காட்சி என்பது தலைமகன் தலைமகளைக் காண்டல். தலைமகன் என்றும் தலைமகள் என்றும் கூறிய இவர் யாரெனின், இல்லது இனியது நல்லது என்று புலவரான் நாட்டிக் கூறப்பட்ட மூன்றனுள், இல்லதாகிய புனைந்துரையால் தோன்றினோர் என்க. இவரது இலக்கணம் யாதோவெனின், பிணி மூப்பு இறப்புக்களின்றி, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலியவற்றான் தம்முள் ஒப்புமையராய்ப் பொருவிறந்தார் என்ப. என்னை?
1`பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே`
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரவிதியான் இப் பத்து வகையும் ஒத்திருப்பது இலக்கணம். இவற்றுள் ஆண்டு என்பது இருவர்க்கும் களவிற் காணும்போதில் எத்தனை யாண்டு கூறவேண்டுமெனின், பதினைந்தாண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகனும், பதினொராண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகளும் களவொழுக்கத்தில் நிகழ்வரென்று2 கூறுக. என்னை,