பக்கம் எண் :

186

லட்சுமணர் சீதாதேவியை தேற்றல்

விருத்தம்-8

     உறும்தரும தம்பியிந்த வண்ணம் சொன்னான்
          உத்தமராமனும் அந்த மான் பின் ஏகிக்
     குறுங்கணையால் எய்தான் மாரிசன்வீழ் போதில்
          கூக்குரலிட்டான் அதனைச் சீதை கேட்டாள்
     இறுங்கணவன் குரல் இதைப்போய் அறிநீ என்றாள்
          என்ன அன்னே அண்ணனை யென் சொனனீர் இந்த
     வெறுங்கவலை ஏன் என லட்சுமணன் துன்பம்
          விடச் சொல்வான் சீதையைத் தேறிச் சொல்வானே

தரு-10

பைரவி ராகம்                             ஆதிதாளம்

பல்லவி

     ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இத்தை
     அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா          (ஆர்)

அநுபல்லவி

     ஏராவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில்
          எண்டிசை அதிபரும் அண்டின படையுடன்
     மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ (ஆர்)

சரணங்கள்

1. விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே
     மிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால்
  வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே
     மந்திரம் என்னஒரு    தந்திரம் என்ன வானில்
     இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ-     (ஆர்)

2. ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை
     அறிந்தும் பெண்புத்தியால் என்சித்தம் நோமோ
  வேதையர் என்னையும் சோதிக்கல்    ஆமோ-நல்ல
  வேதண்டம் என்னப் பெறும் கோதண்டம் தன்னை-அண்ணன்
  கரிதண்ட வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே        (ஆர்)