பக்கம் எண் :

23

சரணம். 2

     தென்றலம் புலிகட்கென் செய்தேனா னபசாரம்
     தெரிக்கு மலைசெய்வ தேதிப் படிகோரம்
     நன்றவர்க் கிவையெல்லாம் நவிலுவா யிந்நேரம்
     நாமிரு வருமிருந்த நன்மைக்கிங் குபகாரம்                  (இந்த)

     மோகினி வசனம்:- ஐயோ! நான்படும் வேதனையை சற்றும் அறியாது
  இந்தத்தென்றலும் சந்திரனும் என்னை வாட்டுகிறார்களே. அடி சகிகாள்!
  (ஒரு சகியின் முகவாய்க்கட்டையைப் பிடிக்க சகி தூர விலகல்).

___

சரணம். 3.


     மனத்தினைத் தூதுவிட்டே னதன்செய்தி யோராமல்
     மகிழ்ந்தவ ரிடத்தி லிருந்தது வாராமல்
     அனத்தினை யனுப்பலா மதுசொல்லுஞ் சேராமல்
     அதுநிற்க நீயேசெல் வருத்தத்தைப் பாராமல்               (இந்த)

     மோகினி வசனம்:- தோழிகாள்! நான் தூதாக விடுத்தவை யெல்லாம்
  அவரிடம் போய்ச் சேராமலே போய்விட்டது. நீங்களாவது வருத்தத்தைப்
  பாராமல் சென்று வரலாகாதா?

     சகி 3-4 வசனம்:- அம்மா! ராஜசபையை அணுகி உங்களுடைய
  விஷயத்தை எவ்விதம் தெரிவிப்போம்; எங்களால் முடியாது.

     மோகினி வசனம்:- அடி சகிகாள்! அங்கு போகும் வகையையும்
  சொல்லும் வகையையும் நான் தெரிவிக்கின்றேன். மேலும் இந்த
  ஆபரணாதிகளை யெல்லாம் உங்களுக்குக் கொடுக்கிறேன். சற்றே தயவு
  செய்யுங்கள்.