதனை நெஞ்சிற் கொண்ட நினைவுடன் சிறந்த உண்மையான குறிகள் சொல்வதற்குக் குறவஞ்சி வந்தாள்,

(3) சொக்கட்டான் காய்களை யொத்த கொங்கைகளையும், இல்லையென்று சொல்லத்தக்க நுட்பமான இடையையும், வில்லையொத்த நெற்றியையும், முல்லை அரும்போடு மாறுபட்ட பற்களையும் உடைய ஒரு பூங்கொடி என்று சொல்லத்தக்க ஒப்பற்ற கொல்லிப் பாவையினும் மிக்க அழகுடையவள், மெல்லிய நல்லாள் இவளென்னும்படியான, வடக்கிலுள்ள பெரிய டில்லி நகர் வரையும் கூடப் புகழ் சென்று பிற்காலத்தில் ஒருவருக்கு நடக்கப் போகின்றவற்றைக் குறியால் சொல்லுகின்றவளும், இனிய பேச்சையுடைய நல்லவளும் இமயமலை அரசன் புதல்வியாகிய குழல்வாய்மொழியம்மையைச் சேர்ந்திருக்கின்றவராகிய குற்றால நாதருடைய முத்தமிழ்க் கல்வியையுடைய திருக்குற்றால மலையில் வாழ்கின்ற (குறவஞ்சி வருவாளானாள்.)

(4) மலையில் தோன்றும் மேகத்தின் மின்னற் கூட்டங்களென்னும்படி குன்றிமணி மாலை அவள் கொங்கைகளில் கிடந்தசையவும், மணம் வீசுகின்ற இளந்தென்றற் காற்றைப்போன்ற மெல்லிய மூச்சுவிடுகின்ற மூக்கின் பக்கத்திலுள்ள வாயினிடத்தே பொருந்திய முத்துக்கள் போன்ற பல்வரிசைகள் இலங்கவும்; ஒரு காதில் மன்மதனும் மற்றொரு காதில் இரதிதேவியும் விளங்குவது போல் காட்சியளித்துச் சென்று அலைகின்ற காதணிகள் ஒளிவிடவும், எந்தக்காலத்தும் எழுதிய சித்திரங்கள் நிறைந்த ஓவிய சபையில் திருக்கூத்தாடுகின்ற திருவடிகளையுடையவராகிய திருக்குற்றால நாதருக்குரிய எல்லாமலைகளையும் வெற்றிகொண்ட திருக்குற்றால மலையில் வாழ்கின்ற (குறவஞ்சி வருவாளானாள்;)

(5) அசைகின்ற இரண்டு காதுகளில் அணிந்துள்ள தோடுகளும் கூந்தலாகிய காடுகளும் இரு கண்களையும் தாக்கி நிற்கவும், மலையோடு மாறுபடுகின்ற கொங்கைகளானவை தம் மீது அணிந்துள்ள வெண்ணிற உத்தரிய ஆடையின் நடுவிடத்தே மேலெழுந்து மற்போர் புரிவது போல் அசையவும்; தோடி, முரளி, வராளி, பைரவி முதலிய இராகங்களின் சிறப்புத் தோன்றப் பாட்டுக்கள் பாடிக்கொண்டு மிக நீளமுள்ள மலை; மயில்கள் ஆடுகின்ற மலை: வானளவுயர்ந்து நிலாவைத் தன் மேற்கொண்ட மலையாகிய திரிகூடமலையில் வாழ்கின்ற (குறவஞ்சி வருவாளானாள்.)

(50)

கொச்சகக் கலிப்பா

முன்னம் கிரிவளைத்த முக்கணர்குற் றாலவெற்பில்
கன்னங் கரியகுழற் காமவஞ்சி தன்மார்பில்
பொன்னின் குடம்போல் புடைத்தெழுந்த பாரமுலை
இன்னம் பருத்தால் இடை பொறுக்க மாட்டாதே.

(பொ-ரை) முற்காலத்தில் மேருமலையை வில்லாக வளைத்த மூன்று கண்களையுடைய திருக்குற்றால நாதருக்குரிய திருக்குற்றால மலையில் கன்னங்கரேலெனக் கறுத்திருக்கின்ற கூந்தலையுடைய காமக் குறத்தியின் மார்பில் பொற்குடம் போலத் தோன்றி உயர்ந்திருக்கின்ற மிகக்கனமுள்ள கொங்கைகள் இனி மேலும் பருக்குமானால் (அச்சுமையை) இடையானது தாங்க மாட்டாதே. (கண்டோனொருவன் கூற.)

 
(வி.ரை) கிரி-இங்கே மேருமலை. கன்னங் கரியகுழல்-மிக்க கரிய கூந்தல். (51)