|
|
அஃதாவது, ஒரு கூற்றுப் பகற்குறி. ஒரு கூற்றுப் பகற்குறி யாதெனில், தலைவன் மற்றைநாள் தன் வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்து வந்து நிற்க, தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக் கூறத் தலைவன் வருந்திப் போதலாதலான் பகற்குறியாகாது, ஒருசார் பகற்குறி யாயிற்று.
|
| 1`இரங்கல் வன்புறை இற்செறிப் புணர்த்தலென் றொருங்கு மூவகைத் தொருசார் பகற்குறி`
|
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண் டிரங்கல்: |
| ஆழ்ந்தார் தமக்கரு ளாதவர் போலிவ் வளவிலன்பு சூழ்ந்தார் செலத்தொங்கல் சூழ்குழ லாய்சொற் பொருள்படைத்து வாழ்ந்தார் புகழ்தஞ்சை வாணனைப் பேணலவர் மானவெய்யோன் வீழ்ந்தார் கலிக்கரந் தான்பனி மாலை வெளிப்படவே.
|
(இ-ள்.) மாலைசூழ்ந்த குழலினையுடையாய், மிடியில் மூழ்கினர்க்குக் கொடாதவர்போல் இந்த மட்டில் அன்பு சூழ்ந்தார் பிரிந்துபோகச், சொற்பொருள் படைத்து வாழும் புலவராற் புகழப்பட்ட தஞ்சைவாணனை விரும்பாதவர் கடலில் விழுந்து மறைதல்போல, கதிரோன் பனியொடு கூடிய மாலைக் காலம் வெளிப்படக் கடலில் வீழ்ந்து மறைந்தான்; யான் என் செய்வேன் என்றவாறு.
|
ஆழ்ந்தார் - மிடியிலாழ்ந்தார்; எனவே, ஆழ்ந்தார் தானாகவும் கொடாதவர் தலைவராகவும் கூறியவாறாயிற்று. சூழ்ந்தார் - பொருந்தினார். பேணலர் - விரும்பாதவர். ஆர்கலி - கடல். கரத்தல் - மறைதல். பனிமாலை - அந்தியம்போது. `வெளிப்பட்டதே` என்று பாடமோதுவாருமுளர்.
|
இக்கிளவி, பாங்கியை நோக்கிக் கூறுதலும், மாலையம்பொழுதை நோக்கிக் கூறுதலும், தன்னுட் கூறுதலும் என மூவகைப்படும். அவற்றுள் இச்செய்யுள் பாங்கியை நோக்கிக் கூறியது.
|
| 2`புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை`
|
என்பது மாலையுடன் கூறியது.
|
|
1. அகப்பொருள் விளக்கம். களவியல் 36. |
2. குறள். பொழுதுகண்டிரங்கல் - 2. |