பக்கம் எண் :

திருச்சிற்றம்பலம்

திருக்குற்றாலத் தலச்சிறப்பு


   திருக்குற்றாலத் திருநகர், பாண்டிநாட்டுத் திருநகர்கள் பதினான்கில் ஒன்றாகத் திகழும் பெருமை பெற்றது.

   இது மலைவளம் நீர்வள நிலவளங்கள் முதலிய பல்வகை வளங்களுஞ் செறிந்தது; கண்டவர் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க பேரெழில் வாய்ந்தது; முழுழுதற் கடவுளாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பேறு பெற்றது; அதனால் தன்பால் வந்து தங்குவார்க்கு எல்லா நோய்களையும் போக்கி எண்ணிய எண்ணியாங் கெய்துவிக்கும் சிறப்புடையது; சிவமது கங்கை, செண்பகத்தடாகம், பொங்குமாகடல், வடஅருவி, சித்திராநதி என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த சிறப்புப் பெற்றது.

'போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக்
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்'

என சம்பந்தப் பெருமான் பாடல்சால் சிறப்புக்குரிமையது.

   இத்தகைய தலத்தில் குறும்பலா மரத்தினடியில் இறைவன் எழுந்தருளியிருக்கின்றான் என்பது இத் தலபுராண வரலாறு; இங்கே இறைவன் திருநடஞ் செய்யுஞ் சித்திர சபை ஒன்றுள்ளது; இது திருக்குற்றாலநாதர் திருக்கோயிலுக்கு வட பக்கமுள்ளது. இச் சபையில் சிவபெருமான் திருக்கூத்தாட, உமையம்மையார் தாளங்கொட்டிநின்று கண்டுகளித்தனர் என்பது வரலாறு. இச்சபை, ஐந்து சபைகளில் ஒன்றாகத் திகழும் பெருமை பெற்றது.

   இத் திருநகர்க்கு இருபத்தொரு திருப்பெயர்கள் உள்ளன. அவை: பிதுர்கண்டம் தீர்த்தபுரம் (1) சிவத்துரோகந் தீர்த்த பெருமை மூதூர் (2) மதுவுண்டான் உயிர்மீட்டபுரம் (3) பவர்க்கமீட்டபுரம் (4) வசந்தப் பேரூர் (5) முதுகங்கை வந்தபுரம் (6) செண்பகாரணிய புரம் (7) முத்திவேலி (8) நதி மூன்றில் மாநகரம் (9) திருநகரம் (10) நன்னகரம் (11) ஞானப் பாக்கம் (12) வேடன் வலஞ்செய்த புரம் (13) யானை பூசித்த புரம் (14) வேதசத்திபீடபுரம் (15) சிவமுகுந்த பிரமபுரம் (16) முனிக்கு உருகும் போரூர் (17) தேவகூடபுரம் (18) திரிகூடபுரம் (19) புடார்ச்சுனபுரம் (20) குறும்பால விசேடபுரம் (21) என இருபத்தொரு திருப்பெயர்கள் காரணங்களால் கொண்டு ஓங்கும் சிறப்புக் பெற்றது. திருக்குற்றாலத் தலபுராணத்துத் தலமகிமைச் சருக்கம் 30,31 ஆம் பாடல்களால் இவை விளக்கப்படுகின்றன. அவை:

"பிதுர்கண்டம் தீர்த்தபுரம் சிவத்து ரோகந்தீர்த்த பெருமை மூதூர்
மதுவுண்டான் உயிர்மீட்ட புரம்பவர்க்க மீட்டபுரம் வசந்தப்பேரூர்
முதுகங்கை வந்தபுரம் செண்பகா ரணியபுரம் முத்திவேலி
நதிமுன்றில் மாநகரம் திருநகரம் நன்னகரம் ஞானப் பாக்கம்
வேடன்வலம் செய்தபுரம் வேழம்பூ சித்தபுரம் வேத சக்தி
பீடபுரம் சிவமுகுந்த பிரமபுரம் முனிக்குருகும் பேரூர்தேவ
கூடபுரம் திரிகூட புரம்புடார்ச் சுனபுரம் பொற் குறும்பலாவி
சேடபுரம் என இருபத் தொருநாமம் பெற்றபதி திருக்குற்றாலம்"

என்பதால் அறியலாம்

   இந்நகர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி வட்டாரத்தில் இருக்கின்றது. இஃது, இன்பமாக வாழ்ந்து காலங்கழித்தற்கு ஏற்ற சிறந்த இடம். தென்மேற்குப் பருவ மழை துவங்கியவுடன் நம்நாட்டுமக்கள்; பல்லிடங்களிலுமிருந்து வந்து அருவிநீராடி மகிழ்கின்றார்கள்; அப் பருவம் முடியுங்காறும் இங்கேயே தங்கியிருந்துவிட்டுச் செல்வார்கள்; இந்நகரையும் அருவியையும், அருவிக்கரையையும், கோயிலையும் இன்னும் நன்முறையில் செப்பஞ்செய்து வருகின்றனர்; கோயில் இருக்குமிடம் சங்குபோல் வளைந்த நிலையில் இருப்பதால் இதற்குச் சங்க வீதியென்று பெயர். இறைவன் திருக்குற்றாலநாதப் பெருமான் இங்கே குறும்பலாவடியின்கீழ் எழுந்தருளியுள்ளார் கோயிலையும் அருவியையும் சுற்றியுள்ள நானூறு ஏக்கர்ப் பரப்பளவுள்ள நிலப்பகுதியில் புதிய பெரும் பாட்டை (ரோடு) கள் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலநகர் தனி நகராகவும் ஆக்கப்பெற்றுள்ளது.

   தேனருவித் திரையெழுப்பி வானின்வழிஒழுகும்பெருமை பெற்ற இத் திருக்குற்றாலம் நீடு வாழ்க. இறைவன் திருக்குற்றாலநாதரின் திருவருளும் என்றும் எங்கும் நின்று நிலவுக.