|
(1) அடிசிங்கி, நீ இவ்வளவு
நாட்களாக இன்ன இடத்துக்குப் போகிறேனேன்றுகூட என்னிடம் சொல்லாதபடி
எங்கே போயிருந்தாயடி?
(2) அடே சிங்கா! பூங்கொத்துக்களணியும்
கூந்தலையுடைய மங்கையர்கட்கு அவர்கள்கேட்கும் குறிகளை விரிவாக சொல்லி
வருவதற்குப் போயிருந்தேனடா!
(3) அடி சிங்கி! இதையெண்ணிப்
பார்க்கும் பொழுது வியப்பாகத் தோன்று கிறதே உன்னிடம் விட்டுச் சொல்லவும்
எனக்கு அச்சமாக இருக்கின்றதே!
(4) அடி சிங்கா! நீ யாருக்கும்
அஞ்சவேண்டுவதில்லையே! உனக்கு நெஞ்சில் தோன்றியதை அஞ்சாமற் சொல்லு;
(நான் அதற்காக வருந்தமாட்டேன்;)
(5) அடியே சிங்கி! உன்
காலுக்கு மேலே பெரிய விரியன் பாம்புபோல் ஒன்று ஒட்டிக்கொண்டு கிடப்பதென்ன!
(எனக்குப் பார்க்க வியப்பாக இருக்கிறதடி!)
(6) அடே சிங்கா! (அஃது
உனக்குத் தெரியாதா?) சேலத்தைச் சேர்ந்த நாட்டிலே நான்குறி சொல்லி
அதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்பு கிடக்கிறது பாரடா!
(7) அடி சிங்கி! உனக்குச்
சேலத்தார் அணிவித்த சிலம்புக்கு மேலே என்னவோதிருகலும்
முறுகலுமாகக் கிடக்கிறதே அஃதென்னடி!
(8) அடே சிங்கா! (இதுகூட
உனக்குத் தெரியாதா?) கலிங்க நாட்டார்கள் நான்குறி சொன்னதற்குப்
பரிசாகக் கொடுத்த முறுக்குத் தண்டைபார், (நன்கு பார்!)
(9) அடிசிங்கி!நீளமாகவும்
கூனலாகவும் நாக்குப்பூச்சி போல் நெளிந்ததாக வளைவுள்ளதாக இருக்கின்றதே
அஃதென்னடி!
(10) அடே சிங்கா! பாண்டிய
மன்னரின் மகள், அவள் விரும்பின குறிகள் நான் சொன்னதற்காகப் பாடகம்
அணிவித்தாள் (பாரடா!)
(11) அடி சிங்கிப் பெண்ணே!
செத்துப்போன தவளையைப் போல உன் காலிலே கட்டிவைத்திருக்கின்றதே;
அதற்கு என்னடி பெயர்?
(12) அடே சிங்கா! இன்னும்
உனக்கு ஒன்றுந் தெரிவில்லை: உலகத்துக்கெல்லாம் தலைவரான திருக்குற்றால
நாதரின் திருமுன்பு நடனஞ் செய்கின்ற மங்கையர்கள் (நான் குறி சொன்னதற்காக
மகிழ்ந்து) அணிவித்த சதங்கை மணியடா!
(13) அடி சிங்கி! உன்
காலின் சுண்டுவிரலிலே (சிறு விரலிடத்தே) குண்டலவடிவமான பூச்சிபோல்
வளைந்து கிடக்கின்றதே; அஃதென்ன கோலமடி?
(14) அடே சிங்கா! ஈழ
நாட்டில் (இலங்கைத் தேசத்தில்) (நான் குறி சொல்லிப் பரிசிலாகப்)
பெற்ற கால்மோதிரமும் பீலியுமடா! (நீ நகைகளையே பார்த்தவனில்லை;
என்னவோ கேட்கிறாய்!)
(15) அடி சிங்கி! உன்னுடைய
மென்மையான அழகுள்ள தொடைமேல் வாழைக் குருத்தை யொத்த மிக மெல்லிய
ஆடையை விரித்து உனக்கு அணிவித்தவர் யாரடீ?
(16) அடே சிங்கா! (நான்
நன்றாகக் குறி சொல்லியதற்காக) திருநெல்வேலி மக்கள் கொடுத்த சல்லாச்
சேலையை நான் கொய்து உடுத்துள்ளேன், (இதுவுமா உனக்குத் தெரியாது?)
(17) அடி சிங்கி! உன்
தொடைகளுக்கு நடுவிடத்தே மேலே தோன்றுகின்ற அரசிலை போன்ற உன் கடிதடத்தின்
மேல் சாரைப் பாம்புபோல் ஒன்று கிடக்கின்றதே அஃது ஏதடி?
(18) அடே சிங்கா! சிறப்புமிக்க
சோழ அரசன் மகளானவள் (நான் அவள் மனத்தில் எண்ணியதைச் சொன்ன
குறிக்காக மகிழ்ந்து) நல்ல பொன்னால் செய்து தந்த அரைஞாண் கொடியடா
அது.
(19) மார்புக்குமேல் பருத்தெழுந்த
சிலந்தி போன்ற கொங்கையின் மீது கொப்புளம் கொண்டது போல் காணப்படுகின்றனவே
அஃதேன் சிங்கி!
(20) அடே சிங்கா! உலகத்திற்
சிறந்த காயற்பட்டினத்தார் ஆணி முத்துக்களால் செய்துதந்த முத்து மாலையடா!
(21) அடி சிங்கி! எட்டுவகைப்
பறவைகளின் ஒலிகள் உண்டாகும் கமுகு போன்ற உன் கழுத்திலே பத்து எட்டுப்
பாம்புகள் போல் சுற்றிக் கிடக்கின்றனவே அஃது ஏதடி?
(22) அடே சிங்கா! குட்ட
நாட்டினரும் காயங்குளத்தாரும் (என் குறிக்காக) அணிவித்த கழுத்துச் சரடுகளடா!
|