பக்கம் எண் :

அவதாரம்109


     (பொ-நி.) புகழ்   நிலவில்,  கடல்கள்  அடைய  அரிதுயிலும்படி
விளங்கின, (எ-று.)

     
(வி-ம்.)  அரி - திருமால். விளங்கின -பாற்கடல்போல்  விளங்கின
என்க. கவின் -அழகு.  கவினின் விளங்கின என்க.  ஒரு கரு  - ஒப்பற்ற
கருநிறமுள்ள. கலி - துன்பம்.  கழுவி உலவு;  கழுவியதனால் உலவுகின்ற
என்க. புகழ் நிலவு: புகழாகிய நிலவு.
                                                       (38)

இதுவும் அது

270.நிழலில டைந்தன திசைகள்
      நெறியில டைந்தன மறைகள்
கழலில டைந்தனர் உதியர்
     கடலில டைந்தனர் செழியர்.

     (பொ-நி.)  திசைகள்  நிழலில்  அடைந்தன;  மறைகள்  நெறியில்
அடைந்தன; உதியர்    கழலில்   அடைந்தனர்;   செழியர்  கடலில்
அடைந்தனர், (எ-று.)

     
(வி-ம்.)  நிழல் -  வெண்கொற்றக்குடையின்  நிழல்,  திசைகள் -
எல்லாப் பக்கங்களும். கழல்-பாதம். உதியர்-சேரர். கடலில் அடைந்தனர்-
கடல்  தீவுள் சென்று மறைந்து வாழ்ந்தனர். செழியர்-பாண்டியர்.
                                                      (39)

இதுவும் அது

271.கருணையொ டுந்தன துபய
      கரமுத வும் பொருள் மழையின்
அரணிய மந்திர வனல்கள்
     அவையுத வும்பெரு மழையே.

     (பொ-நி.)    தனது   உபயகரம்   உதவும்  பொருள்  மழையின்,
மந்திர அனல்கள் பெருமழை உதவும், (எ-று.)

     
(வி-ம்.)   கருணையொடு  -  அருளோடு,  இரக்கமுடன்.  தனது:
குலோத்துங்கனது.   உபயம் - இரண்டு.   கரம் - கை. பொருள் மழை-
பொருளாகிய மழை. மழையின் - மழையைப்  போல, அரணி - தீக்கடை
கோல்.  அரணிய  அனல், மந்திர  அனல்  எனத்  தனித்தனி இயைக்க.
அரணிய  மந்திர  அனல்  - வேள்வித்தீ. வேள்வியால்  மழை  வளம்
பெருகுமென்பது துணிவு.
                                                       (40)