பக்கம் எண் :

முன்னுரை7


     கற்றுணர் மக்க ளருமை யிற்றென்
     வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
     முன்னாள் பொன்னு மணியுஞ் சிதறி
     தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
     பாரியுங் காரியு மாயு மோரியும்
     பேகனு நள்ளியு மதிகனு மாகி
     வரையாது கொடுத்தோர் வாணா ள்தன்று.

     பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. அது மிகப் பழமை வாய்ந்தது.
அங்கே எழிலுறு காட்சிகள் கண்ணைக்   கவரும் இயல்பை யுடையன.
இவ்வியற்கைக் காட்சிகள் புலவராற்றுப்   படையில் மிக நுணுக்கமாக
விவரிக்கப்பட்டுள்ளன. அங்கே    பூஞ்சோலைகள் உண்டு. அழகிய
சிறகுகளையுடைய   வண்டுகள்   அப் பூஞ்சோலையில் இருக்கின்றன.
அவ் வண்டுகள் பூக் கொப்புகளிலே வந்து தங்குகின்றன. தங்கிக் குழல்
ஊதுகின்றன. மொட்டுக்களின் முறுக்கவிழச் செய்கின்றன. முறுக் கவிழ்ந்து
பூக்கள் மலர்கின்றன. இவ்வாறு மலர்ந்த அழகிய பூக்கள் காம்பு கழன்று
கீழே விழுகின்றன. விழுந்து சித்திரக் கம்பளத்தை விரித்தாற்போலத்
தரையில் படர்ந்து விளங்குகின்றன. இத்தைகைய வாசனை மிக்க
பூஞ்சோலைகள் மதுரையில் மிக்கு இருக்கின்றன. இவை வையை யாற்றின்
இரு பக்கத்திலும் ஒருங்குபட வளர்ந்து காட்சியளிக்கின்றன. ஆற்றின்
கரையை அழகுபடச் செய்கின்றன. இத்தகைய உள்ளத்தை அள்ளும்
காட்சிகள் நிறைந்து, செல்வம் மிகுந்து, மதுரை திகழ்கின்றது. இக்கருத்துக்கள்
அனைத்தையும் மிகவும் நயம்பட அமைத்துப் பாடிய பகுதி பின்வருமாறு :

     அஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
     பிணியவிழ் பலர்ந்து கழல்காம் பணிமலர்
     வன்னக் கம்பளம் விரித்தாங் கன்ன
     தரைபடர்ந் திமைக்கும் விரைகெழு பூம்பொழி
     லிருமருங் கொழுகிய பொருகரை வையைச்
     செந்தமிழ் நாட்டுத் திருத்தகு மூதூர்.

     வண்டுகள் தங்கி ஊதலால் மொட்டுக்கள் முறுக் கவிழ்ந்து விரிந்து
மலர்களாகின்றன என்பது சங்ககாலத் தமிழ்க் கவிமரபு. பத்துப் பாட்டுள்
ஒன்றான முல்லைப்பாட்டில்,

     யாழிசை யின வண்டார்ப்ப
     ... ... ... நறுவீமுல்லை
     யரும்பவி ழலரி... ... ... [8-10]

என்னும் கருத்துக்கள் வந்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.