பக்கம் எண் :


இராகம்-அடாணா
தாளம்-சாப்பு

கண்ணிகள்

கொக்கிறகு சூடிக்கொண்டு
   குருவிவேட்டை ஆடிக்கொண்டு
வக்காவின்மணி பூட்டிக்கொண்டு
   மடவார்கண்போல் ஈட்டிக்கொண்டு
தொக்காக்கச்சை இறுக்கிக்கொண்டு
   துள்ளுமீசை முறுக்கிக்கொண்டு
திக்கடங்காக் குளுவசிங்கன்
   திரிகூடச் சிங்கன்வந்தான்.

(பொ-ரை)

கொக்கு இறகைத் தலையிலணிந்து கொண்டும் குருவி வேட்டையாடிக்கொண்டும், பெண்கள் கண்போன்ற ஈட்டியை எடுத்துக்கொண்டு, பொருத்தமாகக் கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டும் சினத்தால் துடிக்கின்ற மீசையை முறுக்கிக்கொண்டும் எட்டுத்திக்குகளிலும் அடங்காத குளுவச் சிங்கனாகிய திருக்குற்றாலச் சிங்கன் வருவதானான்.


(வி-ரை)

மடவார்-பெண்கள். ஈட்டி-ஆயுதம், வேல்.
(83)

சிங்கன் தன்வலிமை கூறுதல்

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

  ஆளிபோற் பாய்ந்துசுரும் பிசைகேட்கும்
      திரிகூடத் தமலர் நாட்டில்
  வேளைதொறும் புகுந்துதிரு விளையாட்டம்
     கண்ணிகுத்தி வேட்டை ஆடி   
  ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்
     ஒளிபோட்டு நரிபோற் பம்மிக்  
  கூளிபோல் தொடர்ந்தடிக்கும் திரிகூடச்
     சிங்கனெனும் குளுவன் நானே. 

(பொ-ரை)

வண்டின் இன்னொலி எங்கும் முழங்குகின்ற திரிகூடத்து இறைவர் நாட்டில் எந்த நேரமும் சென்று, சிறந்த விளைநிலங்களில் பறவை பிடிக்கும் கண்ணிகளைப் பதித்து, நாய் போல் தடங்கண்டுபிடித்துப் பூனைபோல் பதுங்கியிருந்து, நரிபோல் ஒடுங்கியிருந்து, பேய்போல் தொடர்ந்து சிங்கம்போல் பாய்ந்து அடிக்கின்ற திரிகூடச்சிங்கன் என்று சொல்லப்படுகின்ற குளுவன் என்பவன் நானே.


(வி-ரை)

ஆளி-சிங்கம். சுரும்பு-வண்டு. திருவிளையாட்டம்-சிறந்த விளைநிலம். ஞாளி-நாய். சுவடு எடுத்து-தடங்கண்டு பிடித்து. பம்மி-ஓடுங்கி. கூளி-பேய்.
(84)


இதுவுமது

இராகம்-தன்னியாசி
தாளம்-ஆதி
கண்ணிகள்

(1) தேவருக் கரியார் மூவரிற் பெரியார்
      சித்திர சபையார் சித்திர நதிசூழ்
  கோவிலில் புறவில் காவில் அடங்காக்
      குருவிகள் படுக்கும் குளுவனும் நானே.

(2)

காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
      கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்துப்
  பாதகர் தோலால் பலதவில் அடித்துப்
      பறவைகள் படுக்கும் குறவனும் நானே.

(3)

தலைதனில் பிறையார் பலவினில் உறைவார்
      தகையினை வணங்கார் சிகைதனைப் பிடித்தே
  பலமயிற் நறுக்கிச் சிலகண்ணி முறுக்கிப்
      பறவைகள் படுக்கும் குளுவனும் நானே;

(4)

ஒருகுழை சங்கம் ஒருகுழை தங்கம்
      உரியவி நோதர் திரிகூட நாதர்
  திருநாமம் போற்றித் திருநீறு சாற்றும்
      திரிகூட நாமச் சிங்கனும் நானே.

(பொ-ரை)

(1) தேவர்களுக்கு அரியவரும் மூவர்களில் பெரியவரும் சித்திரசபையில் உள்ளவரும் ஆகிய திருக்குற்றால நாதரின் சித்திரநதியைச் சூழ்ந்த கோவிலிடத்திலும் காடுகளிலும் சோலைகளிலும் இருக்கின்ற அளவிறந்த குருவிகளையெல்லாம் பிடிக்கும் குளுவனென்று புகழப்படுகின்றவன் நானே;

(2) அன்பைப் பெருக்கும் திருவைந்தெழுத்துக்குரியவருடைய உண்மையறிவைத் தருகின்ற திருநீறணியாதவருடைய கைகளில் நரம்பை வெட்டி எடுத்துக் கின்னரம் என்னும் யாழுக்கு நரம்பாகக் கட்டி, அந்தப் பாவிகளுடைய உடம்புத் தோலினால் செய்த பல முழவுகளை முழக்கிப் பறவைகளைப் பிடிக்கும் குறவனும் நானே;

(3) தலையில் இளமதி சூடியவரும் குறும்பலாவினடியில் எழுந்தருளியிருக்கின்றவருமான திரிகூடநாதரை, அவர் பெருமையை நினைத்து வணங்காதவர்களுடைய குடுமியைப் பிடித்து, அதன் பல மயிர்களையும் கத்தரித்து, அவற்றைத் திரித்துச் சில கண்ணிகளாக ஆக்கி வைத்துக்கொண்டு, பறவைகளைப் பிடிக்கின்ற குளுவனும் நானே;

(4) ஒரு காதில் சங்கக்குண்டலத்தையும் மற்றொரு காதில் பொன் குண்டலத்தையும் அணிந்திருக்கின்ற (இரண்டு வேறுபட்ட திருவுருவமைந்த) வியப்புடைய திரிகூடநாதரின் திருப்பெயர்களை ஓதி வணங்கித், திருநீறணிகின்ற திரிகூடமலையில் வாழ்கின்ற எவருக்கும் அச்சந்தருகின்ற சிங்கனென்னும் பெயருடையவன் நானே.


(வி-ரை)

1-4 புறவு-காடு. படுக்கும்-பிடிக்கும். அஞ்செழுத்தார்-ஐந்தெழுத்துக்கு உரியவர். போதம்-உண்மையறிவு. தகை-பெருமை, ஒரு குழை சங்கும் மற்றொரு குழை தங்கமுமென்றது, இறைவன் பாகத்தையும் அம்மைபாகத்தையும் கொண்டு. விநோதர்-வியக்கத்தக்கவர்.
(85)

நூவன் வருதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


புலியொடு புலியைத் தாக்கிப் போர்மத யானை சாய்க்கும்
வலியவர் திரிகூ டத்தில் மதப்புலிச் சிங்கன் முன்னே
கலிகளும் கதையும் பேசிக் கையிலே ஈட்டி வாங்கி
எலிகளைத் துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான்.

(பொ-ரை)

தாருகாவனத்து முனிவர்கள் விட்ட புலியுடன் தக்கன்யாகத்தில் வந்த சந்திரனையும், யானையையும் அழித்த வல்லவருடைய திரிகூடத்தில் வலிய புலிபோலும் சிங்கன் முன்னே, வஞ்சப் பேச்சும் கதையும் பேசிக் கையிலே ஈட்டி தாங்கி எலிகளைத் துரத்தவல்ல வீரனாகிய, ஈப்புலிபோலப் பாயும் குளுவன் தோழனாகிய நூவன் என்பவனும் வருவதானான்.


(வி-ரை)

புலியொடு புலி-தாருகாவன முனிவர் விட்ட புலியுடன் தக்கன் வேள்விக்கு வந்த சந்திரன். அம்புலி எனற்பாலது புலியெனநின்றது, முதல் குறை. மதப்புலி-வலிய புலி. நூவன்-நூவன் என்னும் பெயருடைய குறவர்களுக்குத் தோழனான ஒருவன்.
(86)