பக்கம் எண் :

அவதாரம்117


     
பெண்கள் தேர்மீது வந்ததும் புழுதி எழுந்ததும்

290.தேரின் மீதுவரு தேர்களும நேகம் எனவே
      செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
பாரின் மீதுமொரு பாருளது போலும் எனவே
     படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே.

     (பொ-நி.)  நிதம்பநிரை  தேரின்  வர,  படல  தூளியும் இடையின்
மூடிவர; (எ-று.)

     (வி-ம்.) மேகலை-மேகலை என்னும்  அணி;  இது,  முப்பத்திரண்டு
வடத்தினாற் செய்தது; நிதம்பம்-இடையைச் சார, முன் பக்கத்துள்ள  பரந்த
இடப்பகுதி. நிரை - வரிசை. பார் - உலகம். படலம்-கூட்டம். தூளி-புழுதி.
இடை-வானிடை.                                          (59)

 சேனைகளின் செலவு

291.யானை மேலிளம் பிடியின் மேனிரைத்
      திடைய றாதுபோம் எறிக டற்கிணை
சேனை மாகடற் கபய னிம்முறைச்
     சேது பந்தனம் செய்த தொக்கவே.

     (பொ-நி.)  நிரைத்து,  போம்,  கடற்கு  இணை  (யானை) சேனை
அபயன் இம்முறை கடற்கு சேதுபந்தனம் செய்தது ஒக்க; (எ-று.)

     (வி-ம்.)நிரைத்து - வரிசையாக,  எறி - அலை எறிகின்ற.  இணை
சேனை - ஒத்த சேனை. இம்முறை - இராமனாகப் பிறந்த  பொழுதிலன்றி இப்பிறவியிலே, ஒக்க-ஒப்பாக  இருக்க.  முழுச்சேனையும்  கடல்போலவும்,   யானைமேலும் பிடிமேலும்  செல்வார்  சேதுபந்தனம்  செய்வார்போலவும் காட்சியளித்தனரென்க.
                                                       (60)

சிவிகையும் குடையும் சென்ற இயல்பு

292.நீல மாமணிச் சிவிகை வெள்ளமும்
      நித்தி லக்குலக் கவிகை வெள்ளமும்
காலி னான்வரும் யமுனை வெள்ளமும்
     கங்கை வெள்ளமும் காண்மின் என்னவே.