பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்29


   (வி - ம்.) அவந்தி நகர்ச் சிறப்புப் புலவரானும் சேடனாலும் கூற இயலாது
எனின் என்னாற் கூற இயலுமா ? இயலா தெனினும் என் களிப்புத் தூண்டுதலால் நான்
கூறுகின்றேன் என நூலாசிரியர் கூறினர். தீஞ்சுவை-இனிய சுவை. செந்தமிழ்
ஒவ்வொருவரும் பேசிப் பயின்ற நா என்பது தோன்ற "பழுத்த நா" என்றார். தீஞ்சுவைப்
புலவர் என்றது அத் தமிழின் இனிய சுவையையுணர்ந்த புலவர் எனப் பொருள்தரும்.
சேடன் ஆயிர நாவும் சிறந்த புலமையும் உடையவன், அதனால் சேடனானும் என்றார்.
                                                            (4)

     துறைதுறை தோறுஞ் சங்கஞ்
          சூன்முதிர்ந் துயிர்த்த முத்தம்
     அறைபுனல் வாரி யெக்கர்
          ஆக்கிட வரப்பில் ஏற்றித்
     தறைசமஞ் செய்து வித்தித்
          தண்புனல் மள்ளர் பாய்ச்சக்
     கறையடி மாய்க்குஞ் செந்நெற்
          கதிர்க்குலைச் செறுக்கள் சூழும்.

   (சொ - ள்.) துறைதுறை தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம் -
துறைகள்தோறும் சங்கினங்கள் கருப்பம் முதிர்ந்து ஈன்ற முத்துக்களை ; அறை புனல்
வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி - ஒலிக்கின்ற நீரானது வாரிக்கொண்டுவந்து
மேடாக்க (அவற்றை உழவர்) வரம்புகளில் ஏற்றி. தறை சமம் செய்து வித்தி - நிலத்தினைச்
சமப்படுத்தி (விதையை) விதைத்து; மள்ளர் தண் புனல் பாய்ச்ச - உழவர் குளிர்ந்த
நீரைப் பாய்ச்சுதலால்; கறை அடி மாய்க்கும் செந்நெல் கதிர்குலை செறுக்கள் சூழும்-
உரல்போலும் அடியினை உடைய யானையும் உட்சென்றால் மறையும்படி வளர்ந்து
விளையும் செந்நெற் கதிர்க்குலைகளை உடைய வயல்கள் சூழ்ந்திருக்கும்.

   (வி - ம்.) நீர்த்துறையைத் துறை என்றார். நீர் நின்று வயல்கட்கு வரும் இடம்
துறையாகும். ஒவ்வொரு துறையினின்றும் வாய்க்கால்வழி சென்று நீர் வயல்களிற் பாயும்.
அந் நீர் முத்துக்களை யீர்த்துச்சென்று வயல்களை மேடாக்கும். அம் முத்துக்களை
வரம்பில் எடுத்துக் குவித்து வயலைச் சமஞ்செய்வர் உழவர் என்று அறிக. கறையடி
என்பது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. செம்மை+நெல்=செந்
நெல். இது பண்புத் தொகை. செறு - வயல். கதிர்க்குலை - கதிரைத் தாங்கிய குலை.