பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்159


மேவு உற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் - ஓரிடத்திற் பொருந்தி அமர்ந்து
மனத்துள் நெருங்க இவற்றை எண்ணிப் புலம்பினான்.

   (வி - ம்.) முட்கள் பல தைத்தன. அவற்றை எடுக்க முள் வாங்கி என்ற
கருவியும் இல்லை, அதனால் ஓரிடத்தில் அமர்ந்தான். அமர்ந்தபோது பல எண்ணங்கள்
எழுந்தன. அவற்றைத் தானே கூறி வருந்தினான் என்பது. மனிதர்க்குக் கவலை வந்தபோது
எண்ணங்கள் பல வரும். இஃது இயற்கை. அது தோன்ற, 'உள்ததைய' என்றார். ததைய
- நெருங்க.
                                                        (190)

     செறிதருதன் மனப்படியே
          செய்தலொரு வற்கினிதாம்
     அறிவுறுக்குங் குருமொழிகேட்
          டாக்கலஃதி னுஞ்சிறப்பாம்
     முறிதருமே திலர்சொற்கேட்
          டுஞற்றல்முனி துயர்மனையாள்
     வறியவுரை கேட்டுஞற்றல்
          மண்ணிறல்நேர் கெடுதியுறும்.

   (சொ - ள்.) செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவர்க்கு இனிதாம் அறிவு
உறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் முறிதரும் ஏதிலர் சொல்
கேட்டு உஞற்றல் முனிதுயர் மனையாள் வறிய உரைகேட்டு உஞற்றல் மண்இறல் நேர்
கெடுதி உறும் - பொருந்திய தன் மனத்தின்படியே ஒன்றைச் செய்வது
நன்மையாம், ஆசிரியன் கூறியதைக் கேட்டு (அங்ஙனம்) செய்தல் முன்னதினும்
சிறப்புடையதாகும்,கேட்டினைத் தரும் அயலார் சொல்லைக் கேட்டுச் செய்தல்
வெறுத்தற்குரிய துன்பத்தைத் தருவதாகும், மனைவியின் பயனற்ற சொல்லைக்
கேட்டுச் செய்தல் உலக முடிவை யொத்த கேட்டைத் தருவதாம்.

   (வி - ம்.) ஆசிரியன் ஆணைப்படி ஒன்று செய்தால் அச் செயல் மிகவும்
சிறப்படையும்; தன் மனப்படி செய்யினும் நலமாம்; அயலார் சொற்கேட்டுச் செயின்
அது துன்பத்தைத் தரும்; மனைவி சொற்கேட்டுச் செய்யின் அது பெருங் கேடு விளையும்
என்று அறிஞர் கூறுவர். அதனை மறந்து இது செய்தேன் என்று கூறி இரங்கினான்
குசேலன். முறிதரும் ஏதிலர் - மனத்தை வேறுபடுத்தும் அயலார். உஞற்றல் - செய்தல்.
மண் இறல் நேர் கேடு - மண்ணிடிந்து விழுவதுபோன்ற கேடு எனவும் கூறலாம், (191)