இதுகாறும் கிளியின் பெருமை கூறி அதனை முன்னிலைப்படுத்தினாள் தலைவியெனக் காண்க. 65, 66 : ஒரு நாரில் ஏற்றும் .........சொல்லக்கேள (சொ - ள்.) நான் ஒப்பற்ற அன்பினால் அடியார்கள் தம்மிடத்திற்கு ஏற்றுகின்ற திருமால் ஆகிய தெய்வத்தைக் காணச் சென்று ஊரார் எல்லாரும் தூற்றும்படி பழிச்சொல்லைக் கொண்ட வரலாற்றை நான் சொல்ல நீ கேட்பாய் ; (வி - ம்.) ஒரு நாரில் கட்டிய சிறந்த பூமாலையைப் பெற வேண்டுமென்று சென்று ஊருக்குள் எல்லாவிடங்களிலும் தூவிக் கிடந்த மலரைப் பெற்றுவந்த கதை என வெளிப் பொருள் ஒன்று தோன்றுவது காண்க. வெளிப்பொருள் ஒன்று தோன்றுமாறு கவிகளை அமைப்பதே இந்நூலாசிரியர் இயற்கை என்பதைப் பலவிடங்களில் நுனித்துணர்க. 66-71 : தோற்றி அரிவடிவம் ......,.......நீங்காத பெற்றியான் (சொ - ள்.) முன் சிங்கத்தின் உருவமும், பின் மனித உருவமும் ஆகத் தோன்றும்படி பெரியதொரு தூணிற் பிறந்து, கரிய மலை போன்ற அகன்ற தோளுடைய இரணியன் என்ற அசுரனது வலிய உடம்பைக் கூட்டிப் பிடித்துத் தரையிற்றேய்த்து, அவன் தந்த சேனைகளையுங் கொன்று, உருத்திர (சிவன்)னாகி அவன் செய்யுந் தொழிலாகிய அழித்தற்றொழிலைச் செய்து, அவனுடன் பகையாகி, நிலங்காக்குந் தொழிலையும் பூண்டு, உண்ணுகின்ற பூமி முழுவதையும் உண்டு, வெண்ணெயுடன் பூதகி என்னும் பேய் கொடுத்த பாலும் போதாமல், பின்னும் பசித்துப் பிரமனைப் பெற்று, வெளியெங்கும் நிறைந்துநின்று, மருதமரத்தைச் சாய்க்கும்படி உடலுடன் கட்டப்பட்டு நடந்து தவழ்ந்து விளையாடும் பிள்ளைத் தன்மை நீங்காத இயல்புடையவன். (வி - ம்.) அரி - சிங்கம் ; திருமாலுக்கும் பெயர். பின் + நரன் = பின் + அரன் = பின்னரன் ; நரன் - மனிதன். அரன் - சிவன். அரி வடிவுமாகி அரன் வடிவுமாகி என்று மற்றொரு பொருள் காண்க. பிறந்து, காயங்கூட்டி அரைத்திடுஞ் சேனை |