பக்கம் எண் :

20 புலவராற்றுப்படை

     மதன் உடை முந்து நூல்-அழகினையுடைய முந்தின நூலாகிய
அகத்தியத்தையும்,

     மதன்-நூலினழகு. அகத்தியத்தின் முந்திய நூலொன்று
தமிழ்க்கின்மையின் முந்து நூலென்றாம்.

     அதன் வழி பட்ட தொல்காப்பியம் முதல் பல என பல்கா இலக்கணம்
தெரிக்கும் விலக்கு இல் நூல் தேர்ந்து-அவ்வகத்தியத்து வழிப்பட்ட
தொல்காப்பிய முதலாகப் பல வென்னும்படி பல்கி இலக்கணத்தைக்
தெரிவிக்கும் விலக்குதலில்லாத ஏனைய நூல்களையுந் தேர்ந்து,

     தொல்காப்பியம் வழிநூலாகலின், வழிப்பட்ட வென்றாம், பல்கா-பல்கி.
தெரிவிக்கு மெனற்பாலது தெரிக்குமென நின்றது; மேலுரைத் தாங்குரைக்க.
விலக்கு-முதனிலைத் தொழிற்பெயர். கற்றற்கமையாவிலக்குடை நூல்களை.
நீக்குதற்கு விலக்கினூலென்றாம். நூலென்னுமிரண்டன் கண்ணும்
உம்மைகடொக்கன.

     பொற்பு உறு எழுத்து சொல் பொருள் யாப்பு விழுமிய வகை இன்
அணி இவை பழுநி-பொலிவுற்ற எழுத்துஞ் சொல்லும் பொருளும் யாப்பும்
சிறப்பினவாகிய வகையினையுடைய அணியுமென்னும் இவ்விலக்கணங்கள்
முற்றுப்பெற்று,

     எஞ்சல் இல் சீர்த்தி பஞ்சகாவியம் பிற-குறைதலில்லாத
மிகுபுகழினையுடைய பஞ்சகாவியங்களும் பிறவும்,

     பஞ்சகாவியம்-சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி என்பன. பிறவென்பது நீலகேசி, உதயணன்காதை, சூளாமணி
முதலியவற்றையுந் தழுவநின்றது. உம்மைக டொக்கன.

     எட்டு தொகை ஒடு உம் பத்து பாட்டு ஒடு உம் இன்பு அமர் ஒன்பதிற்
றிரட்டி கீழ்க்கணக்கு என சங்கம் மரீஇய பொங்குநூல் தேற்றி-எட்டுத்
தொகையுடனும் பத்துப் பாட்டுடனும் இன்பமமைந்த பதினெண்
கீழ்க்கணக்குமென்று முன்னைய சங்கத்து அடிப்படவிருந்த பொலிகின்ற
இலக்கியநூல்களிற்றேறி,

     எட்டுத்தொகை-நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,
பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. பத்துப்பாட்டு-
முருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,