பக்கம் எண் :

நுாவன்,சிங்கனைப் பரிகசித்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  ஆற்றைநான் கடத்தி விட்டால் ஆகாச ஓடத்
  தேற்றநீ அறிவாய் கொல்லோ திரிகூட மலையிற் சிங்கா!
  சாற்றுமுன் மருந்து போலச் சகலர்க்கும் குறிகள் சொல்லிப்
  போற்றுமுன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே.

(பொ-ரை) திரிகூடமலையில் வாழ்கின்ற சிங்கா நான் உன்னைக் கூட்டிச் சென்று வழிகடத்தி விட்டுவிட்டு வந்தால் வானின் வழியாக ஓடிப் போவதற்குத் தெளிவாக நீ வித்தைகள் கற்றுள்ளாயோ? உன்னால் இப்போது கூறப்பட்ட மருந்துகள், வித்தைகள் இவற்றின் தன்மைகளைப் போல, எல்லோருக்கும் குறிகள் சொல்லி அதனால் பிறரால் மேம்பாடாத மதிக்கப்படுகின்ற உன் சிங்கியானவள் சென்ற புதுத் தெரு இதுதான் தெரிந்து கொள்ளப்பா.


(119)

சிங்கன், சிங்கியைக் காணாமல் வருந்துதல்


இராகம்-முகாரி
தாளம்-ஆதி
பல்லவி
(1) எங்கேதான் போனாள் ஐயே! என்சிங்கி இப்போது
      எங்கேதான் போனாள் ஐயே! (எங்)

அனுபல்லவி
(2) கங்காளர் திரிகூடக் கர்த்தர்திரு நாடுதன்னில் (எங்)

சரணங்கள்
(3) வேளா கிலுமயக்கவள் வலிய தட்டிக்
       கேளா மலும்மு யக்குவள்
  ஆளாய் அழகனுமாய் யாரையெங்கே கண்டாளோ
       தோளாசைக் காரிசிங்கி சும்மா கிடக்கமாட்டாள் (எங்)

(4) மெய்க்குறியால் எங்கும் வெல்லுவள் மனக்குறியும்
       கைக்குறியும் கண்டு சொல்லுவள்
  திக்கிலடங் காதுகுறி இக்கிலடங் காதுமொழி
       மைக்குளடங்காதுவிழி கைக்குளடங்காதகள்ளி; (எங்)

(5) சித்திர சபேசர்மேலே சிவசமயப்
        பத்தியில் லாப்பேயர் போலே
  புத்தியி லரக்குங்கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும்
       அத்தனையும் குடித்துப்போட்டார் பிறகே தொடர்ந்தாளோ (எங்)

(பொ-ரை) (1) ஐயே! என் சிங்கி எங்கேதான் போய்விட்டாளோ! என் சிங்கி எங்கே தான் போய்விட்டாளோ ஐயே!

(2) முழு எலும்பு அணிந்தவராகிய திரிகூடமலை நாதருக்குரிய இந்தத் திருநாட்டில் (எங்கேதான் போனாள் ஐயே!)

(3) மன்மதனாயிருந்தாலும் அவனையும் மயங்கச் செய்வாள்; (தூங்கு பவனைக்) கையால் தட்டி எழுப்பி அவனைக் கேட்டுச் சம்மதம் பெறாமலுங்கூட வலியவந்துதழுவுவாள்; நல்ல இளைஞனாக அழகுள்ளவனாக எவனையாவது எங்கேபார்த்து விட்டாளோ? ஆண்களின் தோள்மீது ஆசை கொண்டவளாச்சே அந்தச் சிங்கி சற்று நேரம் கூடச் சும்மா இருக்கவேமாட்டாளே! (தழுவுவதே அவள் கண்ணுங் கருத்தும்; எங்கேதான் போனால் ஐயே!)

(4) தன் உடற்கட்டழகால் எந்த இடத்திலும் வெற்றி கொள்வாள்! ஒருவர் மனத்திலுள்ள எண்ணத்தையும், கையிலுள்ள இரேகை நிலையையும் அறிந்து குறி சொல்லுவாள்; அவள் சொல்லுங்குறி எட்டுத் திசைகளும்கூட அடங்காத அளவுள்ள வை; அவள் பேசுகின்ற செற்களின் இனிமையோ கரும்புச் சாற்றின் இனிப்பையும் கடந்த, மிக்க இனிமையுடையன; அவள் கண்கள் குவளை மலர் போன்ற கருநிறப் பொருள்கட்கெல்லாம் மிக்க கருநிறங்கொண்டு மேம்பட்டவை; எத்தகைய எதிலும் கட்டுக்கடங்தாத சிறுக்கி,(எங்கேதான் போனாள் ஐயே!)

(5) சித்திர சபையில் திருநடனஞ் செய்கின்ற திருக்குற்றால நாதரிடத்தும், சைவசமயத்திலும் அன்பற்ற வெறியர்கள் போல ஒரு நிலைப்படாது, புட்டியில் அடைத்துவைத்திருந்த சாராயத்தையும் பனங்கள்ளையும் குடுக்கையில் அடைத்துவைத்திருந்த தென்னங்கள்ளையும், அவ்வளவையும் ஒரே தடவையில்குடித்துவிட்டு எவர் பின்னே தொடர்ந்து போனாளோ? (எங்கேதான் போனாள் ஐயே!)


(வி-ரை) 1-5 கங்காளம்-முழு எலும்பு, ஆர் -யார்-மரூஉ மொழி. பிறகு-பின்பு; பின் தொடர்ந்து. தேற்றம் - தெளிவான வித்தை; ஆகுபெயர். போற்றும்-பரவும் குறி அடையாளம். இக்கு-கரும்பு. கைக்குள்-கைவசத்தில். சித்திர சபேசர்-சித்திர சபையிலிருக்கும் நடராசர். அரக்கு சாராயம்-குத்திசாராயம், கள் வைக்கும் புட்டில்


(120)

சிங்கன், சிங்கியைக் காணுத
ல்

  ஆணாகிப் பெண்விரகம் ஆற்றாமற் போனசிங்கன்
  பூணாகப் பாம்பணிவார் பொன்னகர்சூழ் நன்னகரின்
  சேணார் பெருந்தெருவிற் சிங்கியைமுன் தேடிவைத்துக்
  காணாமற் போனபொருள் கண்டவர்போல் கண்டானே.

(பொ-ரை) ஆண்தன்மையுடையவனாக இருந்தும் (ஆண் பிறப்பாகப் பிறந்ததும்) பெண்ணாசை தாங்க முடியாமல் போய்விட்ட நிலையுடைய சிங்கனானவன், பாம்பை அணியாகப் பூண்ட திருக்குற்றாலநாதர் எழுந்தருளியியிருக்கின்றதான தேவர்களும் வலம் வந்து சுற்றுகின்ற நல்ல திருக்குற்றால நகரத்தினது பெருமை மிக்க தெருவினிடத்தே முன்காலத்தில் ஈட்டிவைத்துக் காணாமல் தொலைந்துபோன பொருள்களை மீண்டுங் கண்டவர்களைப்போல் தன் சிங்கியைக் கண்டான்
(121)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சீதமதி புனைந்தவர்குற் றால நாதர்
  திருநாட்டில் இருவருந்தாங் கண்ட போது
காதலேனும் கடல்பெருகித் தரிகொள் ளாமற்
  கைகலக்கும் போதுகரை குறுக்கிட் டாற்போல்
வீதிவந்து குறுக்கிடவே நாணம் பூண்ட
  விண்ணாகச் சிங்கிதனைக் கண்டு சிங்கன்
தூதுவந்த நலனானான் கன்னி மாடம்
  துலங்குதம யந்தியவ ளாயி னாளே.

(பொ-ரை) குளிர்ச்சி வாய்ந்த இளம்பிறையைச் சூடிய திருக்குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கின்ற திருநாட்டில் சிங்கன் சிங்கியாகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்டகொண்டபோது காதலாகிய கடலானது பெருக்கெடுத்துக் கட்டுக்கடங்காமல் ஒன்று சேருங்கால் கடலுக்குக் கரையானது இடைநின்று தடுத்தாற்போல் (எல்லோருஞ் செல்கின்ற) தெருவானது இடையில் குறுக்கிடுதலால் நாணங் கொண்ட நையாண்டிப் பேச்சுக்காரியாகிய சிங்கியைக் கண்டு (அணையவும் மாட்டாமல் மனத்தை அடக்கவும் மாட்டாமல்) சிங்கனானாவன் தமயந்திபால் தூது சென்ற நளன் போல் மயக்கங் கொள்பவனானான் சிங்கியும் கன்னிமாடத்திருந்த அழகுள்ள தமயந்தியின் தன்மைபோல் காதல் மயக்கமுடையவளானாள்.


(வி-ரை) சேண் - நீளம். விண்ணாணம்-நையாண்டிப் பேச்சு. கன்னிமாடம்-மணம் ஆகாத பெண்கள் இருக்கும் மாளிகை. (122)

இராகம்-எதுகுல காம்போதி
தாளம்-சாப்பு.
பல்லவி
(1) இங்கே வாராய் என்கண்ணே! இங்கே வாராய்!

அனுபல்லவி
(2) இங்கே வாராய் மலர்ச் செங்கை தாராய் மோகச்
     சங்கை பாராய் காமச் சிங்கியாரே

சரணங்கள்

(3) பாதம்நோமே நொந்தால் மனம் பேதமாமே
பாதநோக நிற்பதேது பாவமினிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்;              (இங்)

(4) பாவிதானே மதன்கணை ஏவி னானோ
காவில் மாங்குயில்கள் கூவிக் கூவியென
தாவி சோருதுனை ஆவி ஆவிக்கட்ட;            (இங்)

(5) வருக்கை மூலர்வட அருவித் திருக்குற்றாலர்
பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்காற் கூடிக் கொள்ள. (இங்).

(பொ-ரை) (1) என் கண்ணே! இங்கே வருவாயாக! வருவாயாக!

(2) காமச் சிங்கியாரே! இங்கே வருவாயாக! உன் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளைக் கொடுப்பாயாக; எனக்கு உன் மீதுள்ள காதலின் அன்பையும் காண்பாயாக. இங்கே வருவாயாக. (3) உன் கால்கள் நடந்தால் நின்றால் வருந்துமே! வருந்தினால் என் மனம் வேறுபட்டு வாட்டங் கொள்ளுமே! நீ உன் கால்கள் கடுக்கும்படி நிற்பது என்ன பாவம்! இனி வாடையோ கொடுமை தருகின்றது; காதலோ மிகத் துன்பமானது! (ஆதால் இங்கே வருவாயாக,)

(4) பாவியாகிய மன்மதன் மலரம்புகளைத் தொடுத்து விட்டானே! சோலையில் வாழ்கின்ற குயில்கள் கூவிக்கூவி என் உயிர் குறைந்து போகின்றதே! உன்னைத் தழுவித் தழுவி அணைத்துக் கொள்வதற்கு இங்கே வருவாயாக.

(5) பலாமரத்தின் அடியிலுள்ளவரும் வடஅருவித் திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருக்கின்றவருமான திருக்குற்றால நாதரின் பெருமையைப் பாடிக் கொள்வதற்கும், மணமுள்ள மலர்களைச் சூடிக்கொள்வதற்கும், ஒரு பங்கு ஊடல் கொள்வதற்கும், அதற்கு இரண்டு பங்கு அணைந்து கூடிக் கொள்ளுதற்கும் (இங்கே வருவாயாக)


(வி-ரை)1-5 மருக்கன்-மணமுள்ள பூக்கள் ஆகுபெயர் (123)