பக்கம் எண் :

நூவன், சிங்கனைப் பழித்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  வருக்கையார் திரி கூடத்தில் மாமியாள் மகள்மேற் கண்ணும்
  பருத்திமேற் கையும் ஆன பான்மைபோல் வேட்டை போனாய்
  கருத்துவே றானாய் தாயைக் கற்பித்த மகள்போல் என்னைச்
  சிரித்தனை சிங்கா உன்னைச் சிரித்தது காமப்பேயே.

(பொ-ரை)

குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிக்கின்றவரான திருக்குற்றால நாதருக்குரிய திரிகூட மலையிடத்தே தன் மாமியாள் மகள்மீது ஒரு கண்ணும் பருத்திமேல் ஒரு கண்ணுமான பருத்தி எடுப்பவன் பருத்தியைப் பிறர் எடுத்துப் போகத் தான் அவளைக் கண்டு மோகித்துக் கண்ணை அவள்மீது செலுத்துகின்ற தம்மைபோலவும், கருத்து வேறுபட்டவளாய்த்தான் கூடாவொழுக்கங் கொண்டொழுகித் தன் தாய்க்கு அது கூடாதென்று அறிவு புகட்டிய ஒருத்தி போலவும் என்னைப் பார்த்துச் சிரிக்கலானாய்; உன்னை, உலக மெல்லாம்சிரிக்கம்படி செய்தது காமமாகிய பேய்; இதை நீ அறியாயோ?







(106)

இதுவுமது

அறசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


  கடுக்கையார் திரிகூ டத்திற் காமத்தால் வாமக் கள்ளைக்
  குடித்தவர் போல வீழ்ந்தாய் கொக்குநீ படுத்து வாழ்ந்தாய்
  அடிக்கொரு நினைவேன் சிங்கா ஆசைப்பேய் உனைவிடாது
  செடிக்கொரு வளையம் போட்டுச் சிங்கியைத் தேடு வாயே.

(பொ-ரை)

(கொன்றைமாலையணிந்தவராகிய திருக்குற்றால நாதருக்குரிய திரிகூடமலையில் ஆசைகொண்டு கெடுதல் தருகின்ற கள்ளைக் குடித்தவர்போல, நீ மயங்கி விழலானாய்; நீ எங்கே வாழப் போகிறாய்? உனக்கு அடிக்கொரு வேறுபட்ட நினைப்பு எதற்காக? சிங்கிமேற்கொண்ட ஆசையாகிய பேய், உன்னை விட்டுவிடப் போவதில்லை; ஒவ்வொரு செடியிடத்தும் வளையமிட்டுச் சுற்றிச்சுற்றிப் பார்த்து உன் காதலி சிங்கியைத் தேடுவாயப்பா!

 
(வி-ரை)

கடுக்கை-கொன்றை மலர்மாலை; ஆகுபெயர். வாமம்-கெடுதி. வாழ்ந்தாய்-வாழமாட்டாய் என்னும் குறிப்பு மொழி; வளையம் போடுதல்-வட்டமிட்டுச் சுற்றிச்சுற்றித்திரிதல் ஒரு பொருளைத் தேடுகின்றவர் இடைவிடாது திரும்பித் திரும்பிப் போன இடத்திலேயே பின்னும் பின்னும் போய்த் தேடுவது உலக இயல்பானதால் இவ்வாறு கேலியாகக் கூறினான். வளையம்-வட்டம். போட்டு-திரிந்து.





(107)

சிங்கன் சிங்கியைத் தேடும்படி நூவனுக்குச் சொல்லுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


  வேடுவக் கள்ளி யோர்நாள் மெய்யிலா தவனென் றென்னை
  ஊடலில் சொனன் பேச்சால் உருவிலி பகைத்தான் என்மேல்
  போடுவான் புட்ப பாணம் புறப்பட மாட்டேன் நூவா
  தேடிநீ திரிகூ டத்தில் சிங்கியைக் காட்டு வாயே.

(பொ-ரை)

திருட்டுக் குறச்சிறுக்கி ஒருநாள் மெய்யில்லாதவன் (உடம்பில்லாதவன்) என்று என்னைப் பிணக்கக் காலத்தில் சொன்னசொல்லால் உருவமில்லாதவனான மன்மதன் (இவனும் மெய்யில்லாதவன்; ஆனால் நமக்குப் பகைவன் எனக்கருதி) என்மேல் பகை கொண்டான்; அவன் என்மீது மலர்க் கணைகளை இனிச் செலுத்தி வருத்துவான்; ஆகவே, இனி நான் அவளைத் தேட வெளியிலேயே போகமாட்டேன்; நூவா! இத்திரிகூட மலையில் போய் அவளைத் தேடிக் கண்டுபிடித்து எனக்குத் தெரியப்படுத்துவாயாக.









(வி-ரை)

மெய்யில்லாதவன்-உண்மை இல்லாதவன்; உடம்பு இல்லாதவன் என இருபொருள் நயம் காண்க.

(108)

நூவன் சிங்கியைத் தேடமாட்டேனென்று மறுத்துக் கூறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


  அங்கணர் திரிகூ டத்தில் அவளைநீ அணைந்தால் என்ன
  நுங்களில் பிரிந்தா லென்ன நூவனுக் குண்டோ நட்டம்
  கங்கணம் எனக்கேன் சிங்கா காசலை உனக்குண் டானால்
  கொங்கணச் சிங்கி தன்னைக் கூட்டிவா காட்டு வேனே.

(பொ-ரை)

அழகிய கண்களையுடைய திருக்குற்றால நாதருக்குரிய இத் திரிகூட மலையிடத்தே அவளைப் போய் நீ அணைந்தால் எனக்குக் கிடைப்பது என்ன? நீங்கள் இப்போதிருப்பதுபோலத் தனித் தனியே பிரிந்திருந்தால்தான் எனக்கென்ன? நூவனாகிய எனக்கு என்னடா நட்டம் வரப்போகின்றது? இதில் நான் கங்கணங் கட்டிக்கொண்டு அவளைத் தேடிப்பிடிக்கும் வேலை எனக்கு எதற்கு? அக்கறை உனக்கு இருக்குமானால் கொங்கண நாட்டுக் குறத்தியாகிய சிங்கியைத் தேடிப் பிடித்துக்கூட்டிக் கொண்டுவா; நான் அவள் தான் என்று உனக்குத் தெரிவிக்கிறேன் (நான் போய்த்தேடமுடியாது! ஆத்திரக்காரன் நீ போ.)






(வி-ரை)

நூவன் சிங்கனைப் பார்த்து நையாண்டியாகப் பேசுகின்றான்; எனக்கு இது வேலையன்று நீபோய் அவளைக்கண்டு பிடித்துக்கூட்டி வந்தால் நான் அவளை இவள்தான் சிங்கியென்று காட்டுவேன் என்று அவன் கூறுவது, நகைச்சுவை தருவதோடு, குறவர் சேரி மொழிகளான கங்கணங் கட்டுதல், நட்டம்காசலை போன்ற சொற்களை இணைத்துக் குறவன் பேச்சுப்போல் கூறியிருப்பது இறும்பூது தருவதாகும். செய்து முடிப்பேனென்றும் உறுதிகொண்டு கையிற் கட்டிக்கொள்ளும் காப்பு, அஃது அப்பெயரால் ஆகுபெயராக வழங்குகின்றது. காசலை-அக்கறை; மனஒருமிப்பு







(109)

சிங்கன், சிங்கியைத் தேடல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


திருவண்ணாமலை மலைகாஞ்சி திருக்கா ளத்தி
     சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி
குருநாடு கேதாரம் கோலக் கொண்டை
     கோகரணம் செகநாதம் கும்ப கோணம்
அரியலூர் சீரங்கம் திருவா னைக்கா
     அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன்
வருசிராப பள்ளிவிட்டு மதுரை தேடி
     மதிகொண்டான் திரிகூடம் எதிர்கண் டானே:

(பொ-ரை)

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்காளத்தி, சீர்காழி, சிதம்பரம், திருவாரூர், காசி, குருச்சேத்திரம், திருக்கேதாரம், கோலக்கொண்டா, திருக்கோகர்ணம், செகநாதம், கும்பகோணம், அரியலூர், சீரங்கம், திருவானைக்கா ஆகிய நகரங்கள் எல்லாவற்றிலும் தேடிச் சென்று அங்கெல்லாம் சிங்கியைக் காணக் கிடையானாய்த் திருச்சிராப்பள்ளி, மதுரை முதலிய இடங்களிலும் தேடித் திரிந்து மூன்றாம்பிறையை அணிந்தவராகிய திருக்குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கின்ற திரிகூடமலைக்கு வந்து சேர்ந்தான். (வி-ரை) குருநாடு, குருச்சேத்திரம்-பாண்டவர் ஆண்ட நாடு.







(110)

இதுவுமது

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக் காவு
      வேள்திருச்செந் தூர்குருகூர் சீவை குந்தம்
நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர்
      நிலைதருஞ்சிற் றூர்குமரி திருவாங் கோடு
சொல்லரிய குறுங்கைகளாக் காடு தேடித்
      தொன்மருதூர் அத்தாள நல்லூர் தேடிச்
செல்வர்உறை சிவசயிலம் பாவ நாசம்
      திரிகூடச் சிங்கிதனைத் தேடு வானே.

(பொ-ரை)

(அப்பால் பின்னவரும் தேடப் புறப்பட்டு ) வில்லிபுத்தூர், கரிவலம் வந்த நல்லூர், புன்னைக்காவாகிய சங்கரநயினார் கோயில், முருகன் எழுந்தருளியிருக்கின்ற திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, சீவைகுண்டம், திருநெல்வேலி, சிங்கிகுளம், தேவநல்லூர், நிலைபெற்றிருக்கின்ற சிற்றூர், கன்னியாகுமரி திருவனந்தபுரம், சொல்லுதற்கரிய திருக்குறுங்குடி, களக்காடுகளிலெல்லாம் தேடி, பழைமையான மருதூர், அத்தாளநல்லூர், இவற்றிலும் தேடி இறைவர் தங்கும் சிவசைலம் பாபநாசம் முதலிய இடங்களிலெல்லாம் திரிகூடமலைச் சிங்கியைச் சிங்கன் தேடுவதானான்.






(வி-ரை)

புன்னைக்காவு-சங்கா நயினார் கோயில். குருகூர் ஆழ்வார் திருநகரி. குறுங்கை-திருக்குறுங்குடி. செல்வர்-அருளுடைய இறைவர். திரிகூடச் சிங்கி-திரிகூட மலையில் இருக்கின்ற சிங்கி. தேடுவான்-தேடினான்; இயல்பாக வந்தகால வழுவமைதி. சிங்கனானவன் தன் காதலியைத் தேடுகின்றான்; வில்லிபுத்தூர் முதல் பாவநாசம் நகர்வரை தேடித்தேடி இளைத்து வருந்துகின்றான்.






(111)

இதுவுமது

சிங்கன், சிங்கியைத் தேடிக் காணாமல் வருந்துதல்

இராகம்-நீலாம்புரி
தாளம்-ஆதி
கண்ணிகள்

(1) பேடை மயிலுக்குக் கண்ணியை வைத்துநான்
     மாடப் புறாவுக்குப் போனேன்
  மாடப் புறாவும் மயிலும் படுத்தேன்
     வேடிக்கைச் சிங்சியைக் காணேன்;

(2) கோல மயிலுக்குக் கண்ணியை வைந்துநான்
     ஆலாப் படுக்கவே போனேன்
  ஆலாவும் கோல மயிலும் படுத்தேன்
     மாலான சிங்கியைக் காணேன்;

(3) வெவ்வாப் பறவையின் வேட்டைக்குப் போய்க்காம
     வேட்டையைத் தப்பிவிட் டேனே
  வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட
     வைபவம் ஆச்சுது தானே;

(4) இவ்வாறு வந்தஎன் நெஞ்சில் விரகத்தை
     எவ்வாறு தீர்த்துக்கொள் வேனே
  செவ்வாய்க் கரும்பை அநுராக வஞ்சியைச்
     சிங்கியைக் காணுகி லேனே.

(பொ-ரை)

(1) பெண் மயிலைப் பிடிப்பதற்காக நான் கண்ணியை வைத்து விட்டு மாடப்புறாவைப் பிடிப்பதற்குப்போகலானேன்; மாடப்புறாவையும் மயிலையும் பிடித்தேன்; அப்பால் வேடிக்கைக்காரியாகிய என் சிங்கியைக் காணாதவனானேன்.

(2) அழகிய மயிலுக்குக் கண்ணியை வைத்துவிட்டு நான் ஆலாப் பறவையைப் பிடிக்கப் போனேன்; ஆலாவையும் ஆழகுள்ள மயிலையும் பிடித்துவிட்டேன்; அப்பால் எனக்குக் காதல் மயக்கம் தருபவளாகிய என் சிங்கியைக் கண்டேன் இல்லையே!

(3) விருப்பங்கொண்டு பறவை வேட்டையாடப்போய், காம வேட்டையைப் பறிகொடுத்துவிட்டேன்! இதுவௌவாலை பிடிக்கப்போய் மரநாய் அகப்பட்ட கதையாக முடிந்ததே!

(4) இப்படியாக என் மனத்தில் தோன்றி வருத்துகின்ற காம நோயை, இனி எந்த வகையில் போக்கிக்கொள்வேன்? சிவந்த வாயையுடைய கரும்பு போன்றவளும் மிக்க ஆசைக்கொடி போன்றவளும் ஆகிய சிங்கியை எங்கெங்கும் தேடியும் கண்டேனில்லையே! (என்ன செய்வேன்!)






(வி-ரை)

(1-4) ஆலா-ஒருவகைப் பறவை. வெவ்வா-விருப்பமாக. விரகம்-வேட்கை, அநுராகவஞ்சி-காதற்கருத்தால் ஒன்றுபட்ட மனமுடைய பெண்ணாகிய சிங்கி, வஞ்சிக்கொடி.



(112)