பக்கம் எண் :

289

ஐயநான் அஞ்சினேன் இந்நறவினின் அரியகேடு
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம்அன்றால்
வெய்யதாம் மதுவையின்னம் விரும்பினேன் என்னின்வீரன்
செய்யதாமரைகள் அன்னசேவடி சிதைக்க என்றான்
                        (கிட்கிந்தைப்படலம் 18, 88, 89, 92, 94, 96)

லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல்

விருத்தம்-16-தரு-11

கோளுறுத்தற்கு அரிய குரக்கினம்
நீள்எழுத் தொடரும் நெடுவாயிலை
தாளுறுத்தித் தடவரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்

காவல் மாமதிலும் கதவும்கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்டரும்
பாவமாம் எனப் பற்றழிந் திற்றவால்

நீரெலாம் அயல்நீங்குமின் நேர்ந்துயான்
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும்
பேரநின்றனர் யாவரும் பேர்கலாத்
தாரை சென்றனள் தார்குழலா ரொடும்

தாமரை வதனம் சாய்த்துத் தனுநெடுந் தரையில் ஊன்றி
மாமியர் குழுவின் வந்தான் ஆம்என மைந்தன் நிற்ப
பூமியில் அணங்கனார் தம் பொதுவிடைப் புகுந்து பொற்றோள்
தூமன நெடுங்கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள்

ஆர்கொலோ உரை செய்தார் என்று அருள்வரச் சீற்றம் அஃகப்
பார்குலாம் முழுவெண்டிங்கள் பகல் வந்த படிவம்போலும்
ஏர்குலாம் முகத்தினாளை இறைமுகம் எடுத்து நோக்கித்
தார்குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைத்து நைந்தான்

சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் என்று
மானவற் குரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன்
ஆனவன் அமைதிவல்லை அறிஎன அருளில் வந்தேன்
மேனிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புகென்றான்