பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்205


     தன்வயிற் றுலகம் முழுவதும் அடக்கித்
          தந்துமீட் டளித்திடு பிரானை
     மின்வயிற் பொலிய உயர்ந்தமா ளிகையென்
          வியன்வயிற் றடக்கிமீட் டுமிழும்
     பொன்வயிற் பொலிந்த இந்நகர் வளப்பம்
          புகலுதல் சேடற்கும் அரிதாம்
     முன்வயிற் காணல் இந்திரன் தனக்கும்
          முடிவரி தாலென மதித்தான்.

   (சொ - ள்.) தன் வயிறு உலகம் முழுவதும் அடக்கி தந்து மீட்டு அளித்திடு
பிரானை - தனது வயிற்றில் உலக முழுவதையும் உட்கொண்டு பின் உமிழ்ந்து
காப்பாற்றுகின்ற கடவுளாகிய கண்ணபிரானை, மின்வயின்பொலிய உயர்ந்த மாளிகை
என்வியன் வயிறு அடக்கி மீட்டு உமிழும் பொன்வயின் பொலிந்த இந்நகர் வளப்பம்
- மின்னலைப்போலத் தன்னிடம் விளங்கும் உயர்ந்த மாளிகை என்று சொல்லப்படுகின்ற
வயிற்றில் அடக்கிச் சேர்த்துப் பின் வெளிவிடுகின்ற திருமகள் தன்னிடம் பொருந்திய
இந்தத் துவாரகை நகரத்தின் வளப்பத்தை, புகலுதல் சேடற்கும் அரிது - புகழ்ந்து
பேசுதல் (ஆயிரம் நாப்படைத்த) ஆதி சேடனுக்கும் முடியாதது, முன்வயின் காணல்
இந்திரன் தனக்கும் முடிவு அரிது ஆல் என மதித்தான் - முன்னிடமிருந்து பார்த்தல்
இந்திரனுக்கும் கூடுதற்கு அருமையாகும் என்று மதிக்கலானான்.

   (வி - ம்.) உலக முழுவதையும் தன் ஒருவயிற்றடக்கிப் பின் உமிழுஞ் செயலுடைய
கண்ணனைத் துவாரகை நகர் ஒரு மாளிகையினுள் வைத்து வெளியிற் செல்லுமாறு
செய்கின்றது. அத்துணைப் பெருமையுடையது,                       (254)

     மாந்தளிர் மேனி இலக்குமி மணாளன்
          மலர்தலைப் புவிவகுக் குறுங்கால்
     தேந்தட மலராற் கணிநகர் இம்மா
          திரிகைசெய் யெனத்தெரி விப்பச்
     சேந்ததன் நான்கு கரங்களாற் சிருட்டி
          செயப்படு மாநகர் போலும்
     வேந்தர்கள் நெருங்கும் முரசுகண் படாவிவ்
          வியனக ரெனவுமுட் கொண்டான்.