பக்கம் எண் :


(5) மன்னன் கிளுவையிற் சின்னணைஞ் சேந்த்ரன்
     வடகரை வீட்டுக்கு மந்திரி யாகவும்
  செந்நெல் மருதூர்க்கு நாயக மாகவும்
     தென்காசி ஊருக்குத் தாயக மாகவும்
  தன்னை வளர்க்கின்ற குற்றால நாதர்
     தலத்தை வளர்க்கின்ற தானிக னாகவும்
  நன்னகர்க் குற்றாலத் தந்தாதி சொன்னவன்
     நள்ளார்தொழும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம்;
(6)
நன்னகர் ஊட்கட்டிச் சாலை மடங்கட்டி
     நாயகர் கோவிற் கொலுமண்ட பங்கட்டித்
  தென்ன மரம்பர மானந்தத் தோப்பிட்டுத்
     தெப்பக் குளங்கட்டித் தேர்மண்ட பங்கட்டிப்
  பன்னுந் திரிகூடத் தம்பலங் கட்டிப்
     பசுப்பிரை கோடி திருப்பணி யுங்கட்டி
  அந்நாளில் தர்மக் களஞ்சியம் கட்டும்
     அனந்த பத்மநாபன் கட்டளைப் பற்றெல்லாம்; (மே)
(7)
தந்தைமுன் கட்டின அம்பலத் துக்கும்
     தருமத் துக்கும்நிலைக் கண்ணாடி போலவே
  எந்தையார் வாசலிற் பிள்ளையார் செய்வித்து
     இரண்டு குறிஞ்சிப் படித்துறை யுஞ்செய்த
  கொந்தார் புயத்தான் இராக்கதப் பெருமாள்
     குற்றால நாதன்முன் உற்ற சகோதரன்
  வந்தனை சேர்சங்கு முத்துதன் மைத்துனன்
     மன்னன் வயித்திய நாதன் திருத்தெல்லாம்; (மே)

(8)

ஆர்மேல் வருகின்ற துன்பமும் நீக்கி
     அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி
  ஊர்மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி
     உடையவர் குற்றாலர் பூசைநை வேத்தியம்
  தேர்மேல் திருநாளும் தெப்பந் திருநாளும்
     சித்திர மண்டபம் சத்திரம் சாலையும்
  பார்மேல் வளஞ்செய் அனந்த பத்மநாபன்
     பாலன் வயித்திய நாதன் திருத்தெல்லாம்; (மே)

(9)


ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை
     அன்பன் திருமலைக் கொழுந்துதன் கட்டளை
  நாறும்பூக் குற்றாலச் சங்கதன் கட்டளை
     நங்களொல லாரரி நரபாலன் கட்டளை
  வீறுசேர் பால்வண்ணச் சங்குதன் கட்டளை
     மிக்கான ஓமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன்
  பேறுடைப் பம்பை வருசங்கு முத்துதன்
     பேரான கட்டளைச் சீரான பற்றெல்லாம்; (மே)

(10)

தானிகன் சர்க்கரைப் பண்டாரம் என்னுந்
     தணியாத காதற் பணிவிடை செய்கின்ற
  மேன்மை பெறுஞ்சுந் தரத்தோழன் கட்டளை
     மிக்க கருவைப் பதிராம நாயகன்
  நானில மும்புகழ தாகந்தீர்த் தானுடன்
     நல்லூர் வருசங் கரமூர்த்தி கட்டளை
  ஆன சடைத்தம்பி ரான்பிச்சைக் கட்டளை
     அப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்றெல்லாம்; (மே)

(பொ-ரை)

(1) ஐயே! பறவைகள் மேய்கின்றன; பறவைகள் மேய்கின்றன.

(2) மேய்கின்றன ஐயே! திருக்குற்றாலநாதர் பெரிய குல சேகரப்பட்டிக் குளங்களிலும் ஆயிரப் பேரியிலும் தென்காசியிலும் சுற்றி அயிரை, தேளி ஆரல் முதலிய மீன்களையெல்லாம் கொத்தி மேய்கின்றன ஐயே!

(3) திருக்குற்றாலநாதர் திருக்கோவிலைச் சுற்றி மதிலமைத்து அறஉணவு விடுதியும்கட்டி தென்காசிக்குப் பாலமும் அமைத்துப் படித்தரமும் அமைத்து, திருக்குற்றாலநாதரின் தொண்டர்களைக் காப்பதற்குக் கொடியும் கட்டித் திருமாலும் நான்முகனும் வணங்குகின்ற திருக்குற்றால நாதருடைய வழிவழியாகத் தொண்டு செய்து வருவதற்கு உறுதி கொண்டிருக்கின்ற சிறந்தவனான, கிளுவையென்னும் பெயருடைய சொக்கம்பட்டியில் வாழ்கின்ற சின்னணைஞ் சேந்திரன் என்பவன், சிறுகாலமாகிய ஆறுவகைச் சந்திக்கு விட்டுள்ள திருத்துப்புறவென்னும் வயல்களிலெல்லாம் (மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன)

(4) படைத்தலைவனான வைத்தியப்பன் என்பவன் பெற்ற சைவ சமய முதல்வனும், அறத்திற்கு இருப்பிடமும், சேனைச் சவரிப் பெருமானின் பின் பிறந்தவனும், செல்வனுமான மருதூரில் வாழ்கின்ற வைத்தியப்பன் என்பவனுடன், பெருமையுடையவனாகிய குற்றாலநாதன் என்பவனைப் பெற்ற தந்தையும் கொடையில் சிறந்தவனுமான பிச்சைப்பிள்ளையுடைய வயல்களிலெல்லாம் காட்டுக்குளத்தின் உட்கிடையான கீழைப் புதுக்குளத்துக் கற்பூரக்கால் பற்று என்னும் வயலிலும் தட்டாங்குளச் சுற்று என்னும் வயலிலும் (மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன),

(5) அரசனான சொக்கம்பட்டி சின்னணைஞ்சேந்திரனுடைய வடகரை வீட்டுக்கு மந்திரியாகவும், செந்நெல் விளைகின்ற மருதூருக்குத் தலைவனாகவும், தென்காசி நகருக்குத் தாய் பிறந்த இடம் போலவும் தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் திருநகராகிய திருக்குற்றாலநகரை மேம்படச் செய்கின்ற செயலாளனாகவும், திருக்குற்றாலத்து அந்தாதி பாடிய புலவரான பகைவரும் வணங்கும் பிச்சைப் பிள்ளையுடைய வயல்களிலெங்கும், (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).

(6) நல்ல ஊர்களை உண்டாக்கி படிப்பகம், மடம் முதலியவற்றைக் கட்டி முடித்து சோமாஸ்கந்தர் கோயிலில் கொலுமண்டபம் கட்டி முடித்து, மிக்க இன்பந்தரும் தென்னைமரத் தோப்பையும் உண்டாக்கி தெப்பக்குளம் அமைத்து தேர் மண்டபம் அமைத்து, யாவராலும் புகழப்படும் திரிகூடச் சபையையும் கட்டி பசுச்சாலைகள் மிகுதியாகக் கட்டி, இன்னும் திருப்பணிகள் வேண்டுவதெல்லாஞ் செய்து, அக்காலத்திலேயே அறவிடுதிகள் பல கட்டியமைத்த அனந்தபத்மநாபன் திருக்கோவில் படித் தரத்துக்காக விடப்பட்ட வயல்களிலெல்லாம் (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன)

(7) தந்தையார் அமைத்த ஊரம்பலகட்டிடமும் அறத்துக்கு நிலைக்கண்ணாடிபோல் எவரும் அறியும்படி எம்தந்தையாராகிய திரிகூடநாதப் பெருமான் திருச்சந்தியில் பிள்ளையார்ப் பெருமான் திருவுருவைச் செய்வித்தும், இரண்டு சிறு படித்துறைகளும் அமைத்த பூமாலை அணிந்த தோள்களையுடைய இராக்கதப் பெருமாள் என்னும் பெயருடையவனுக்கும் குற்றாலநாதன் என்னும் பெயருடையவனுக்கும் தமையனும், எவராலும் போற்றத்தக்க சங்க முத்துவின் மைத்துனனுமான புகழ்பொருந்திய வைத்தியநாதன் என்பவனுடைய வயல்களிலெல்லாம்.(பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).

(8) எவரிடத்தும் வருவதான துன்பங்களையெல்லாம் நீக்கி தமக்குப் பகைவர்கள் செய்யும் குறும்புகளையும் அடக்கித் தென்காசியில் உயர்ந்த நீதிநெறியை நிலைநிறுத்தி, நம்மையுடையவராகிய திருக்குற்றாலநாதரின் பூசை, நைவேத்தியத்துடன், தேர்த்திருநாளும், தெப்பத் திருநாளும், சித்திரை மண்டபமும், அறஉணவு விடுதியும், பொருப்பாதைகளும் இவற்றையெல்லாம் பூமியிலே வளம்பெற அமைத்த அனந்தபத்மநாபன் மகனான வைத்தியநாதன் வயல்களிலெல்லாம் (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).

(9) ஆற்றூர் அழகப்பவேள் கட்டளைச்செய், இறைவன் பால் அன்புடைய திருமலைக்கொழுந்து கட்டளைச்செய், மணங்கமழும் மலர்செறிந்த குற்றாலர் சங்கு கட்டளைச்செய், நம்முடைய பகைவர்களுக்குச் சிங்கம்போன்ற நரபாலன் கட்டளைச் செய், பெருமை பொருந்திய பால்வண்ணச்சங்குவின் கட்டளைச் செய், சிறந்த ஓமநல்லூர் வணிகர் தலைவனான கிருஷ்ணனுடைய கட்டளைச் செய், பைம்பொழிற் பட்டினத்துச் சங்கு முத்துவின் பெரியகட்டளைச்செய், முதலிய விளைவுச்சிறப்புமிக்க வயல்களிலெல்லாம், (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன)

(10) கோவிற் காரியக்காரணான சர்க்கரைப் பண்டாரம் என்னும் குறையாத ஆசையொடு பணிவிடை செய்கின்ற மேன்மை பெற்ற சுந்தரத்தோழன் கட்டளைச் செய், மிக்க கரிவலம் வந்த நல்லூர் இராமநாயகனுடைய கட்டளைச்செய், உலகமெல்லாம் புகழ்கின்ற தாகம் தீர்த்தான் என்னுஞ் செய்யுடன் ஓமநல்லூரில் தோன்றிய சங்கரமூர்த்தி கட்டளைச்செய், சிறப்புடைய சடைத்தம்பிரான் பிச்சைக் கட்டளைச் செய் மலைநாட்டார் கட்டளைச் செய் முதலியவற்றிலெல்லாம் (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).


(வி-ரை)

1-10. துசம் - துவசம்; கொடி. வழித்தொண்டு - பரம்பரையடிமை. தானை - படை. மானவன் - பெருமையுடையவன். தாயகம் - தாய் பிறந்த இடம். தானிகன் - காரியக்காரன். பசுப்பிரை - பசுக்கள் நிற்குமிடம். அம்பலம் - சபை. அடங்கார் - பகைவர். பூபாலன் - மன்னன். ஒல்லார் - பகைவர். அரி -
அழிக்கின்றவன். பம்பை - பைம்பொழிற்பட்டணம். கருவைப்பதி - கரிவலம்வந்த நல்லூர். இக்கண்ணியில் முதற்கண் வருகின்ற மேயினும் என்பது, மேய்கின்ற என்னும் பொருளது. கானக்குறவன் ஆனதால் திருந்திய பேச்சில்லாது வழுச்சொல்லாகக் கூறுகின்றான். இது மரூஉ மொழி என்னும் சேரிமொழி என்றும் கூறுவர், தொல்காப்பியர் போன்ற பண்டைய ஆசிரியன்மார்.

(93)

சிங்கன் சிங்கியை நினைத்துக் கூறுதல்

கொச்சகக் கலிப்பா


  செட்டிக் கிரங்கிவினை தீர்த்தவர்குற் றாலர்வெற்பிற்
  சுட்டிக் கிணங்குநுதற் சுந்தரியாள் கொங்கையின்மேல்
  முட்டிக் கிடந்துகொஞ்சி முத்தாடிக் கூடிநன்றாய்க்
  கட்டிக் கிடக்கமுலைக் கச்சாய்க் கிடத்திலனே.


(பொ-ரை)

கண்டகசேதனன் என்னும் வணிகனுக்கு அருள்கூர்ந்து அவன் வினைதீர்த்தருளியவராகிய திருக்குற்றாலநாதரின் மலையில், நெற்றிப்பட்டம் என்னும் அணிபொருந்திய நெற்றியையுடைய அழகியான என் சிங்கியின் கொங்கைகளின் மேல் தலையால் முட்டிக் கிடந்து கொஞ்சி முத்தமிட்டுச்சேர்ந்து நன்றாக அணைத்துக்கொண்டு கிடப்பதற்கு அவள் கொங்கைகளின் கச்சாகக் கிடக்கும் பாக்கியம் பெற்றேனல்லேனே.

 
(வி-ரை)

செட்டி-கண்டகசேதனன் என்னும் வணிகன். முத்தாடி-முத்தமிட்டு; முத்தாடு; பகுதி. கட்டிக் கிடக்க-அணைத்துக்கொண்டு படுக்க. கச்சு-இரவிக்கை. கிடந்திலன்-இருந்தேனல்லனே.

(94)

சிங்கன், குளுவனைப்பார்த்துக் கண்ணிகொண்டு
வரச்சொல்லுதல்

இராகம் - கல்யாணி
தாளம் - சாப்பு்
 

பல்லவி

(1) கண்ணிகொண்டு வாடா குளுவா! கண்ணிகொண்டுவாடா
 


அனுபல்லவி

(2) கண்ணி கொண்டு வாடா பண்ணவர் குற்றாலர்
     காரார் திரிகூடச் சாரலி லேவந்து
  பண்ணிய புண்ணியம் எய்தினாற் போலப்
     பறவைக ளெல்லாம் பரந்தேறி மேயுது; (கண்)
 

சரணங்கள்

(3) மானவர் சூழும் மதுரையிற் பாண்டியன்
     மந்திரி யார்கையில் முந்திப் பணம்போட்டுத்
  தானாசைப் பட்டுமுன் கொண்ட கொக் கெல்லாம்
     தரிகொண்டு தில்லை நரிகொண்டு போச்சுது
  கானவர் வேடத்தை ஈனமென் றெண்ணாதே
     காக்கை படுத்தான் கருமுகில் வண்ணனும்
  மேனாட்படுத்திட்ட கொக்கிற கின்னும்
     விடைமேல இருப்பார் சடைமேல் இருக்குது; (கண்)

(4)

முன்னாட் படுத்த பரும்பெருச் சாளியை
     மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்
  பின்னான தம்பியார் ஆடும் மயிலையும்
     பிள்ளைக் குறும்பாற் பிடித்துக் கொண் டேகினார்
  பன்னரும் அன்னத்தை நன்னகர் ஈசர்
     பரிகலம் ஈர்ந்திடும் பார்ப்பானுக் கீந்தனர்
  வன்னப் பருந்தொரு கள்வன் கொடுபோனான்
     வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே; (கண்)

(5)


மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
     வேட்குற வன்முதல் வேட்டைக் குப்போனநாள்
  ஆறுநாட் கூடீ ஒருகொக்குப்பட்ட
     தகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
  சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
     தாமும்கொண்ட டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
  பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
     பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே. (கண்)