பக்கம் எண் :

சிங்கன், சிங்கியைக் குறித்துச் சொல்லுதல்

கொச்சகக்கலிப்பா


  கள்ளுலவு கொன்றையந்தார்க் கர்த்தர்திரி கூடவெற்பிற
  பிள்ளைமதி வாள்நுதலான் பேசாத வீறடங்கத்
  துள்ளிமடி மேலிருந்து தோளின்மேல் ஏறி அவள்
  கிள்ளைமொழி கேட்கவொரு கிள்ளையா னேனில்லையே

(பொ-ரை)

தேன் பொருந்திய கொன்றைமலர்மாலையை அணிந்த தலைவரான திரிகூடநாதருக்குரிய திரிகூடமலையில்வாழ்கின்ற மூன்றாம் பிறையைப்போன்ற நெற்றியையுடைய என் காதற் சிங்கியானவள், தன் பேச்சின் சிறப்புக் குன்றும் படியாகவும் அவள்மடிமீது குதித்துச்சென்று மடிமேல் இருந்தும் தோள்மேல் ஏறியும். அவளின் கிளிமொழி போன்ற மழலைச் சொற்களைக் கேட்பதற்கு, நான் ஒரு கிளியாகவாவது பிறந்தேனில்லையே; (கிளியாகப் பிறந்திருந்தால் அவள் மொழியைக் கிட்ட இருந்தே கேட்பேனே என்கின்றான் சிங்கன்.)

(98)

சிங்கன், நூவனைப் பேசாதிருக்கக் கூறுதல்

இராகம் - கல்யாணி
தாளம் - ஆதி
 
பல்லவி
(1) கெம்பா றடையே! பொறுபொறு கெம்பா றடையே!  ( கெ)
 

அனுபல்லவி
(2) கெம்பா றடையே! நம்பர்குற் றாலர்
     கிருபைப் புறவிற்பறவைபடுக்கையில்
  வம்பாக வந்தஉன் சத்தத்தைக் கேட்டல்லோ
     வந்த குருவி கலைந்தோடிப் போகுது.
 

சரணங்கள்
(3) ஏறாதமீன்களும் ஏறி வருகுது
     எத்திசைப் பட்ட குருகும் வருகுது
  நூறாறு கண்ணியைப் பேறாகக் குத்தியே
     நூவனும் நானும் இருந்தோம் உனக்கினிப்
  பேறான சூளை மருந்தா கிலும்பிறர்
     பேசாமல் வாடைப் பொடியா கிலுமரைக்
  கூறாகிலும் ஒரு கொக்கா கிலும்நரிக்
     கொம்பா கிலுந்தாரேன் வம்புகள் பேசியே;        (கெ)
   
(4) பூசிஉடுத்து முடித்து வளையிட்டுப்
     பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக்
  காசு பறித்திடும் வேசையர் ஆசாரக்
     கண்ணிக்குள் ளேபடும் காமுகர் போலவும்
  ஆசார ஈனத் துலுக்கன் குதிரை
     அடியொட்டுப் பாறை அடியொட்டி னாற்போலும்
  தசத்துக் கொக்கெல்லாம் கண்ணிக்குள் ளேவந்து
     சிக்குது பார்கறி தக்குது பார்இனிக்;      (கெ)
   
(5) ஆலாவும் கொக்கும் அருகே வருகுது
     ஆசாரக் களவர்போல் நாரை திரியுது
  வேலான கண்ணியர் ஆசையி னாற்கீழும்
     மேலும் திரிந்திடும் வேடிக்கைக் காரர்போல்
  காலால் திரிந்து திரிந்து திரிந்தெங்கள்
     கண்ணிக்குள் ளாகும் பறைவையைப் போகட்டுப்
  பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்திற்
     பல்லொடிக் கச்சிறு கல்லகப் பட்டாற்போல்      (கெ)

(பொ-ரை)

(1) அடே அப்பா! உரத்துப்பேசாதேடா! சற்று பொறுபொறு, உரத்துப் பேசாதே அடா!

(2) உரத்துப்பேசாதே அடா! யாவரும் நம்பத்தக்கவரான திருக்குற்றால நாதருக்குரிய அருள் பெற்றவயல்களின் பறவைகளை பிடிக்கின்றபோது வீணாக நீ பேசிய உன்குரலைக் கேட்டன்றோ பறந்து வந்த குருவி கொக்கு நாரை முதலியன எல்லாமும் கலைந்தோடிப் போய்விட்டன. (அடே அப்பா! உரத்துப் பேசாதே! இனிச் சத்தம் போடாதே!)

(3) ஏறாத மீன்களும் ஏறி வருகின்றன; எல்லாத் திசைகளிலும் இருக்கின்றன வான பறவைகளும் பறந்து இங்கே வருகின்றன; கணக்கில்லாதபடி கண்ணிகளை நமக்குப்பயன்படும்படி கீழே பதித்து நூவனும் நானுமாக இ்ங்கே காத்திருந்தோம்; இப்பொழுது உனக்குப் பயன்படக்கூடிய வேசையர்களை மயக்கும் மருந்தையாவது அடுத்தவர்கள் பேசாது இருக்கும்படியான வாடைப் பொடியையாவது (இங்கே பறவைகள் பிடிபடுமானால் அவற்றில் உனக்குப்பாதிப் பங்காகிலும் ஒரு கொக்காவது நரிக்கொம்பாவது தருகின்றேன். மேலும் வீண்வார்த்தைகள் பேசி வீணாகச் சத்தம் போடாதே அடே! உரத்துப் பேசாதே!)

(4) மணம்பொருந்திய கலவைச் சாந்தும், மண்எண்ணெய் (தைலம்) முதலியவற்றை உடலில் பூசிக் கூந்தலைவாரி முடித்துக் கையில் வளையவிட்டு, நல்ல உடை உடுத்து, நெற்றியில் பொட்டிட்டுக் கண்ணுக்கு மையெழுதி, பொன் நகைகள் பூண்டு, மலர்கள் முடித்துத், தம்மை அழகுபடுத்திக் காசு பறிக்கின்ற வேசைகளின் பொய்யொழுக்கமாகிய வலைக்குள் சிக்கிகொள்ளுகின்ற காமங்கொண்ட ஆடவர்களைப் போலவும், ஒழுக்கங்கெட்ட துலுக்கன் ஒருவனுடைய குதிரையானது போனபோது அதன் கால்கள் பாறையின் அடியை ஒட்டிக்கொண்டு மேலே செல்ல மாட்டாமல் நின்றது போலவும் நம்நாட்டிலுள்ள கொக்கு முதலிய பறவைகள் எல்லாம் கண்ணிக்குள் வந்து சிக்கி அகப்பட்டுக் கொண்டதைப் பாரடா! இனி நமக்கு அவற்றின் தசைக்கறிகள் கிடைத்து விட்டது பாரடா! (இனி உரத்துப் பேசாதே அடே அப்பா)

(5) ஆலாவும் கொக்கும் அண்மையில் வருகின்றன; திருட்டில் தேர்ந்த கள்வர்களைப் போல் நாரைகள் இரை பொறுக்கத் தருணம் பார்த்துக் கொண்டு திரிகின்றன! வேல் போன்ற கண்களையுடைய பெண்களின் ஆசையினாலே அங்குமிங்கும் சுற்றிச் சுற்றித்திரிகின்ற காமங்கொண்ட தூர்த்தர்களைப்போல் தம் கால்களினால் மெல்லமெல்ல நடந்துவந்து எங்கள் கண்ணிக்குள் அகப்படுகின்ற பறவைகளை உன் சத்தத்தால் போகும்படி செய்து பாலும் நெய்யும் ஆறுபோல பெருக்ககிடைத்து உணவுஉண்ணும் பாலும் நெய்யும் ஆறுபோல் பெருக்கெடுத்து உணவுஉண்ணும் போது உதட்டில் பற்கள் முரிந்து விழும்படி ஒரு சிறு கல் வந்து சேர்ந்து தடைப்படுத்துவது போல, நீயும் பறவை பிடித்தற்குப் தடையாக, (அடே அப்பா! உரத்துப் பேசாதே.)






(வி-ரை)

1-5 கெம்பாறடையே!-கெம்பாதே; வேடர்கள் பேசுகின்ற பேச்சு; குழூஉக்குறி. கெம்புதல்-சத்தம் போடுதல். கெம்பர்தேசத்தம் போடாதே. கெம்பாதே-கெம்பாறை என வழுவாக வந்து வழுவமைதி, அட+ஐயே-அடையே என நிலைமொழி. அகரம் கெடப் புணர்ந்தது; அடே அப்பா என்பது பொருள். வம்பு-வீண். சூளை மருந்து-வேசையர்களை மயக்கும் மருந்து. கூறு-பங்கு. ஆசாரக் கண்ணி-பொய்யொழுக்கமாகிய வலை. அடியொட்டுப் பாறை-குதிரை அடியெடுத்து வைக்கமாட்டாமல் ஒட்டிக்கொண்டு நின்ற பாறை. ஒருதுலுக்கன் திருக்குற்றாலமலைக்கு நேரேகுதிரை மீதேறி வந்தானென்றும் அங்குச் சுவாமி திருச்சன்னிதி இருக்கின்றது, போகக்கூடாதென்று கண்டவர்கள் கூறினார்களென்றும், அவன் அதைப் பொருட்படுத்தாமல் குதிரையைப் போகத் தூண்டினானென்றும் அப்பால் குதிரை செல்லமாட்டாது அதன்கால்கள் பாறையில் ஒட்டிக்கொண்டு மடிந்ததென்றும் கூறும் திருக்குற்றாலத்தலபுராண வரலாற்றை உட்கொண்டு இவ்வாறு கூறினார்; ஓட்டம் ஒஷ்டம் என்னும் வடசொல்; உதடு என்பது பொருள். தாக்குதல்-தங்குதல்; இங்கே கிடைத்தல்.


(99)

கவிக்கூற்று

எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவிகுழல் வாய்மொழிப்பெண் நாச்சி யார்கால்
    செண்பகக்கால் திருத்தமதிசூடி னார்கால்
காவிவயல் வெண்ணமடை தட்டான் பற்றுக்
    கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன் மூலை
வாவிதோறும் நின்றுசிங்கன் வேட்டையாடி
    வடவருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால்
கோவில்விளை யாட்டம்எங்கும் கண்ணி குத்திக்
    கூவினான் நூவனைவிட் டேவினானே.
(பொ-ரை)

தேவியாகிய குழல்வாய்மொழி அம்மையின் வாய்க்கால்செய், செண்பகக்கால்செய், அழகாகப் பிறையை முடியிலணிந்த திருக்குற்றாலநாதரின் வயல்கள், குவளைமலர்கள் நிறைந்த வயல்கள், வெண்ணமடைச் செய், தட்டான்செய், கள்ளிகுளச்செய், அழகர் பள்ளச்செய், கூத்தன் மூலைச்செய், இன்னும் பல நீர்நிலைகள்தோறும் நின்று, சிங்கனானவன் பறவை வேட்டையாடி வடஅருவி ஆற்றுக்கால், வடகால், தென்கால், கோவில் விளையாட்டச்செய் ஆகிய எல்லா இடங்களிலும் கண்ணிகளைப் பதித்துப் பறவைகளை அழைத்தவனாய் நூவனை அப்பறவைகளைப் பிடித்து வரச்சொல்லி அங்கே அனுப்பினான்.



(100)

சிங்கன் பறவைகள் மேய்வதைச் சொல்லுதல்

இராகம்-தர்பார்.
தாளம்-சாப்பு.
கண்ணிகள்

(1) கல்வித் தமிழ்க்குரியார் திரிகூடக் கர்த்தர்பொற் றாள்பரவும்
செல்வக் கடலனையான் குற்றாலச் சிவராமநம்பி எங்கோன்
வல்ல மணியபட்டன் பெருமை வளர்சங்கு முத்துநம்பி
வெல்லுங்குற் றாலநம்பி புறவெல்லாம் மீன்கொத்திக் கூட்டமையே
(2) சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணிச் செல்வப் புதுக்குளம்
காராளன் சங்குமுத்து திருத்தொடைக் காங்கேயம் கட்டளையும்
மாராசன் தென்குடிசை வயித்திய நாதன் புதுக்குளமும்
தாராள மானபுள்ளும் வெள்ளன்னமும் தாராவும் மேயுதையே.
(3) தானக் கணக்குடனே சீபண்டாரந் தன்மபத் தர்கணக்கும்
வானவர் குற்றாலர் திருவாசல் மாடநற் பத்தியமும்
நானிலஞ் சூழ்குடிசை வைத்திய நாத நரபாலன்
தானபி மானம்வைத்த சிவராமன் சம்பிர திக்கணக்கும்
(4) வேதநா ராயணவேள் குமாரன் விசைத் தொண்டை நாடாளன
சீதரன் முத்துமன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாம்
காதலாய்க் கண்ணிவைத்துப் பறவைக்குங் கங்கணங்கட்டி நின்றேன்
ஏதோ ஒருபறவை தொடர்ந்துவந் தென்னைக் கடிக்குதையே.

(பொ-ரை)

(1) கற்கத்தக்க தமிழுக்கு உரியவராகிய திரிகூட நாதரின்பொன்போலும் திருவடிகளை வணங்குகின்ற செல்வத்திற் கடல்போல் மிகுந்தவனும் குற்றாலநகரில் வாழ்கின்ற சிவராமனென்னும் பேருடைய ஆண்டகையும், எனக்குத் தலைவனாகிய வல்ல மணிப்பட்டனும், பெருமை மிக்க வளர்கின்ற சங்குமுத்து நம்பியென்பானும், யாரையும் வெல்லுகின்ற குற்றால நம்பி யென்பானுமாகிய இவர்களுக்குரிய வயல்களிலெல்லாம் மீன் கொத்திப் பறவைகளின் கூட்டங்கள் நிறைந்துள்ளன அப்பா.

(2) சிறப்புடையவனான பிச்சைப்பிள்ளை திருப்பணிக்காக விட்ட செல்லப் புதுகுளச்செய்யிலும், வேளாளர் குலத்தவனான சங்குமுத்து என்பவன் திருத்தொடைக் காங்கேயன் கட்டளைச் செய்யிலும், சிறந்த மன்னன் போன்ற தென்குடிசை வைத்திய நாதனுக்குரிய புதுக்குளச் செய்யினிடத்தும் மிகுதியான பலவகைப் பறவைகளும், வெண்ணிறமுடைய அன்னங்களும் தாராக்களும் மேய்கின்றன அப்பா!

(3) தானக் கணக்குச்செய்யுடனே, ஸ்ரீபண்டாரத்துக்குத் தருமத்துக்காக விடப்பட்ட பக்தர் கணக்குச் செய்யிலும், தேவராகிய திருக்குற்றாலநாதர் திருவாயில் மண்டபத்தின் நல்ல பத்தியைச் செய்யிலும், நான்து திசைகளிலும் புகழ்மிக்க வைத்திய நாதன் என்னும் மக்களின் தலைவனாக மக்களிடத்தில் பேரன்பு கொண்ட சிவராமனுக்குச் சம்பிரதிக் கணக்குக்காகக்கொண்ட சம்பிரதிக் கணக்குச் செய்யிலும், (பறவைகள் மேய்கின்றன).

(4) வேதநாராயணன் மகனும் வெற்றியுள்ள தொண்டை நாட்டினை ஆள்கின்றவனுமான சீதரன் முத்துமன்னனுக்குரிய விசாரணைக்குச் சார்ந்ததான எல்லா வயல்களிலும் பறவைகளை பிடிக்க வேண்டுமென்ற பேராவலுடன் நான் கண்ணி கட்டிப் பறவைகளைப் பிடிப்பதற்குக் கண்ணுங் கருத்துமாக நிற்கலானேன்; ஏதோ ஒரு பறவை இன்ன பறவையென்று எனக்குத் தெரியவில்லை; அப் பறவை என்னைவிடாமல் தொடர்ந்து பறந்து வந்து கொத்துகின்றது. (அப்பா! என்ன செய்வேன்!)



(வி-ரை)

1-4 நம்பி-அருச்சுகர். காராளன்-வேளாளன். புள்-புறவை. சீர்-சீர்த்தி குசை; ஓர் ஊர். விசை-விசயம் என்பதன். கடைக்குறை-தன்மபத்தர் கணக்கு ஒரு வயலின் பெயர் இங்கே வருகின்றன யாவும் பெயர்களோடு சார்த்தப்பட்டு வருவன; அவை வயல்களின் பெயர்களே ஆகும்.

ஏதோ ஒரு பறவை....என்னைக் கடிக்குதையோ' என்று சிங்கன் கூறுவது ஒரு குறிப்பு மொழி. இவனுக்குத் தன் காதலியாகிய சிங்கியின்மீது காதலுணர்வு தோன்ற, அது, அவனுக்கு மிகத் துன்பத்தைத் தந்து நெஞ்சை வருத்திற்று. அதையே தன் தோழர்களான வேடர்களிடம் பறவைமேல் ஏற்றி 'தோ ஒரு பறவை கடிக்கு'தென்று அவர்கள் குறிப்பாலறியுமாறு கூறினான்.








(101)