பக்கம் எண் :

கட
171
14. இரவுக்குறி இடையீடு

 
அஃதாவது, எட்டாநாள் இரவுக்குறிக்கண் வந்த தலைமகன் அல்ல  குறிப்படுதலால்
இடையீடு பட்டுப்போதல்.


1`அல்லகுறி வருந்தொழிற் கருமை யென்றாங்
கெல்லிக்குறி யிடையீ டிருவகைத் தாகம்`


என்னுஞ் சூத்திரவிதியான் எல்லிக்கறி யிடையீடு இருவகைப்படும்.
அல்லகுறி  என்பது,   தலைமகனால்   நிகழ்த்தப்படுவனவாகிய   புள்ளெழுப்பல்
முதலியன. எனவே,  நீரிற்  கல்லெறிதல், இளநீர் வீழ்த்தல் முதலியனவுங் கொள்க. வருந்தொழிற் கருமை என்பது, தலைமகன் வருகின்ற தொழிற்கருமை.

அல்லகுறி:
இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்:

கயல்வென்ற உண்கண்ணி காரண மேதுகொல் கைதையங்கான்
அயனின்ற புன்னையி னன்னமெ லாமட லாழியங்கைச்
சயமங்கை தன்பெரு மான்தஞ்சை வாணன் தரியலர்போல்
துயரம் பெருகி இராவொரு போதுந் துயின்றிலவே.

(இ-ள்.) கயலை வென்று மையுண்ட கண்ணாய்! போர் புரியுஞ் சக்கரத்தைத் தரித்த
சயமங்கைக்கு இறைவனாகிய  தஞ்சைவாணன்  தரியலற்போற்  கைதையங்காட்டின்
அயலிலிருக்கும் புன்னையின்  அன்னமெல்லாந் துயரம் பெருகி,  இவ்விரவின்கண்
ஒரு நாழிகையுந் துயன்றில, காரணம் யாதோ, தெரிந்திலன் என்றவாறு.

கைதை - தாழை. புன்னை - புன்னாகம். அடல் - போர். சயமங்கை - வெற்றிமாது.
போது - ஈண்டு நாழிகை. உம்மை சிறப்பு.
(190)    
தான் குறிமருண்டமை தலைவியவட் குரைத்தல்:
தான்  குறிமருண்டமை  தலைவி  அவட்கு  உரைத்தல்  என்பது,  தலைவி தான்
அல்லகுறியிடத்து நின்று தலைவனைக்  காணாமையால்,  மீண்டும் விடியற்காலத்து
வந்து பாங்கியுடன் கூறல்.

அல்லகுறிப்படுங்  காரணம்  என்னையெனின்,   தலைவன்  முன்னை  நாளிரவில்
புன்னைமரத்தின்கீழ்   நின்று   அதன்   மேலிருக்கும்   மயில்களை   யெழுப்ப,
அக்குறியிடத்து வந்து நீங்கிய தலைவி மற்ற நாள் குறிக்கு


1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 43.