பக்கம் எண் :

19

விருத்தம்-5

     அரன்முடிமேல் கங்கைபகீ ரதன்கொ ணர்ந்தே
          அந்நாள்செய் தர்ப்பணம்போல் இந்நாள் இந்த
     நரரும் அந்தக் கங்கையிலே தர்ப்ப ணத்தை
          நடத்திமுத்தி பெறுகின்றார் அதுபோல் ஆதிப்
     பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை
          பெருமுனிவால் மீகிசொல்லக் கம்பர் சொன்னார்
     விரவுதமிழ்ப் பதத்தாலே நானும் சொன்னேன்
          மேற்கொள்வீர் என்பிழைதீர்த் தாட்கொள் வீரே

தரு-5

மத்தியமாவதி ராகம்                       ஆதிதாளம்

பல்லவி

     பிழை பொறுக்கவேணும்-பெரியோரே
     பிள்ளை உமக்கு நான்காணும்                    (பிழை)

அநுபல்லவி

     மழைநிறத்த ராம சாமிகதை            இன்ன
     வகையென்றறிந்தும் அறியாமலும்நான்    சொன்ன   (பிழை)

சரணங்கள்

ஆதியில் பிரம்மதேவர் நூறுகோடி விஸ்தாரம்
     ஆதிகாவியம் என்றித்தை             மதித்தாரே
பேதமில் இருபத்து நாலாயிரமாகப்
     பிறகு வால்மீகர் சொல்லி             விதித்தாரே

போதாயனர்முதல் மாதவர் இக்கதையைப்
     புனைந்துவட மொழியால்              துதித்தாரே
ஓதியகம்பர் பன்னீராயிரம் கவியாக
     உரைசெய்து தமிழிலே                பதித்தாரே

காதலால்இவர் செய்யநான் அதுக்            கிப்பாலே
     கருடன்பறக்க ஒருகொசுவும் பறந்       தாற்போலே
ஈதொரு நாடக மாகஓதினேன்               புவிமேலே
     எட்டும் ரண்டும் தெரியாதஏழைநான்ஆ  கையினாலே(பிழை)