பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்215


     கத்துவெண் டரங்கக் கடலைமீ கானாற்
          கடந்துமண் கரைபட ரொருவற்
     செத்துமண் டியபல் நெருக்குடை வாயிற்
          செழுங்கடல் தன்னைநல் லருளே
     பொத்துநெஞ் சகநும் மாற்கடந் தடியார்
          பொருள்பெறும் உததியங் கரையென்
     றொத்துமா மறைகள் சொலப்படுங் கண்ண
          னிடையடை தரவுளம் நினைந்தேன்.

   (சொ - ள்.) கத்துவெண் தரங்கம் கடலை மீகானால் கடந்து வெண்கரை படர்
ஒருவன் செத்து - ஒலிக்கின்ற வெள்ளிய அலைகள் பொருந்திய கடலை மாலுமியால்
கடந்து வளப்பமிக்க கரையை அடையும் ஒருவனை ஒப்ப , மண்டிய பல் செருக்கு
உடைவாயில் செழுங்கடல் தன்னை நல் அருளே பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து
- பல நெருக்கத்தைக் கொண்ட வாசலாகிய செழித்த கடலை நல்ல அருளே நிறைந்த
மனமுடைய உங்களால் கடந்து, அடியார் பொருள் பெறும் உத்தி அம்கரை என்று
ஒத்து மாமறைகள் சொலப்படும் கண்ணன் இடை அடைதர உளம் நினைந்தேன் -
அடியவர்கள் வேண்டுகின்ற பொருள்களை அடைதற்குரிய கடலின் அழகிய கரை
என்று பெரிய வேதங்கள் ஒற்றுமைப்பட்டுச் சொல்லப்படுகின்ற கண்ணனை அடைய
உள்ளத்தில் எண்ணினேன்.

   (வி - ம்.) உங்களை மீகாமனாகவும் என்னைக் கடலைக் கடப்பவனாகவும்
அரண்மனையின் மக்கள் நெருக்கத்தைக் கடலாகவும், கண்ணனைக் கடற்கரையாகவும்
நான் கருதுகின்றேன். மக்கள் நெருக்கத்தைக் கடந்து கண்ணனைக் காணும்படியருள்
புரிவீர் என்று வேண்டினான் குசேலன் எனக் கொள்க. செத்து : உவமையுருபு. (268)

     வச்சிரத் தடக்கை வாசவன் ஏவ
          மஞ்சினம் பொழிந்தகல் மழையை
     நச்சும்விண் உரிஞ்சும் போகுயர் குவட்டோர்
          நாகமேந் தித்தடுத் தருளும்
     அச்சுதன் பாற்சென் றேழையேன் வருகை
          அறிவித்தென் றனையவண் சேர்த்தல்
     மெச்சுநுங் கடனென் றுரைத்தனன் எவரும்
          விரும்புறு குசேலமா தவனே.