பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்513


அதனையேற்று வாழின் அறிவுடையவனாவேனோ? தவமும் அழிந்து போம்,
அறிஞர் என்னைநோக்கி நகைப்பர். ஆதலால் இச்செல்வம் எனக்கு வேண்டுவதின்று
எனக் குறிப்புக் காட்டினன்.                                    (728)

     உடலழுக் ககற்றத் தூநீ
          ருற்றவ னள்ளல் வாரி
     இடனுறப் பூசிக் கொள்வான்
          கொல்லிரு காலும் யாத்த
     தொடர்செய்பொன் நிகளஞ் சீக்கத்
          துணிந்தவ னிரும்பாற் செய்யப்
     படுபெரு நிகளம் பூண்டு
          கொள்வனோ பாரி டத்து.

   (சொ - ள்.) உடல் அழுக்கு அகற்ற தூநீர் உற்றவன் அள்ளல் வாரி இடன் உற
பூசிக் கொள்வான் கொல் - உடம்பின் கணுளதாகிய அழுக்கினைப் போக்கிக் கொள்ளும்
பொருட்டு நல்ல நீரையடைந்தவன், (அது செய்யாது) சேற்றினையள்ளி
உடம்பிடமெங்கணும் பூசிக் கொள்வானோ ; இரு காலும் யாத்த தொடர் செய் பொன்
நிகளம் சீக்க துணிந்தவன் - இரண்டு கால்களையும் பிணித்துள்ள, தொடராகச் செய்யப்பட்ட
பொன் விலங்கை அறுத்துக்கொள்ளத் துணிந்தவன் ; இரும்பால் செய்யப்படு பெரு
நிகளம் பூண்டு கொள்வனோ பார் இடத்து - இரும்பினாற் செய்யப்பட்ட பெரிய
விலங்கைப் பூண்டு கொள்வானோ உலகத்திடத்து.

   (வி - ம்.) தூ - தூய்மை (சுத்தம்). அள்ளல் - சேறு. நிகளம் - விலங்கு. சீக்க -
நீக்க. உடல் அழுக்குப் போக்க நீரின்பாற் சென்றவன் சேற்றினை யள்ளி உடலிற்
பூசுவனோ ? காலிற் பொன்விலங்கினைக் கழற்றி இரும்பு விலங்கு பூட்டிக்
கொள்வானோ ? ஒருவனும் செய்யான். நானும் நின்றிருவடிப்பேறாகிய செல்வத்தை
விடுத்து இதனை வேண்டேன் என்ற கருத்தினை வெளிப்படுத்தினன் எனக் கொள்க.
(729)

ஆதலா லைய விந்த அநித்தியச் செல்வம் வேண்டேன்
மேதக முன்னி ருந்த மிடியதே யின்னும் வேண்டுங்
காதலி னடியார் வேண்டுங் காரிய மளித்துக் காக்கும்
நீதயை புரிந்தென் னுள்ளக் கருத்தினை நிரப்பு கென்றான்.

   (சொ - ள்.) ஆதலால் ஐய இந்த அநித்தியம் செல்வம் வேண்டேன் மேதக முன்
இருந்த மிடி அதே இன்னும் வேண்டும் -