பக்கம் எண் :

183

மாரீசன் ராவணனை இடித்தல்

விருத்தம்-16 

கடுத்த தங்கை இதுசொல்லச் சீதைமேலே
          கருத்தாடக் காமப்பேய் தலைசுற்றாட
     உடுப்பதுவும் உண்பதுவும் மறந்தான் சிந்தை
          உரைமெழு கானான் அரக்கன் அம்மானேநீ
     அடுத்தெனக்கு ராமன்மனை வியைத்தா என்றான்
          அது கேட்டவுடனே நாராசம் காய்ச்சி
     நடுச்செவியில் வைத்தாற்போ லேமாரீசன்
          நடுக்கின்றான் ராவணனைத் தடுக்கின்றானே

தரு-9

துசாவந்தி ராகம்                               ஆதிதாளம்

பல்லவி

     என்ன புத்தி நினைத்தாயாடா அடாராவணா
     என்ன புத்தி நினைத்தாயடா                (என்)

அநுபல்லவி

பின்னொருத்தி அல்லராமன் மன்னவன் தேவியைச் சொல்ல
அன்னவன் அம்பிங்கேசெல்ல உன் இனத்தையெல்லாம் கொல்ல(எ)

சரணங்கள்

1. கள்ளிப் பொறிவர        லாலே-மூங்கில் எரிந்து
  வெள்ளிச் சாம்பலானாற்   போலே
  கொள்ளியாய் வந்தாள்உன் தங்கை அள்ளிராமனை இங்கே
  தள்ளிவிடும் முன்னேதலை துள்ளிவிடுமேநமக்கு  (என்)

2. இந்தமதி பண்ணல்       ஆமோ-மூங்கில் எரிந்து
  சிந்தையிலும் எண்ணல்    ஆமோ
  முந்தொருத்தி ஆசையிட்டான் சந்திரனும்பழிபட்டான்
  வந்தகலிகையைத் தொட்டான் இந்திரனும் மகிமை கெட்டான்(என்)

3. உத்தம சீதையை    உன்னாதே-உன்னினால் அவன்
  சற்றிலே விடுவான்   என்னாதே
  புத்திரர் தலையும் சேர்ந்த மித்திரர் தலையும் ராம
 பத்திரர் அம்புகொய்யும் கொய்யும் சித்திரவதை செய்யும் செய்யும்(என்)