பக்கம் எண் :

261

4. காலமே அவ காலமே              என்தன்
     காதலியாகிய சீதைபிரிந்திட
     நீதுணையாகிய தோதகம் ஏதோ
  கோலமே என்ன கோலமே          வெகு
     கொச்சையும் ஆய்மிகு லச்சையுமாய் உயிர்
     வைச்சிடவோ இனி லட்சுமாணசொல்

ஸ்ரீராமரை லட்சுமணர் தேற்றல்

விருத்தம்-14

     வெம்பியே ராமன்இந்த விதம்சொல்லி இரங்கும் போதில்
     எம்பிரானே ஈதென்ன ஈதென்ன கோலம் சாமி
     உம்பெருமையைநீ காணாய் உருகிறாய் என்று சொல்லித்
     தம்பிதான் துன்பமெல்லாம் தணிவிப்பான் துணிவிப்பானே

தரு-8

யமுனாகலியாணிராகம்                          அடதாளசாப்பு

பல்லவி 

     சாமிஏதையர்-இந்தவேதை-சாமிஏதையர்            (சாமி)

சரணங்கள்

1. பூமிஉள் ளோர்க்கெல்லாம் ஆதார     ராமா
  நீமனதில் இப்படி நினைத்திடல்       ஆமா          (சாமி)

2. சங்கை ஏன்உனக்குச் சமானம்        வேறேது  
  உன்கையில் கோதண்டம் ஒன்றுபோ   தாதோ         (சாமி)

3. அடிப்பாரோ ராட்சதர் அதிகமோ    ஆடு
  கடிக்கும் என்று ஏறிக்கலங்குமோ     நாடு           (சாமி)

4. உன்மகிமை அறியாய் உருகிறாய்     இங்கே
  பிர்ம்மாதி தேவர்க்கும் பிழைப்பினி    எங்கே        (சாமி)

5. உதவிசெய் வோர்க்கிடை யூறுண்டோ  காணும்
  பதறாதிருந்தல்லோ படுத்திட          வேணும்      (சாமி)

6. அனுமாதிகள்பல அறியாயோ        சாமி
  நினைவு கலங்கினால் நிற்குமோ      பூமி          (சாமி)