பக்கம் எண் :

வசந்தவல்லி, குறத்தியினது நாட்டுவளமும்
நகர்வளமும் வினாவுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கோட்டுவள முலைகாட்டும் கொடியின்வளம்
   இடைகாட்டும் குறிஞ்சி பூத்த
காட்டுவளம் குழல்காட்டும் மலைவளந்தான்
   நீயுரைத்துக் காட்டு வானேன்
தோட்டுவளம் புரிகாதர் குற்றால
   மலவளரும் தோகை யேஉன்
நாட்டுவளம் எனக்குரைத்துக் குற்றாலத்
   தலைவளமும் நவிலு வாயே.

(பொ-ரை) சங்கக்குழை வளம் செறிய அணிந்த காதினையுடைய திருக்குற்றால நாதருக்குரிய திருக்குற்றா மலைக்கண்வாழ்கின்ற மயில் போன்றவளே; யானைக் கொம்பின் அழகை உன் கொங்கைகள் காட்டுகின்றன; பூங்கொடியின் மென்மைச் சிறப்பை உன் இடையானது காட்டுகின்றது; குறிஞ்சிமலர்கள் நிறைந்துள்ள சிறப்பை உன் கூந்தலிலே அவற்றை அணிந்துள்ளமை காட்டுகின்றது; அத்தகைய மலையின் வளங்களை நீ எனக்குச் சொல்வானேன்; இனி உனது நாட்டினது வளப்பத்தையும் எனக்கு எடுத்துச் சொல்லி, திருக்குற்றால நாதரின் சிறப்பையும் எனக்கு எடுத்துச் சொல்வாயாக.



(வி-ரை)

கோடு - கொம்பு, இங்கு யானைக் கொம்பை உணர்த்திற்று. வளம் - சிறப்பு, அழகு போன்ற பல பொருள் குறித்த உரிச்சொல். குறிஞ்சி மலையில் தோன்றும் ஒருவகைச் செடி.

(55)


குறத்தி நாட்டுவளங் கூறுதல்

இராகம் - எதுகுல காம்போதி
தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) சூர மாங்குயிற் சின்னங்கள் காமத்
   துரைவந் தான்துரை வந்தானென் றூத
ஆல மாமுலை மின்னார் அவரவர்
    அல்குல் தேர்கள் அலங்காரஞ் செய்யப்
பார மாமதி வெண்குடை மிஞ்சப்
    பறக்குங் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத்
தேரின் மாரன் வசந்தன் உலாவுந்
    திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே;

(2)

காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்
    கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம்
வாரைச் சேர்ந்த முலைக்கிணை யாகும்
    மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி
நீரைச் சேர்ந்த மழைத்தாரை அம்பொடு
    நீளக் கொண்டலம் தேரேறி வெய்யவன்
தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லும்
    திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே;

(3)

சூழ மேதி இறங்குந் துறையிற்
    சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
    கொழும்ப லாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க
    வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடும்
    சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே;

(4)

அந்நலார்மொழி தன்னைப் பழித்ததென்
   றாடவர் மண்ணில் மூடுங் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர்
   தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று
பின்னும் ஆங்கவர் மூரலை வென்று
    பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்கும்
    கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே;

(5)

தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
    சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
    சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளையாடிய நாடு
    முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
    வசந்த ஆரிய நாடெங்கள் நாடே;

(6)

அஞ்சு நூறு மகம்கொண்ட நாடு
    அநேக கோடி யுகங்கண்ட நாடு
கஞ்ச யோனி உதிக்கின்ற நாடு
    கமலை வாணி துதிக்கின்ற நாடு
செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு
    செங்கண் மால்சிவன் ஆகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூட நாதர்
    வசந்த ஆரிய நாடெங்கள் நாடே;

(7)

மாத மூன்று மழையுள்ள நாடு
    வருட மூன்று விளைவுள்ள நாடு
வேத மூன்றும் பலாஉள்ள நாடு
    விசேட மூன்றுங் குலாவுள்ள நாடு
போத மூன்று நலஞ்செய்யும் நாடு
    புவன மூன்றும் வலஞ்செய்யும் நாடு
நாத மூன்றுரு வானகுற் றால
    நாதர் ஆரிய நாடெங்கள் நாடே;

(8)

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
    நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
    கழலக் காண்பது பூந்தளிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
    வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
    ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே;

(9)

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
    ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
    வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
    புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
    திருக்குற்றா லர்தென் ஆரியநாடே.