பக்கம் எண் :

112கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)    கலையினொடும்,   கவியினொடும்    இசையினொடும்,
முலையினொடும், நீதி முறையினொடும்,  மறையினொடும்  பொழுதுபோக்கி,
(எ-று.)

     (வி-ம்.)  கலை - பல்கலை   நூல்கள்.  கலைவாணர் - கலைவல்ல
புலவர்கள். கவி-இனிய செய்யுட்கள். இசை-பண். முறை-நீதி.
                                                        (46)

     குலோத்துங்கன் பரிவேட்டை யாடப் புறப்பட நினைந்தது

278.காலாற்றண் டலையுழக்கும் காவிரியின்
      கரைமருங்கு வேட்டை யாடிப்
பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை
     ஆடுதற்குப் பயண மென்றே,

     (பொ-நி.)  காவிரியின்  கரைமருங்கு  வேட்டையாடி,  பரிவேட்டை
ஆடுதற்குப் பயணம் என்று, (எ-று.)

     (வி-ம்.) கால்-வாய்க்கால். தண்டலை-சோலை. உழக்குதல்-கலக்குதல். பயணம்-புறப்படுதல்.   கரைமருங்கு - கரைப்பக்கம்.  பரிவேட்டை-குதிரை
மேற்கொண்டு வேட்டையாடல்.                               (47)

 நால்வகைச் சேனைகளும் திரண்டமை

279.முரசறைகென் றருளுதலும் முழுதுலகும்
      ஒருநகருட் புகுந்த தொப்பத்
திரைசெய்கடல் ஒலியடங்கத் திசைநான்கின்
     படைநான்கும் திரண்ட ஆங்கே.

     (பொ-நி.)   அருளுதலும்,   படைநான்கும்,   கடல்  ஒலி அடங்க,
முழுதுலகும் நகருட் புகுந்ததொப்ப, ஆங்கே திரண்ட, (எ-று.)

     (வி-ம்.) முரசு -பேரிகை. திரை-அலை. கடல் ஒலி அடங்கச் சேனை
ஒலி மிகுந்ததென்க.  நான்கின் - நான்கினின்றும்.  படை நான்கு -யானை
குதிரை   தேர் காலாள்  என்னும்  நால்வகைப்படை.  அறைக - அடிக்க. 
திரண்ட-ஒன்று கூடின.                                      (48)