பக்கம் எண் :

36 குசேலோபாக்கியானம்

குப் பெண்யானை எனப் பொருள் கூறப்பட்டது. இசைபாடும் வண்டினங்கட்குத்
தேன்பொழிவதாலும் திருமகள் போன்ற மாதர் பயில்வதாலும் பூஞ்சோலை மிக்க
வனப்புடையதாய் விளங்குகிறது என்பது கருத்து. விளையாடவும், மலர் கொய்யவும்
மாதர் அடிக்கடி செல்வதாற் "பயில்" என்றார். பயிலுதல் - பல காலும் செல்லுதல்.
                                                                 (14)

               எழுசீரடியாசிரிய விருத்தம்
     வெண்மணி கொழிக்குங் கடல்நெடு நகர்மேல்
          வெகுண்டுமுற் றியதென ஒளிருந்
     தண்மதுப் பிலிற்றுந் தாமரை யாதி
          ததைந்ததாழ் கிடங்குமற் றதனை
     அண்மையில் நகர்கண் டஞ்சியுட் செல்லா
          தாற்றிய பெருந்தடை கடுக்க
     ஒண்மையில் ஆதி யவனர்செய் பொறிகள்
          உறுபெரு மதிலுஞ்சூழ்ந் தனவால்.

   (சொ - ள்.) வெள் மணி கொழிக்கும் கடல் நெடுநகர் மேல் வெகுண்டு முற்றியதென
- வெண்ணிறமான முத்துக்களைக் கொழிக்கின்ற கடலானது நெடிய நகரின் மீது சினந்து
வளைந்தாற் போல ; ஒளிரும் தண்மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும்
- விளங்குகின்ற குளிர்ந்த தேனைத் துளிக்கும் தாமரை முதலானவைகள் நெருங்கி
நிறைந்துள்ள ஆழமாகிய அகழியும் ; அதனை அண்மையில் நகர் கண்டு அஞ்சி உள்
செல்லாது ஆற்றிய பெருந்தடை கடுக்க-அவ்வகழி சூழ்ந்திருக்குமதனைப் பொருந்துவ
தென்று கொள்ளாத நகரமாந்தர் அஞ்சித் தக்கவாறறிந்து நகரினுள் புகா வகையால்
செய்து வைத்துள்ள பெருந்தடையே போல ; ஒள் மயில் ஆதியவனர் செய் பொறிகள்
உறு பெருமதிலும் சூழ்ந்தன - அழகிய மயில் முதலிய உருவங்களா கயவன தேயத்துக்
கைவல் வினைஞர் செய்தமைத்த எந்திரங்கள் பொருந்திய பெரிய மதிலும் வளைந்துள்ளன.

   (வி - ம்.) அந் நகரைச் சூழ்ந்த அகழி கடல்சினந்து வந்து நகரை முற்றுகையிட்டது
போலத் தோன்றியது - அம் முற்றுகையைத் தடுப்பதற்கு நகரமக்கள் அமைத்த தடை
போலக் கோட்டை மதில் சூழ்ந்திருந்தன. மதில்கள் பல ஆதலாற் சூழ்ந்தன எனப்
பன்மையாற் கூறினர். யவனர் - சிற்பம், சித்திரம் அமைத்தலில் வல்லவர் எனத்
தோன்றுகிறது. யவன தேயம் என்பது கிரேக்க நாடு என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
                                                                  (15)