சுற்றிலும் பார்த்து ஒருவரும் பேசாதிருத்தலைக் கண்டு
ஒரு சகியைப் பார்த்து.
___
பாட்டு.
ராகம் - கல்யாணி] பல்லவி. [தாளம் - ஆதி
இந்தமட்டுஞ் செய்யடி சகியே நீ
இந்தமட்டுஞ் செய்யடி
அனுபல்லவி.
சந்ததம் வளருந்தஞ்சைச் சரபோஜி மன்னர்தம் பால்
சார்ந்தென் விரகமெல்லா மோர்ந்திடச் சொல்லவேண்டும் (இந்த)
மோகினி வசனம்:- பிரிய சகிகாள்! எனக்காக இந்த உபகாரமாவது நீங்கள் செய்யக்கூடாதா?
சகி 1 வசனம்:- அம்மா அந்தவேலை எங்களால் முடியாது.
சரணம். 1
அவருக் கெனைப்போலு மடந்தையா ரொருக்காலே
அறியாமன் மயல்கொண்டேன் சிறியாளா கையினாலே
கவலையுற் றிடமத னெறிகிறான் மலர்க்கோலே
கருது மிதையவர்க் குரைநடந் தனம்போலே (இந்த)
மோகினி வசனம்:- அடி பாங்கிகாள்! சிறியாளாகிய நான் அவர்மேல் மையல்கொண்டு நான் படும் மன்மதாவஸ்தையை அவரிடம் தெரிவிக்கலாகாதா?
சகி 2 வசனம்:- மதனவல்லி இந்த வேலையைவிட்டு வேறு எது சொன்னாலும் நாங்கள் செய்கிறோம்.
___
|