பக்கம் எண் :

7. இடந்தலைப்பாடு
63

 

அஃதாவது,    இயற்கைப்  புணர்ச்சி  புணர்ந்த   தலைவன்   மற்றைத்தினத்தில்
அவ்விடத்தே வந்து தலைமகளைக் கூடுதல்.

 1`தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென்
றிவ்வோர் மூவகைத் திடந்தலைப் பாடே`

என்னுஞ் சூத்திரவிதியால் இடந்தலைப்பாடு மூவகைப்படும்.

தந்த தெய்வந் தருமெனச் சேறல்:
 மன்றும் பொதியிலு மாமயில் சேர்தஞ்சை வாணன்வெற்பில்
துன்றும் புயலிளஞ் சோலையின் வாய்ச்சுற வுக்குழையைச்
சென்றுந்து சேல்விழி மின்னைமுன் நாள்தந்த தெய்வநமக்
கின்றுந் தருநெஞ்ச மேயெழு வாழியிங் கென்னுடனே.


(இ-ள்.)   நெஞ்சமே,   மன்றினிடத்தும்   பொதியிலிடத்தும் பெரிய மயில் சேருந்
தஞ்சைவாணன்   வெற்பிடத்து, புயல்  நெருங்கிய இளஞ்சோலையினிடத்து மகரக்
குழையைப்    போய்த்   தள்ளுங்   கெண்டைபோலும் விழியையுடைய  மின்னை
நெருநல்  தந்த  விதியானது  நமக்கு இன்றுஞ்சென்றால் தருமாதலான்,  என்னுடன்
ஒருப்பட்டு எழுவாயாக என்றவாறு.

மன்று - ஊர்க்கு   நடுவாய்   எல்லாரும்  இருக்கத்  திண்ணை  போட்டிருக்கும்
மரத்தடி. பொதியில் - அம்பலமாம். எல்லாருங்  கூடியிருக்கும்  கூடம்.  என்னை, திருமுருகாற்றுப்படையுள்,

 2`மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்`

என்பதனாற் காண்க.

மாமயில் - ஊரில்   வளர்ந்த   பெரிய  மயில். `புயல் துன்றும்`  என  இயையும்.
சுறவுக்குழை - மகரக்குழை.   உந்தல் - தள்ளுதல்.   சேல்விழி: உவமைத்தொகை.
மின்: ஆகுபெயர். தெய்வம் - விதி. வாழி: முன்னிலையசை.

(34)    


1. அகப். விளக்கம், களவியல். சூ - 18.
2. திருமுரு. 226.