பக்கம் எண் :

91

     நின்றநிலைக் கழைத்துவர என்ன வந்து
          நெடுமனைவா சலுக்குள்ளே புகுந்த போதில்
     என்றும்அர சன்சொல்லான் நானே சொல்வேன்
          என்றீரேழ் வருஷம்ரா மாநீ காட்டில்
     சென்றுதவம் செய்பரதன் உலகம் ஆள்வான்
          செல்என்றாள் இதுவேந்தன் சொல்என்றாளே

-----

ஸ்ரீராமர் வனம் ஏகக் கைகேசியின் விடைபெறல்

விருத்தம்-9

உளம்மகிழ்ந் தொருகை கேசி உரைத்தவாய் மொழியைக் கேட்டுக்
களங்கம்இல் லாத ராமன் கானகம் செல்ல நானே
தெளிந்தபார் பரதன் ஆளச் செய்ததே மேன்மை என்று
தளர்ந்திடாத் தாயை வாழ்த்தித்தாழ்ந்துபின் விடைகொண்டானே.

தரு-5

சுருட்டிராகம்                           திரிபுடை தாளம்

பல்லவி

என்பாக் கியமே பாக்கியம்-எவர்க்குண்டிந்தசிலாக்கியம்    (என்)
 

அநுபல்லவி

அன்பாக வனம்போக அனுக்கிரகம் செய்தாயே           (என்)

சரணங்கள்

1    குழியிற் பயிர்தனை எடுத்துக் கூரைமேல் ஏறவிட்டு
     வழுவான களைமாற்றி வளர்க்கி றதுபோலே
     சுழலும் இந்த ராச்சியத்துக்கு சூடுமணி முடிமாற்றித்
     தழுவும் முத்தி ராச்சியத்துக்குச் சடைமுடி தந்தாயே  (என்)

2.    கொக்கரித்த பேர்எல்லாம் கூடத்தீப் பாய்வாரோ
     பக்கமுள்ள பேர் என்னைக் காப்பாற்ற நினைப்பாரோ
     சிக்குமிந்த வலை நீக்கி தேடும்பர கதிசேர்த்
     தக்கதவம் செய்யென்று நீ தயவு செய்தாயே        (என்)