பக்கம் எண் :


கவிக் கூற்று

கண்ணிகள்

(1) மன்னர்திரி கூடநாதர் என்னும் போதிலே முகம்
  மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்;

குறத்தி சொல்லுதல்

(2) நன்னகரில் ஈசருன்னை மேவ வருவார் இந்த
  நாணமெல்லாம் நாளைநானும் காணவே போறேன்
(3) கைந்நொடியிற் பொன்இதழி மாலை வருங்காண் இனிக்
  கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே
(4) என்னுமொரு குறவஞ்சி தன்னை அழைத்தே அவட்கு
  ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே

(பொ-ரை)

(1) (குறவஞ்சியானவள் தன்குறிமுகத்திலே) உன் தலைவர் திரிகூடநாதர் என்று சொன்னபோதே மாணிக்கம் போன்ற சிறந்த வசந்தவல்லி நாணத்தால் முகம் குனிந்தாள்.

(2) இந்த நல்ல குற்றால நகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலநாதர் நாளைக்கே உன்னைச் சேர வருவார்; உன்னிடம் காணப்படும் இந்த நாணத்தையெல்லாம் அப்பொழுது நானும் பார்க்கத்தான் போகிறேன்.

(3) அம்மே! கைந்நொடி நேரத்துக்குள் பொன்போன்ற நிறமுடைய கொன்றைமலர்மாலை உனக்குக் கிடைக்கும்; அப்பால் உன்நாணத்தை யெல்லாம் இடுப்பில் வைத்துமறைத்துக் கொள்வாயோ அம்மா!

(4) என்று சொல்லிய குறத்தியைத் தன் பக்கத்தில் அழைத்து அவளுக்குத் தான் தேடிவைத்த எல்லாவகை அணிகளையும் அணிவித்தாள்.


(வி-ரை)

1.4 நாணம்-வெட்கம். நொடி-கைவிரலால் சுண்டும் அளவுநேரம். இதழிமாலை-கொன்றைமாலை. ஈட்டு-சம்பாதிக்கப்பட்ட.
(79)

சிங்கன், சிங்கியாகிய குறத்தியைத் தேடிவருதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாமாலைத் திரிகூடப் பரமரருள்
   பெறுவசந்தப் பாவை கூந்தல்
பூமாலை இதழிபெறப் பொன்மாலை
   மணிமாலை பொலிவாய்ப் பூண்டு
நாமாலைக் குறவஞ்சி நன்னகர்ப்பட்
   டணமுழுதும் நடக்கும் நாளில்
மாமாலைப் பூண்ட சிங்கன் வங்கணச்சிங்
   கியைத்தேடி வருகின் றானே.

(பொ-ரை)

பாட்டுகளாகிய மாலைகளைப் பூண்ட திருக்குற்றாலத்திலிருக்கின்ற பரமருடைய அருளைப்பெற்ற வசந்தவல்லியினது கூந்தலானது கொன்றை மலர் மாலையைப் பெறும் தன்மையைத் தன் நாவன்மையால் ஒழுங்காகக் குறி சொல்லிய குறத்தியானவள் (வசந்தவல்லி தந்த) பொன்மாலை, மாணிக்க மாலை முதலியவற்றை அழகுபெறப் பூண்டு நல்ல திருக்குற்றால நகரெங்கும் சுற்றித் திரிகின்ற நாளிலே அவளிடம் மிகக் காதல் மயக்கங் கொண்டவனாகிய சிங்கன் என்னும் பெயருடைய அவள் கணவன் தன்பால் அன்புடைய சிங்கியென்னும் பெயருடைய அக் குறத்தியைத் தேடி அங்கே வருவதானான்.


(வி-ரை)

நாமாலைக் குறவஞ்சி-நாவால் ஒழுங்காகக் குறி சொல்லிய குறத்தி. மாமாலை-மிக்க காதல் மயக்கம். வங்கணம்-மிகுந்த அன்பு. சிங்கி-குறத்தியின் பெயர்.
(80)

இதுவுமது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  வக்காவின் மணிபூண்டு கொக்கிறகு
     சிகைமுடித்து வரித்தோற் கச்சை
  தொக்காக வரிந்திறக்கித் தொடர்புலியைக்
     கண்டுறுக்கித் தூணி தூக்கிக்
  கைக்கான ஆயுதங்கள் கொண்டுசில்லிக்
     கோலெடுத்துக் கண்ணி சேர்த்துத்
  திக்கடங்காக் குளுவசிங்கன் குற்றாலத்
     திரிகூடச் சிங்கன் வந்தான்.

(பொ-ரை) கொக்கினின்றும் எடுத்த முத்தாலான மாலையை அணிந்து, தன்தலைமுடிமீது கொக்கினது இறகையெடுத்து அணிந்து, புலியினது தோலை வாய்ப்புள்ள இடுப்புக் கட்டுக் கச்சையாக ஒன்றின்மேலொன்றாக் இறுக்கிக் கட்டித், தன்னைப் பாயவந்த புலியைச் சினத்தால் துரத்தி, அம்பறாத் தூணியைத் தோளில் தொங்கவிட்டுக் கட்டித், தன் கைகளுக்கு ஏற்ற படைகளையும் எடுத்துக்கொண்டு, வளாரிச் சிறுகம்பையும் எடுத்துக்கொண்டு, பறவைகள் பிடிக்கும் கண்ணிகளையும் கூட எடுத்துக் கொண்டு, எட்டுத் திசைகளிலும் சிறந்த குளுவ சிங்கன் என்னும் குறக்குலத்தோனாகிய திருக்குற்றாலத்துத் திரிகூட மலையில் வாழுகின்ற சிங்கனென்பான் வருவதானான்.

(வி-ரை)

வக்கா-கொக்கு வகைகளில் ஒன்றாகிய பறவை. மணி-அதிலுண்டாகிய முத்து. சிகை-குடுமி. தொக்காக-வாய்ப்பாக. உறுக்கி-கோபித்து. சில்லிக்கோல்-வளாரிக்கம்பு; வளைந்த தடி. குளுவசிங்கன்-குளுவகுலத்தில் பிறந்தவனாகிய சிங்கன்.
(81)

வக்காவின் மணிசூடி வகைக்காரி சிங்கிவரும் வழியைத் தேடி
மிக்கான புலிகரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கிக்
கக்காஎன் றோலமிடும் குருவிகொக்குக் கேற்றகண்ணி
                                    கையில் வாங்கித்
தொக்கான நடைநடந்து திரிகூட மலைக்குறவன்தோன்றினானே.

(பொ-ரை)

வக்காமணியை அணிந்து, குறிவகை அறிந்த வளாகியசிங்கி வருகின்ற வழியைத்தேடி, மிகுந்த புலிகரடிகளும் கூடத் தன்னைக் கண்டால் கிடுகிடென்று நடுநடுங்கும்படி கோபித்துப் பார்த்து, 'கக்கா' என்று இரைச்சலிடுகின்ற பல்வகைக் குருவி இனங்களுக்கும் கொக்குகளுக்கும் தகுந்த கண்ணிகளைக் கையில் எடுத்துக்கொண்டு அதற்குத்தக்க நடை நடந்து திரிகூடமலைக் குறவன் வருவதானான்.


(வி-ரை)

வெறித்து-கோபித்து. ஓலம்-சத்தம்.
(82)